Tuesday, July 28, 2009

வாழப்பாரும்

குழந்தைகளைக் கொல்லுகின்றார் பள்ளி என்னும்
கொலைக்கூடம் தன்னில் கொண்டு விடுகின்றாரே
நிரந்தரமாய் வாழ வைக்கும் கல்வியினை
நெஞ்சுணர்ந்து பண்புயரும் கல்வியினை
சிறந்தோங்கும் செந்தமிழை நந்தம் தாயைச்
செழிப்பாக்கச் செய்கின்ற கல்வி உண்டோ?
வரந் தந்து இறைவன் தந்த குழந்தைகளை
வதைக்காதீர் வதைக்காதீர் கொடுமை அது


எப்போதும் படிப்பு என்னும் கொடுமை அது
இதயமே இல்லாராய் அவரை மாற்றும்
தப்பாகிப் போட்டி என்று இருவர்க்குள்ளே
தரமில்லா உணர்வுகளைத் திணித் தொழித்தல்
இப்படியே செய்கின்ற கல்விக் கூட
இடும்புகளால் மனித உணர்வற்றே போகும்
கொப்பாகிக் கிளையாகி மலருமாகிக்
கொடுக்கின்ற காய் கனிகள் உதிருமோதான்


அப்பாவாய் அம்மாவாய் உம்மை ஆக்கி
அருள் செய்த ஆண்டவனும் அவரே யன்றோ
தப்பான கல்வி முறை தன்னில் கொண்டு
தண்டனைகள் தரலாமோ உணர்வீர் நீரே
எப்படியும் படிப்பார்கள் குழந்தைகளும்
இந்த நிலை உமக்கு உண்டோ அந்த நாளில்
அப்பாவே அம்மாவே உமக்குச் சொல்வேன்
அப்பாவாய் அம்மாவாய் வாழப் பாரும்

Thursday, July 23, 2009

நாலடியார் ஈகை

முரசு சத்தம் பத்து மைல் கேட்கும் நல்ல
முழங்கும் இடி நான்கு பத்து மைலில் கேட்கும்
தருவதொன்றே வாழ்க்கையெனக் கொண்ட சான்றோர்
தனக்கின்றிப் பிறர்க்குதவும் பெரியோர் வாழ்க்கை
சிறந்திருக்கும் மூன்றுலகும் சென்று சேரும்
செய்திடுவீர் உதவிகளை மாந்தர்களே
நிரந்தரமாய் அது ஒன்றே உங்களது
நிலைத்த புகழ் மூவுலகும் ஒங்கச் செய்யும்


நாலடியார்

ஈகை

கடிப்பிடும் கண்முரசு காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தாரெனப் படுஞ் சொல்

Wednesday, July 22, 2009

ஒன்று சேர்வோம்

செய்த நன்றி மறந்தாரைக் காணும் போது
சிறுமை செய்ய நாணாதார் காணும் போது
பொய்யொன்றே பேசி நிற்பார் காணும் போது
புரட்டாலே வாழ்ந்திடுவார் காணும் போது
கையூட்டால் வாழ்ந்திடுவார் காணும் போது
கரவான துறவியரைக் காணும் போது
மெய்யெல்லாம் துடிக்கிறதே என்ன செய்வோம்
மெய் காக்க அனைவருமே ஒன்று சேர்வோம்

Tuesday, July 21, 2009

வாழ்த்துகின்றோம்

பொச்சரிப்பில் வாழுகின்ற சில பேர் இங்கு
பொறுப்பின்றி அனைவரையும் தாக்கித் தாக்கிக்
கச்சை கட்டி ஆடுகின்றார் ஆடுகின்றார்
கணக்காகத் தனைப் பெரிய அறிஞனென்று
இச்சையினால் எழுதுகின்றார் என்ன செய்ய
இவரும் நம் தமிழினத்தார் அன்பு செய்வோம்
பச்சையாக எழுதுகின்றார் என்றால் கூடப்
பசுந்தமிழால் எழுதுகின்றார் வாழ்த்துகின்றோம்

Thursday, July 16, 2009

கல்வித் தந்தை ரோச்

நல்லதொரு தந்தையினை ரோச் என்னும்
நாயகரை தொலைக் காட்சி ஒன்றில் கண்டேன்
வல்லவராம் அவர் வாழும் திருச்சி நோக்கி
வாழ்த்தி நின்றேன் போற்றி நின்றேன் ஆடி நின்றேன்
சொல்லுகின்றேன் அவர் பெருமை ஆகா ஆகா
சுகம் சுகமே குழந்தைகட்கு உணர வேண்டும்
கொல்லாதீர் குழந்தைகளை பள்ளி என்னும்
கொலைக் கூடம் தனில் அளித்தல் நிறுத்துவீரே


பெண் குழந்தை இருவரையும் பள்ளியிலே
பெற்றோர்கள் இருவருமே பார்க்கப் போக
கண் திறந்த மனிதராய் ரோச்சும் ஆன
கதை கேட்டேன் மெய் சிலிர்த்தேன் வாழ்க வாழ்க
உண்மை இது உணர்ந்து உங்கள் குழந்தைகளை
உடன் காக்க உரிய வகை செய்வீர் நீரே
பண் பாடி குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க
படிப்பாரே உயர்வாரே மனிதராக


காலை முதல் இரவு வரை படித்தல் என்ற
கட்டாயத் திட்டம் ஒன்றை அவர்கள் பள்ளி
வேலையென அறிவிக்க ரோச் அவர்கள்
விரைவாக ஒரு முடிவை எடுத்தார் அன்றே
நாளை முதல் பிள்ளைகளே பள்ளி வேண்டாம்
நலமான கல்வியினை மனம் மகிழ
வேளை தேர்ந்து வீட்டிலேயே கற்றிடுவீர்
விரும்புகின்ற நேரங்கள் தன்னில் எல்லாம்


கோழையென ஆக்குகின்ற இந்தக் கல்வி
கொடுமையிலே நீர் வாட வேண்டாம் என்றே
பேழை மன ரோச் எடுத்த முடிவில் இன்று
பெரு வெற்றி இருவருமே மிகச் சிறப்பாய்
வாழையடி வாழையென வளரும் கல்வி
வடிவத்தில் வெற்றி கண்டு உயர்ந்துள்ளார்
தோழரென அனைவருக்கும் உதவுகின்ற
தொண்டு மனப் பான்மையுடன் வென்று உள்ளார்


முதற் பெண்ணோ ஐஏஎஸ் எழுதுகின்றார் தங்கை
முதுகலையில் வெல்கின்றார் மேலும் கற்க
கதையில்லை கண் முன்னர் திருச்சியிலே
காட்டியுள்ளார் ரோச் என்னும் நல்ல தந்தை
இதை உணர்வீர் மனித உணர்வற்றவராய்
இதயமின்றிக் குழந்தைகளைக் கொல்லுகின்ற
வதைக் கூடப் பள்ளிகளை விட்டொழிப்பீர்
வாழ வையும் குழந்தைகளை மனிதராக

Wednesday, July 15, 2009

நசுக்கலாமோ? குழந்தைகளும் கல்வியும்

விற்கின்ற கல்வியிலே மாட்டிக் கொண்டு
வீணாகப் போகின்றார் குழந்தைகளும்
கற்கின்ற கல்வியில்லை விளையாட்டில்லை
கனம் கனமாய் மண்டையிலே ஏற்றும் வேலை
பிற்காலம் உடல் நோயும் மனத்தில் நோயும்
பெற்றழியும் கல்வியினை திணிக்கின்றார் காண்
பெற்றோரும் சேர்ந்திந்தப் பெரும் பிழையைப்
பீடையினைச் சேர்க்கின்றார் என்ன செய்ய?


மதிப்பெண்கள் மதிப்பெண்கள் பெற்றால் போதும்
மனித மனம் உயர்ந்த குணம் எல்லாம் வேண்டாம்
விதிக்கின்ற விதிகளிலே பண்பு இல்லை
வெல்லுகின்ற நல்ல குணம் சொல்வதில்லை
கதியிதிலே மாட்டி நாட்டின் கண்மணிகள்
கலங்குகின்றார் புலம்புகின்றார் துன்பம் துன்பம்
எது எதிலே போய் முடியும் இந்த நாட்டின்
எதிர்காலம் அவர்களன்றோ நசுக்கலாமோ?

Sunday, July 12, 2009

விலகி வாரும் இந்து முன்னணி

இந்து முன்னணி என்ற பெயரில் சாதி
எச்சத்தைக் காட்டுகின்றார் சில பேரிங்கு
முந்தி ஒரு இராமன் வைத்த சிவனை அங்கு
முறையாகக் கருவறைகள் கட்டிக் காத்தான்
அந்த ஒரு கண்டி வேந்தன் அதற்கு பின்னர்
அடுக்கான பிரகாரம் கோபுரங்கள்
செந்தமிழாய் வாழ்ந்துயர்ந்த சேதுபதி
செம்மறவர் பெருங் கூட்டம் செய்ததங்கு


முந்தி உள்ளே பிரகாரம் சேவைகளை
முத்தமிழின் நகரத்தார் தேவகோட்டை
சொந்த ஜமீன் செய்து வைத்தார் பின்னர் அங்கே
ஜோதி மய லிங்கத்தை வந்து சென்ற
அந்தணராம் ஆதி சங்கராச்சாரியார்
அவர் கொண்டு வழி படவே வைத்துச் சென்றார்
சந்ததமும் மராட்டியர்கள் பூஜை செய்யும்
சரித்திரமும் அன்று தான் உருவாயிற்று


இந்த விதம் உருவான கோயில் ஒன்றே
இராமேஸ்வரத்துக் கோயில் அதிலே இன்று
பந்தம் உள்ளோர் குட முழுக்குச் செய்த அன்று
பைந்தமிழின் துறவியர்கள் இருவர் அங்கு
சென்று வழி பட்டதிலே இருவர் அங்கே
சீறுகின்றார் அவர் இருவர் உள்ளே உள்ளே
சென்றனராம் அது தவறாம் கூறுகின்றார்
சீர் கெட்ட தமிழர்களால் வந்த கேடு


குன்றக்குடி மடமும் மதுரையுமே
குற்றத்திற்கு ஆளாகியுள்ளார் அந்தோ
நின்றருளும் எம் சிவனுக்கு உரிமையானோர்
நிந்திக்கப் படுகின்றார் சாதியாலே
இன்றுணர்வீர் தமிழினத்தீர் மதத்தைச் சொல்லி
ஏய்ப்பவர்கள் ஒரு சாதிக்காரர் என்று
கன்றினைப் போல் அவர் பின்னால் ஒடுகின்ற
கண் மூடித் தனம் விட்டு விலகி வாரும்

Saturday, July 11, 2009

உலகம் தன்னை

அன்பு செய்யப் பயிற்சி இன்றிப் போனதாலே
அவதியுற்று உறவு எல்லாம் விலகு தின்று
வம்பு செய்து துன்பமுறும் வழக்கமெல்லாம்
வாடிக்கையாகுதிங்கு அய்யோ அய்யோ
கண்ணிருந்தும் குருடரைப் போல் வாழுகின்ற
கவலை சேர்த்து அழிகின்ற தன்மை நீக்கி
அன்பு செய்வீர் நண்பர்களே தந்தை தாயை
அண்டி நிற்கும் உறவுகளை உலகம் தன்னை

Thursday, July 9, 2009

மனிதனாக்கி வைத்தார்

குறள் கற்ற காரணத்தால் மனத்துக்குள்ளே
குறு குறுப்பு தவி தவிப்பு தெளி நினைப்பு
பிறழ்கின்ற மனம் தன்னை நெறியதாக்கி
பிறர் போற்ற வாழ வைத்த பெரு உயர்வு
இறந்தாலும் பெருங் காலம் வாழ்வதற்கு
இயல்பாகி வந்தமைந்த நல்ல குணம்
சிறந்தோங்கச் செய்தார் எம் வள்ளுவரும்
சீராக்கி எமை மனிதனாக்கி வைத்தார்

Saturday, July 4, 2009

வா மீத முலை நூலில் இருந்து காதல்

உன்னைத்
தென்றல் என்றது
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தழுவினாய்


உன்னை
மலர்கள்
என்றதும் கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
மலர்ந்தாய்


உன்னைக்
கவிதை
என்றது கூட
புகழ்ச்சியல்ல

நீயாகத்தான்
தோன்றினாய்


உன்னைத் தேடவிட்ட
காரணத்தால்
தேன்
என்கின்றேன்


உன்னைத்
தீண்ட
முடியாக்
காரணத்தால்

தீ
என்கின்றேன்

வா மீத முலை நூலில் இருந்து நடிகை

கவர்ச்சி வேண்டும்
காதல் வேண்டும்

கட்டிப் பிடித்து
ஆடவும் வேண்டும்

மைதுன உணர்வில்
மகிழ்ந்து விட்டு

நடிகையின்
கற்பில்

விமர்சனம்
வேறு

Friday, July 3, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து அவ்வையார்

கல்யாணம்
வேண்டாம்

என்றால்

பேரிளம்
பெண்ணாக்கிய
பிள்ளையார்

ஆகவே
வழியில்லை

என்றால்
ஆக்க மாட்டாரோ?

அகவல்
வெண்பா

பாடத்
தெரியுமா?

வா மீத முலை எறி நூலில் இருந்து

தங்கு தடையின்றி
தமிழே வாழ்க

தமிழினம்
எதிலும்

தலைமை
தாங்குக

தலைவலி
என்றால்

அனாஸின்
போடுக

வா மீத முலை எறி நூலில் இருந்து

தமிழைக்
காக்கும்

அறிஞர்
விருந்தில்

சென்னா
பட்டூரா

பாலக்
பன்னீர்

வா மீத முலை எறி நூலில் இருந்து ஆங்கிலம்

ஆங்கிலம்
ஒர்

அற்புதம்
செய்யும்

குடிக்கும்
இடமும்
பார் தான்

நீதித்
துறையும்
பார்தான்

வா மீத முலை எறி நூலில் இருந்து

அழுகையிலும்
அவ
அழகு
யம்மாடி

ராமசாமி
பொணத்த

இன்னும்
தூக்கல

கூடு
விட்டுக்
கூடு
பாய

நாம
என்ன
சாமியாராவேய்

வா மீத முலை எறி நூலில் இருந்து இராமன்

வேள்விப்
பொருளில்
பிறந்த
இராமன்

தேர்தல்
தோறும்

பிறப்பது
எப்படி?

வா மீத முலை எறி நூலில் இருந்து விநாயகர்

விநாயகர்
ஊர்வலம்

முடிந்த
ஜோரில்

விநாயகர்
ஒயின்ஸில்

வியாபாரம்
கன ஜோர்

வா மீத முலை எறி நூலில் இருந்து பிள்ளையார்

பிள்ளையாரிடம்
ஒடிப்போனேன்

அவசரமாய்
அபயம் கேட்க

சொனா
பானா

உபயத்திலேதான்

பிள்ளையார்
இருந்தார்

வெளிச்சத்தில்

Thursday, July 2, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து இரண்டும் ஒன்று

இரண்டும் ஒன்று


முன் அட்டை

பின் அட்டை

அழகும்

முகவுரைத் தெளிவும்

தீர்க்கமான பார்வையும்

கனமான

உள்ளடக்கமும்

ஆழமான பொருளும்

விரிய விரிய

விளங்கும்

விளக்கவுரையாக


நீ

ஒரு

புத்தகம்

கண்ணே

வா மீத முலை எறி நூலில் இருந்து வீரப்பன்

திரைப்பட

நடிகர்கள்

வீரம்

தெரிந்தது


வீரப்பன்

கடத்தல்

விளையாட்டின்

பின்னால்

வா மீத முலை எறி நூலில் இருந்து

எரிப்பது என் மதம்

புதைப்பது என் மதம்



பூகம்ப

முடிவில்

புதைந்தது

போக


எரிந்தது

எல்லாம்

Wednesday, July 1, 2009

துறந்து நின்றார்

கற்பெனவே ஒரு சொல்லை வைத்துக் கொண்டு
கதைக்கின்றார் கதைக்கின்றார் ஆடவர்கள்
சொற்பெருக்கு ஆற்றுகின்றார் ஆடுகின்றார்
சுத்தம் என்றும் ஒழுக்கம் என்றும் பிதற்றுகின்றார்
கற்பு எனும் ஒழுக்கத்தை தாங்களும் தான்
கடைப் பிடிக்க வேண்டும் என்றல் மறந்து நின்றார்
அற்புதத்தான் பாரதியாம் மகாகவியும்
அன்று சொன்ன வார்த்தையினை துறந்து நின்றார்