Saturday, September 27, 2008

உதவுங்கள் நபி பெருமான்

 ஆண்டவர்க்கு அஞ்சுங்கள் என்ற உண்மை
  அருளி நின்றார் நபி பெருமான் மீண்டும் மீண்டும்
  வேண்டி நிற்கும் ஏழையர்க்கு உதவல் தன்னை
  விரும்பி அன்பாய்ச் செய்க என்றும் விளக்கம் தந்தார்
  தூண்டி அதை நோன்போடு செய்வீர் என்றால்
  தூய்மையுறும் உம் வாழ்வு இறைவன் உம்மை
  வேண்டு மட்டும் வாழ்த்தி நன்கு வாழ வைப்பான்
  விரைவாக உதவுங்கள் ஏழையர்க்கு

நபி பெருமான் சொன்ன பதில்

  இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
  இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
  வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
  விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
  இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
  எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
  இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
  இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்

  (வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
  வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
  138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12

Thursday, September 25, 2008

வாரீர் வாரீர்

 வாருங்கள் நண்பர்களே அன்பு செய்வோம்
  வழியின்றி இருப்போர்க்கு வழிகள் செய்வோம்
  சேருங்கள் நல்லவரை ஒன்றாய் இங்கு
  செய்வதெல்லாம் எழையர்க்கு நன்மையாக
  கூறுங்கள் நல்லனவே என்றும் எங்கும்
  கொள்கை இங்கு ஏழையரைக் காத்தல் என்று
  மாறுபாடு கொண்டார்கள் தன்னை மாற்றி
  மனிதரென வாழ வைப்போம் வாரீர் வாரீர்

துணையாய்க் கொண்டேன்

 நல்லவர் போல் நடிக்கின்றார் அய்யா நீங்கள்
  நலம் தானா என்றெல்லாம் வினவுகின்றார்
  சொல்லுகின்ற சொல்லெல்லாம் சொல்லும் போதே
  சூது மனம் கொண்டேதான் சொல்லுகின்றார்
  வெல்லுதற்கு இயலாராய் உள்ளம் எல்லாம்
  வினை எண்ணம் கொண்டாராய் மேலும்மேலும்
  கொல்லுதற்கே முயலுகின்றார் என்ன செய்ய
  குறளரசர் வழி ஒன்றே துணையாய்க் கொண்டேன்

அலைகின்றாரே

  வாழ்பவரைக் கண்டு மனம் புண்ணாகாமல்
  வழியின்றி இருப்பார்க்கு உதவு என்று
  ஆழ் மனத்தில் ஒரு விதையை எந்தன் அன்னை
  அன்றைக்கே விதைத்திட்டார் அதன் வழியே
  வாழ்ந்திடவே முயன்று நான் வெற்றி கண்டால்
  வசை பாடி நிற்கின்றார் அன்பர் சில்லோர்
  சூழ்ந்து நிற்கும் அழுக்காற்றுச் சுமையால் அந்தோ
  சுகக் கேடு கொண்டவரும் அலைகின்றாரே

அதுவே போதும்

  வள்ளுவர்க்குச் சிலை வேண்டாம் நிறுத்திக் கொள்வோம்
  வஞ்சகத்தைப் பொய்மையினை ஒழித்தால் போதும்
  தெள்ளு தமிழ் நாடென்று ஆட வேண்டாம்
  தீங்கின்றி நன்மைகளைச் செய்தால் போதும்
  அள்ளி விடும் சிலம்பென்று அலற வேண்டாம்
  அன்னையரை அழுகையின்றி காத்தால் போதும்
  உள்ளு தொறும் தவறு செய்ய நாணம் கொண்டு
  ஊர் போற்ற வாழ்ந்து விட்டால் அதுவே போதும்

Wednesday, September 24, 2008

புகைப் படங்கள் தமிழ்ச்செல்வன் ஈரோடு

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7 2008

தோழர் ஸ்டாலின் தம்பி நக்கீரன் கோபால்

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7 2008

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7 2008

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7 2008

ஈரோடு புத்தகத் திருவிழாஜாகஸ்ட் 7 2008

Tuesday, September 23, 2008

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7 2008

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7 2008

ஈரோடு புத்தகத் திருவிழா 7 ஆகஸ்ட் 2008

ஈரோடு புத்தகத் திருவிழா 7 ஆகஸ்ட் 2008

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 7ம் தேதி

ஈரோடு புத்தகத் திருவிழா பருந்துப் பார்வை

Monday, September 22, 2008

செய்யப் பாரும்

 அடுத்தவரைக் குறை சொல்ல என்று சொன்னால்
  ஆடுகின்றீர் ஒடுகின்றிர் பாடுகின்றீர்
  தொடுத்தவரைக் குறை சொல்லி பொறாமைத் தீயால்
  துள்ளுகின்றீர் வெவ்வேறு வடிவம் காட்டி
  படித்தவரே இதையெல்லாம் செய்து நின்றீர்
  பாவிகளே படித்து என்ன பயன் தான் கண்டீர்
  அடுத்தவரைக் குறை சொல்லல் விட்டு விட்டு
  அய்யா நீர் ஏதேனும் செய்யப் பாரும்

வாழ்கின்றாரே

 நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும்
  நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை
  படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி
  படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார் காண்
  துடிக்கின்ற கன்னங்கள் விழியிரண்டு
  துள்ளி வரும் நடையழகும் மென்னடையும்
  வடித்திட்ட வளர் தமிழான் சிவாஜி என்னும்
  வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே

Sunday, September 21, 2008

மாக்கலைஞன் சிவாஜி

 ராஜாமணியென்னும் அன்னை பெற்ற ராஜாமணி அவனே வாய் வழியாய்ப்
  பேசா மொழியெல்லாம் விழிகள் தன்னால் பேசிப் புரிய வைக்கும் பேரருளே
  ரோஜா மலர் போல மென்மையான நோயில்லா மனம் கொண்ட நற் கலைஞன்
  கூசாமல் அவன் தன்னை நகலெடுக்கக் கோடிப் பேர் முயன்றிங்கு தோற்றே போனார்
  கூஜாவைத் தூக்கியேனும் அவனின் மேன்மை கொண்டு விட வேண்டும் என்று பலர் முயன்றார்
  ராஜாவாய் அவன் மட்டும் இன்று வரை நற்றமிழர் உள்ளத்தில் வாழ்கின்றானே
  ஆ ஜா என்று இந்தியிலே நடிப்பாரெல்லாம் அவன் நடித்த வேடம் போட அச்சம் கொண்டார்
  தேசு புகழ் சிவாஜியெனும் மாக்கலைஞன் தெய்வம் தந்த மாக்கொடையே உணர்ந்தோம் வென்றோம்

Friday, September 19, 2008

அவ்வை நன்னெறி

நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு
  நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு
  கொல்லுகின்ற துன்பம் ஒன்று வந்து விட்டால்
  குலைந்தழுது ஒழிவாரோ என்றும் மாட்டார்
  அல்லவர்தான் அழுது நிற்பார் அரற்றி நிற்பார்
  அறிவுடைய நல்லவர்கள் தெளிந்தே நிற்பர்
  புல்லர்களோ மண்குடம் போல் உடைந்தால் போச்சு
  பொன்குடமே நல்லவர்கள் உடைந்தும் பொன்னே


  செய்யுள்

  சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
  றல்லாதார் கெட்டாலங்கென்னாகும் - சீரிய 
  பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்
  மண்ணின் குடமுடைந்தக்கால்

தேரா மன்னா சிலப்பதிகாரம்

 

 

 தேரா மன்னா என்ற தீத் தமிழின் வார்த்தைக்குள்
  தெளிவான பல கேள்வி வைக்கின்றாள் கண்ணகியும்
  ஆராய்ந்து பார்க்கையிலே அத்தனையும் வியப்பாகும்
  அறிவென்றல் பெண்களுக்கே முதல் உரிமை என்றாகும்
  நீர் வார் கண்ணாய் என்றழைத்த நெடுஞ்செழியன்
  நிலை உணர வைத்தாளே கண்ணகியாம் பெருமாட்டி
  சீரார் தமிழினத்தீர் செப்புகின்றேன் அவள் மொழியை
  செவி மடுப்பீர் சிலம்பதனின் சிறப்பையே சிறப்பாக


  சிலம்பாலே ஒருவனையே சிரமெடுக்கச் சொன்னவனே
  சிலம்போடு வந்து நின்றேன் கண்களிலே நீரோடு
  குல மானம் காக்க என் கோவலனின் பேர் காக்க
  உளம் திரிந்து தீர்ப்பளித்தாய் உணரவில்லை நீயதனை
  சிலம்போடு நிற்கின்றேன் என்றவுடன் யாரென்று
  குழம்பாமல் இருந்திருந்தாலதீர்ப்பளித்த மன்னவனே
  மதியில்லாய் தேராமல் மாபெரிய தவறு செய்தாய்


 தலையோடு உடல் சேர்த்தேன் தழுவினேன் என்னவனை
  தங்குக என்றுத்தரவில் தனியளாய் நின்றேன் நான்
 உலகனைத்தும் காக்கின்ற உத்தமனாம் ஞாயிறையே
  தலைமகள் நான் வினவி நின்றேன் தங்க மகன் தனைக் குறித்து
 நிலையுணர்ந்தான் சொன்னான் நின் தவறை அதனாலே
  எரியுண்ணும் உன் ஊரை என்றவனும் தீர்ப்பளித்தான்
 உனக்கிதனை உன் ஒற்றர் உரைத்திருந்தால் நீயென்னை
  விளக்கங்கள் கேட்பாயோ வீணாகி அறிவிழந்தாய்


 மதுரையாம் பதியினிலே மக்கள் எனைக் கண்டவுடன்
  மாபெரிய தெய்வம் என்று எனை வணங்கி நின்றார்கள்
 தெருத் தெருவாய் அலைந்தேன் உன் தீய செயல் சொன்னேன் நான்
  தேடிஅறி ஒற்றர்களை நீ மட்டும் கொண்டிருந்தால்
 வருத்தமதை உன் மக்கள் வாயிழந்து நின்றதனை
  வந்தே உன்னிடத்தில் அவர் வகையாக் உரைத்திருப்பர்
 பொருத்தமின்றி யாரென்று என்னிடத்தில் கேட்டாயே
  பொறுமையின்றித் தீர்ப்பளித்த் புத்தியில்லா மன்னவனே


 தேரா மன்னா என்ற ஒரு வார்த்தை தனக்குள்ளே
  தெயவ மகள் இத்தனையும் வைத்துள்ளாள் என்பதனை
 நானே உரை செய்ய நற்றமிழார் எனை வணங்கி
  தேனாம் தமிழன்னை உந்தனொடு இருப்பதனால்
 தேடி உரை செய்கின்றாய் என்றெனையே பாராட்ட
  நானோ இவையெல்லாம் நாயகனின் உரை என்றேன்
 நாடி நின்ற தமிழ்த் தாயின் நலமான அன்பென்றேன்
  வானோனும் தமிழ்த் தாயும் வழங்குவதால் வாழ்கின்றேன்

Tuesday, September 16, 2008

சொல்க அய்யா

 பாசமதைப் புரியார் மேல் பாசம் வைத்து
  படுகின்ற பாடதனைச் சொல்லுதற்கு
  ஆசையதை அதிகரிக்கும் தமிழாம் அன்னை
  அவர் கூட உதவவில்லை உணர்கின்றேன் நான்
  நேசமதை உணராதார் நெஞ்சம் தன்னில்
  நினைவெதுவும் இல்லாமல் அன்பைக் கொன்று
  வாசமில்லா வாழ்க்கையினை வாழுகின்றார்
  வாழ்வதாகப் பெருமை வேறு கொள்ளுகின்றார்


  கூசாமல் பிறர் மனத்தைக் கொல்லுகின்றார்
  கொல்வதையேக் கலையாக்கிச் சொல்லுகின்றார்
  பேசாமல் கொடுமை வழி பேணுகின்றார்
  பெரியவர் போல் நடிக்கின்றார் நாணமின்றி
  ஈசா எம்பரம் பொருளே இவரை இங்கு
  எதற்காக படைத்திட்டாய் சொல்க தேவே
  காசாலும் பொருளாலும் பிறரை இங்கு
  கடிந்தொழிக்க வேண்டுமென்றோ சொல்க அய்யா

குறட் கருத்து அழுக்காறாமை 17ம் அதிகாரம்

 பாவங்கள் செய்தவர் தான் பாவியாவார்
  பாவம் ஒன்றே மிகச் சிறந்த பாவியாகும்
  கேவலத்தைச் சொல்லுகின்றார் நமது தந்தை
  கேட்கையிலே அவர் பெருமை நாம் உணர்வோம்
  பாவிகளில் மிகச் சிறந்த பாவியென்று
  பகர்ந்து நின்றார் வள்ளுவரும் பொறாமையினை
  தேடி அதைக் கொள்வோர்கள் கொண்டிருக்கும்
  திரு இழந்து தீய வழி சேர்வார் என்றார்


  குறள்
 
 அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்

பழம்பாடல் வேதநாயகம் பிள்ளை

 புகழுகின்றார் போலவே தான் இகழ்கின்றாரா
  புகழ்வேத நாயகம் பிள்ளை யவர்
  திகழ் தமிழில் கேட்கின்றார் இனிய கேள்வி
  தினம் தினமும் தமிழ் படிக்கும் சுகமே வேறு
  அகம் மகிழ இந்திரனே சந்திரனே
  அப்பா நீ என்றிங்கு புகழுகின்றார்
  ஜெகம் அறியும் அவர்களது செய்கைகளை
  சிறப்பல்ல மிகச் சிறுமை மிகச் சிறுமை

   
  பிறன் மனையைப் புணர்வதற்காய் கோழியாகிப்
  பெண்குறியை உடலெங்கும் பெற்று நின்றான்
  தரமில்லா இந்திரனும் அவனைப் போல
  தாரையெனும் குரு மனைவி தன்னைச் சேர்ந்தான்
  பரமசிவன் தலையமர்ந்த சந்திரனும்
  பாவியிவர் என்று நம்மை மறைமுகமாய்
  விதம் விதமாய்ப் புகழுதல்போல் ஒழிக்கின்றாரோ
  விளங்கவில்லை என்கின்றார் புலவர் தானும்

  செய்யுள்
  வேத நாயகம் பிள்ளை

  இந்திரன் நீ சந்திரன் நீ என்னல் பிறன்மனையைத்
  தந்திரமாக் கூடுஞ் சழக்கன் நீ - வந்த குரு
  பத்தினியைச் சேர்ந்த படு பாவி நீ என்பதாந்
  துத்தியமோ நிந்தனையோ சொல்

Monday, September 15, 2008

நாணாமல் வாழ்கின்றாரெ

 பெண்களினைப் போற்றாதார் வாழ்வில் என்ன
  பெருமைகளைக் கண்டு விட முடியும் நல்ல
  கண்களினைக் கொண்டிருந்தும் காணாராகிக்
  கதைத்து நிற்கும் மானிடரை என்ன சொல்ல
  விண் வெளியை வென்று விட்டார் மேலும்மேலும்
  விஞ்ஞானப் பேரழிவைக் கண்டு விட்டார்
  நல் மனத்துப் பெண்களது அன்பை இன்ப
  நலம் சேர்க்கும் உடலதனைப் பேணி னாரா

  கண் மணியே என்கின்றார் அணைக்கும் நேரம்
  கவிதைகளாய்ப் போற்றுகின்றார் காம நேரம்
  சொல்வதெல்லாம் ஏற்கின்றார் அந்த நேரம்
  சுகம் முடிந்தால் உறங்குகின்றார் விடிந்தாலங்கே
  புண் படவே பேசுகின்றார் கொண்ட சுகப்
  பொலிவை யெல்லாம் மறக்கின்றார் அடிமையாகப்
  பெண்ணினத்தை நடத்துகின்றார் அந்தோ அந்தோ
  பேணாமல் நாணாமல் வாழ்கின்றாரே
   

பழம் பாடல் கம்பன்

போர்க் களத்தில் நிற்கின்றான் இராவணனும்
  பொருது நிற்கும் இராமனது போர்த் திறனை
  ஆர்க்கின்ற அவன் வில்லை அதிரடியாய்
  அழிவெல்லாம் நடத்துகின்ற அம்பையெல்லாம்
  பேர்க்கின்றான் தன் மனத்தை சீதையின் பால்
  பெருமை கொண்டாள் பொறுமையினால் என்று சொல்லி
  சீர் கொண்ட மூங்கிலைப் போல் தோள்கள் கொண்டாள்
  சிறந்த இந்த இராமனது தேகம் தன்னை


  வார் கொண்ட மென்முலையால் அணைத்தவள்தான்
  வடிவெல்லாம் கண்டவள்தான் என்ற போதும்
  போர் செய்யும் இவன் மேனி கண்டிருந்தால்
  புகழுடைய மன்மதனும் நானும் இங்கே
  நாயென்றே நினைத்திருப்பாள் நல்ல வேளை
  நாயகியும் காணவில்லை என்றுரைத்தான்
  வாயாலே இராமனது போர்த் திறத்தை
  வாழ்த்துகின்றான் சுத்த வீரன் இராவணனும்


  கம்பன் செய்யுள்

  போயினித் தெரிவதென்னே பொறையினால் உலகம் போற்றும்
  வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கில்
  தீயென கொடிய வீரச் சேவகச் செய்கை காணில்
  நாயெனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்

ஆத்தி சூடி

ஆறுவது சினம் என்று அவ்வை சொன்னார்
  அவ்வார்த்தை தெளிந்தீரோ நண்பர்களே
  தேறி அந்த வார்த்தையினை நீர் உணர்ந்தால்
  தெய்வத்திற் கிணையாவீர் நீரும் இங்கு
  ஆறி விடும் சினம் கொஞ்சம் அமைதி காத்தால்
  அதை விட்டு உடனடியாய் வெகுண்டீரென்றால்
  நாறி விடும் நம் வாழ்க்கை சுற்றம் நட்பு
  நமை விட்டு ஒடி விடும் சிறந்து வெல்வீர்

Sunday, September 14, 2008

அந்தோ அந்தோ?

 காந்தி காமராசரோடு ஏழைக் கக்கனுக்கும்
  கண்ணியமாய் வாழ்ந்து இன்றும் வாழ்ந்திருக்கும்
  சாந்தி வழி காட்டிச் சென்ற அனைவருக்கும்
  சரித்திரத்துப் பெருமையான அவருக்கெல்லாம்
  நேர்ந்த ஒருகொடுமையினைக் கண்டேன் இங்கு
  நெஞ்செல்லாம் வேகுதையா கண்டோரெல்லாம்
  வாழ்ந்த அந்த மானிடரின் சிலைகளுக்கு
  வழங்குகின்றார் மாலைகளை அந்தோ அந்தோ

பேசலாமா?

 உடல் விற்றுப் பிழைக்கின்றார் என்று சொல்லி 
  ஊரெல்லாம் பேசுகின்றார் ஏசுகின்றார்
  தடம் கண்டு அவர் தேடி மீண்டும் மீண்டும்
  தழுவுதற்குச் செல்வாரைப் பேச மாட்டார்
  அடம் பிடித்தா அந்தத் தொழில் செய்து நின்றார்
  அவர் வயிற்றுப் பசிக்காகச் செய்து வாழ்ந்தார்
  தடம் மாற்றி அவர் காக்க எண்ணா மாந்தர்
  தனை மறந்து பண்பாடு பேசலாமா?
   

பழம் பாடல் கம்பன்

  சீதையவள் பேசுகின்றாள் இராமனிடம்
  தீக்குளிக்கச் சொன்னானே அதற்குப் பின்னர்
  பேதையல்ல சீதையவள் என்பதனை
  பேச்சு வழி காட்டுகின்றான் கம்பன் தானும்
  மாதவளை நாவினிலே வைத்திருந்த
  மலர் வாழும் பிரமனோடு மாட்டின் மேலே
  கோதையவள் தன்னோடு இருக்கும் சிவன்
  குளிர் சங்குகைக் கொண்ட மாலவனும்


  யாரறிவார் பெண்களது மனதின் நிலை
  எல்லாம் அறிந்தாலும் அறிய மாட்டார்
  சீர் மகனே என் இணையே அவரின் நிலை
  செப்பி விட்டேன் நீ என்ன செய்வாய் அய்யா
  பார் முழுதும் பெண்களது நிலை இது தான்
  படைத்தவனும் காப்பவனும் அழிப்பான் தானும்
  தானறியார் என்றால் நீ என்ன செய்வாய்
  தளிர்க் கொடியார் நிலை இது தான் உணர்வாய் நீயும்



  கம்பன் செய்யுள்

  பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
  சங்கு கைத் தாங்கிய தரும மூர்த்தியும்
  அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
  மங்கையர் மன நிலை உணர வல்லரோ

Sunday, September 7, 2008

தெயவம் நீங்கள்

குழந்தைகளைக் கொஞ்சுங்கள் அவர்கள் தம்மைக்
  கொண்டாடி மகிழுங்கள் மேலும் மேலும்
  விழைந்ததனை வாங்கித் தந்து மகிழ்ந்திடுங்கள்
  விருப்பமதை நல் வழியாய் ஆக்கிடுங்கள்
  அருந்தமிழைச் சொல்லித் தந்து ஆடிடுங்கள்
  அன்பு வழி தனைக் காட்டி இன்புறுங்கள்
  தினம் தினமும் வேறு பாடு எதுவும் இன்றி
  தெய்வம் நீங்கள் என்றுணரச் செய் திடுங்கள்

குறட் கருத்து

குடி யிருக்கவீ டின்றி அலையும் மாந்தர்
  குறை யதனை நினைத்து நினைத் தேங்குகின்றார்
  அடி யிரண்டில் உல காண்ட வள்ளுவரோ
  அறிவார்ந்த செய்தி ஒன்றைச் சொல் லுகின்றார்
  துடிக் கின்ற உயிரதுவும் குடி யிருக்க
  தூய ஒரு இடம் இன்றி வீடு தேடி
  அடிக் கடியே இடம் மாற்றி அலை கிறதாம்
  அதனால் தான் பிறப் பிறப்பு நிகழ் கிறதாம்


  குறள்

  அறத்துப்பால் நிலையாமை 10ம் குறள்

  புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
  துச்சில் இருந்த உயிர்க்கு

ஆத்தி சூடி அவ்வை பழம்பாடல்

 அவ்வையென்னும் அறிவார் தமிழ் மகள்
  ஆத்திசூடியை அருளிச் செய்தார்
  செவ்விததனை நாங்க ளெல்லாரும்
  சிறிய வயதில் கற்றே உணர்ந்தோம்
  கொவ்வைச் செவ்வாய்க் குழந்தைகட் கெல்லாம்
  கூற வேண்டும் தமிழர் நன்கு
  அவ்வை சொல்லில் அறிவை உணர்வை
  அறிந்தே அவர்கள் உயர்தல் வேண்டும்


  விரும்பிச் செய்க அறத்தை என்றார்
  விரும்பா அறத்தை வேடம் என்றார்
  விரும் பினாலே செய்த தாகும்
  வேறு விதங்கள் அசிங்கமாகும்
  தரும்போ துள்ளம்தரு வதாகத்
  தான்நினைத் தாலே தருதல் வீழும்
  அரும்பும் தமிழில் அவ்வை சொன்ன
  ஆத்தி சூடி தினமும் பார்ப்போம்



  அறம் செய்ய விரும்பு

Saturday, September 6, 2008

ஈந்திடும் இறைவனே

 வாருங்கள் வாழலாம் முறையான வழிகளில்
  வளமான வள்ளுவர் காட்டிடும் வழிகளில்
  சேருங்கள் மனிதரை ஒன்றாக அன்பினில்
  சேர்த்ததைப் போற்றுங்கள் நட்பென்ற உயர்வினில்
  நானென்றும் நீயென்றும் பிரிவினை இல்லாமல்
  நாமென்று இணைந்தங்கு நல்லதைப் பேணுங்கள்
  தானும் நம் உடனாகி அன்பெல்லாம் அருளுவான்
  தாயோடு தந்தையாய் ஈந்திடும் இறைவனே
   

என் சொல்வேன்

குற்றங்கள் சொல்வதா உடனே குதிக்கின்றார்
  கொண்டுள்ள நிறைகளைச் சொல்லிட வெறுக்கின்றார்
கற்றவர் இவர்கள் தம் தவறுகள் காண்கையில்
  கவலைகள் இல்லையே சிரிப்புத்தான் வருகுது
உற்றவர் பெற்றவர் எவரென்ற போதிலும்
  ஊரிலே வாழ்கின்ற நல்லவர் ஆயினும்
மற்றையோர் பெருமையைத் தாங்கிட முடியாராய்
  மனத்திற்குள் அழுகின்ற கொடுமையை என் சொல்வேன்

Thursday, September 4, 2008

குறட் கருத்து

 கற்றுத் துறை போகிக் காமுற்றுக் கல்வியினைப்
  பெற்றுத் துறை போகும் பேரறிவார் தம்மிடத்தில்
  பெற்ற கல்வியினைப்பேசிப் பெருமையுறல்
  நற்றவமாய்த் தானாய் வளரும் பயிரதற்கு
  நலமாகத் தண்ணீரைத் தான் பாய்ச்சல் போலுயரும்
  மற்றவரின் முன்னாலே வாய் திறத்தல் அய்யய்யோ
  மலிவாக்கி அமுதமதை பாத்திரங்கள் கழுவுகின்ற
  முற்றமதின் அங்கணத்தில் கொட்டுவதாய் வீணாகும்


  குறள்

  பொருட்பால் அவை அறிதல் குறள் 8ம் 10 ம்

  உணர்வதுடையார் முன் சொல்லல்வளர்வதன் 
  பாத்தியுள் நீர் சொரிந்தற்று

  அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
  அல்லார் முன் கோட்டி கொளல் 
   
   
   

இராம கவிராயர்

பிள்ளையார் கோயிலுக்குப் போனார் கவிராயர்
பெற்ற கொடைப் பொருள் அனைத்தும் இழந்திட்டார் கோயிலிலே
உள்ளம் தமிழுள்ளம் கவியாக பொங்கிற்று
உரைக்கின்றார் அவரிடத்து குலமே திருடும் என்று
வள்ளியெனும் வேடர் குலப் பெண்ணை திருடியது
வடிவேலன் உன் தம்பி உன் மாமன் மாலவனோ
வெண்ணெய் திருடி வெகு காலம் குலப் புத்தி
விநாயகரே நீரும் முடிச்சவிழ்த்தீர் எந்தனிடம்

செய்யுள்

தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய் திருடி மாயனாம் - அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தி லுள்ள குணம்

Wednesday, September 3, 2008

பேரனோடு பேத்தியும்

 பேரனோடு பேத்தியுமே பார்க்க வந்தார்
  பெருமையுடன் நானிருந்தேன் அவர்களோடு
  சேரனோடு பாண்டியனும் சோழனுமே
  சேர்ந்திருந்த அக்காலப் பெருமையோடு
  ஆரிவர்கள் எதிர்காலம் என் பெயரை 
  அப்படியே உலகுக்குச் சொல்லி நிற்பார்
  பேரனோடு பேத்தியுமே நலமாய் வாழ
  பெருங் கடவுள் தனை வணங்கி நிற்கின்றேனே
  

புரிந்து கொள்ளும

 யாரையுமே எழுதிடலாம் என்ற போக்கு
  எவரையுமே திட்டிடலாம் என்ற நோக்கு
  சாரமில்லார் செய்கின்ற வேலையன்றி
  சத்தியத்தை உணர்ந்தவர்கள் செய்வதில்லை
  யாரெவரோ அவரை நன்கு தெரிந்த பின்னர்
  எழுதுவதில் அறிவின் ஒளி தெரிய வேண்டும்
  ஊரிலுள்ள அனைவரையும் பொறுப்பேயின்றி
  ஒழிக்க எண்ணும் அவர் தமிழே அறியாரன்றோ


 விண்ணப்பம் போட்டெவரும் தந்தை தாயார்
  வீட்டினிலே பிறப்பதில்லை அவர்கள் சேர
 மண்ணகத்தில் வந்து விட்டோம் அதற்கு முன்பே
  மனிதர்களோ சாதிகளின் பிடியிலுள்ளார்
 நம்மகத்தே அவ்வுணர்வே யின்றி நாட்டில்
  நல்லவர்கள் தனையெல்லாம் நட்பு கொண்டு
 செம்மாந்து அனைவரையுமே உறவாய்க் கொண்டு
  சீராக வாழ்வதனை அறியார் இங்கு

 
 நம்மை இந்த சாதியென்று திட்டுகின்றார்
  நம்மறிவைக் குறையென்று கொட்டுகின்றார்
 எம்மறிவோ அவர்களையும் அன்பு செய்து
  இவரும் நம் தமிழினத்தார் என்றே போற்றும்
 நம்மவரே திட்டுகின்றார் உண்மை தன்னை
  நமதுணர்வை அறியாமல் கொட்டுகின்றார்
 எம்மவரே உம் கோபம் பழையார் மேலே
  எமை அதிலே சேர்க்காதிர் புரிந்து கொள்ளும்

Monday, September 1, 2008

குறட்கருத்து

 ஆண் பிள்ளை தனை மட்டும் சான்றோனென்று
  அறிந்தாலே தாயவளும் மகிழ்வாளென்று
  வான் போற்றும் வள்ளுவரும் சொல்லி நின்ற
  வகை கண்ட பெண்ணொருத்தி என்னைக் கேட்டார்
  ஏன் பெண்ணை வள்ளுவரும் சொல்லவில்லை
  எகத்தாளக் கேள்வி அது புரியாக் கேள்வி
  நான் சொன்ன பதிலதனை இங்கே சொல்வேன்
  நற்றமிழீர் வள்ளுவனைப் போற்றி நிற்பீர்


  தாயவளும் பெண்ணென்ற காரணத்தால்
  தனை உணர்ந்து மகிழுகின்றாள் ஊருக்குள்ளே
  தூயவனாய் தன் மகனும் இருப்பதாலே
  துடியிடையின் பெண்களுக்குத் துன்பமில்லை
  சேய் அவனின் நற் குணத்தால் ஊரிலுள்ள
  சேயிழையார் அனைவருமே வாழ்த்தி நின்றார்
  தாய் அதனால் மகிழுகின்றார் ஆடவரின்
  தரமொன்றே பெண்களினைப் போற்றும் என்று

  இல்லறவியல் மக்கட்பேறு குறள் 9

  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
  சான்றோன் என்க் கேட்ட தாய்

பலபட்டடை சொக்கநாதப் புலவர்

 இறைவனிடம் கேட்டு நின்றார் புலவர் இவர்
  என்னுளத்தே வந்திருக்க வேண்டுமென்றே
  பிறை சூடும் பெம்மானுக்கவரே ஒரு
  பெரு வழியை நல் வழியைச் சொல்லித் தந்தார்
  சரி பாதி அம்மைக்குத் தந்ததாலே
  சரி பாதி இருவருக்கும் மீதமுண்டு
  தனிப் பாதி அவ்விரண்டும் சேர்ந்தால் போதும்
  தனியாக இன்னுமொரு அர்த்தநாரி


  விரி சடையான் ஒருருவாய் இருத்தல் வேண்டாம்
  வெற்றி நிறை களந்தையிலே ஒருவனாகி
  புரிந்தவனை வணங்கி நிற்கும் புலவர் நெஞ்சில்
  புகுந்தங்கும் அருள் செய்து போற்றலாமாம்
  அறிவான புலவர் அவர் வேண்டுதலை
  அறிவான்தான் அறிவான ஆண்டவனே
  செறிவான இப்பாடல் பலபட்டடை
  சீர் சொக்கநாதர் அவர் அருளிச் செய்தார்


  செய்யுள்

 ஆகத்திலே ஒரு பாதி என்னம்மைக்களித்து அவள்தன்
 பாகத்திலே ஒன்று கொண்டாய் அவள் மற்றைப் பாதியும் உன்
 தேகத்திற் பாதியும் சேர்ந்தால் இருவருண்டே சிவனே
 ஏகத்திராமல் இருப்பாய் களந்தையும் என் நெஞ்சமுமே