Sunday, August 30, 2009

அவரையும் முடிக்கின்றாரே

ஆசைகள் மனிதருக்கு அதிகமாய் ஆக ஆக
மோசடிச் சாமியார்கள் முளைக்கின்றார் ஊர்கள் தோறும்
வேஷங்கள் போடுகின்றார் வித்தைகள் காட்டுகின்றார்
காசினை மூட மக்கள் கால்களில் கொட்டுகின்றார்
ஆசையில் அவரும் கெட்டு அதிரடிச் சாமியாரை
மோசடி செய்ய வைத்து அவரையும் முடிக்கின்றாரே

ஆடுது பொய்யில்

உழைப்பவர் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்தால்
உலகம் அவர்கள் கையில் - இதை
உண ராதாராய் இருப் பதனாலே
ஊழலும் ஆடுது பொய்யில்

Monday, August 24, 2009

துயரங்கள் தீர்க்க விழைவார்

கொடுமைகள் பல செய்து கொள்ளையர் ஆகியே
கோடிகள் சேர்த்து வாழ்வார்
கூட்டத்தைக் கண்டதும் கும்பிட்டு வணங்கியே
கோமகன் என்று நிற்பார்
அடிமைகள் போலவே நடித்தங்கு அவர் முன்னர்
அய்ய நீ வாழ்க என்பார்
அவர் அங்கு திரும்பிய மறுகணம் இறையிடம்
அழித்திட வேண்டி நிற்பார்


உயர் குணம் கொண்டவர் உண்மையாய் வாழ்பவர்
ஒரு போதும் தீங்கு நினையார்
உலகத்துப் பொறுமையை தனக்குள்ளே கொண்டவர்
ஊரங்கு வணங்க வாழ்வார்
துயர் கொண்ட வாழ்க்கையில் அவரைப் போல் நல்லவர்
துடித்திட மக்களெல்லாம்
தூயனாம் இறைவனை வேண்டியே அவர் தங்கள்
துயரங்கள் தீர்க்க விழைவார்

Sunday, August 9, 2009

இராமகிருஷ்ணர் நல்மொழிகள்

உருகுகின்ற வெண்ணெயதும் உருகும் வரை
ஒசை செய்யும் உஸ் என்று சத்தமிடும்
உருகி அது நெய்யானால் அமைதி கொள்ளும்
உயர் ஞானம் அடைந்தாரும் அவ்வாறேதான்
சிறு வண்டும் மலரினிலே அமரும் வரை
சீராக ரீங்காரம் செய்தே ஆடும்
மருவில்லாத் தேனருந்தும் நேரந்தன்னில்
மெளனம் தான் அதுவேதான் ஞானம் ஆகும்


அதிகமான தேனருந்தி விட்டதென்றால்
ஆகிவிடும் ரீங்காரம் அதிகமாக
அது போல நெய்யதனில் பூரி செய்தால்
அது சத்தமிடும் பூரி போடும் தோறும்
விதம் விதமாய் வாழுகின்ற மனிதருக்கு
விரி ஞானம் கொண்டார்கள் கீழிறங்கி
பதப் படுத்த இது போல வருவதுண்டு
பக்குவமே கொண்டவர் தம் பொறுமையாலே

Saturday, August 8, 2009

இராமகிருஷ்ணர் நல் மொழிகள்

ஞானத்தை அடைந்து விட்டார் மீண்டும் வந்து
நானிலத்தில் பிறப்பதில்லை எவ்வாறென்றால்
ஆன நெல்லை என்றைக்கு அவித்தீரோ நீர்
அதன் பின்னர் அது விதையாய் ஆவதில்லை
ஞானமதைப் பெற்றவரும் அவ்வாறேதான்
நானிலத்தில் எவ்வாறு வருவார்கள் தான்
ஊனமெல்லாம் விட்டொழியும் பிறப்பறுக்க
உண்மை ஞானம் இறையருளால் பெற்று விடும்

Monday, August 3, 2009

கொடுமை இது

எப்போதும் எல்லோர்க்கும் அன்பு செய்தல்
என்பதொன்றே தமிழ் எனக்குத் தந்த வழி
தப்பாக அதற்கென்று நாளைத் தேர்ந்து
தனியாக வைப்பதிலே பெருமை இல்லை
முப்போதும் எப்போதும் முறைகளிலே
முந்தி நிற்றல் தமிழர்கள் தம் பெருமை அய்யா
எப்போதும் நண்பர் என்பார் இதயத்துள்ளார்
இதற்கென்று தனி நாளா கொடுமை இது