Friday, October 30, 2009

வீணே ஆழிகின்றார்

உயிருக்குயிரே அன்பு என்று உணர்த்தி நின்றார் வள்ளுவரும்
உணரா மனிதர் பணத்தைத் தேடி ஒடி ஒடி அலைகின்றார்
பயிருக்குயிரே மழை என்பதனைப் பாரோர் அனைவரும் அறிந்திருந்தும்
பசுமைக் காட்டை அழித்து அழித்துப் பாழாய் தமையே அழிக்கின்றார்
வயலும் காடும் இல்லா வாழ்வு வாழ்வாகிடுமோ உயிர்கட்கு
வருத்தம் இன்றி மேலும் மேலும் வயல்கள் அழித்து ஒழித்தீரே
துயில வீடு கட்டும் மாந்தர் துயரே சேர்த்து வாழ்கின்றார்
தூய்மை அழிக்கும் யந்திர வாழ்வின் துணையில் வீணே அழிகின்றார்

Monday, October 26, 2009

உங்க மக்க

அமைச்சர் பெருமானை வணங்குகின்றோம்
அடிக்கடி நீர் தொகுதிக்கு வருதல் வேண்டும்
குமைச்சல் இன்றி மின்சாரம் கிடைப்பதற்கும்
குண்டு குழிச் சாலையெல்லாம் மின்னுதற்கும்
சமைச்ச சோறு ஏழைகட்குக் கிடைப்பதற்கும்
சரியாக இலவசங்கள் பெறுவதற்கும்
அமைச்சர் அய்யா மீண்டும் மீண்டும் வாங்க அய்யா
அன்போடு அழைக்கின்றோம் உங்க மக்க

Friday, October 23, 2009

சூர சம்காரம்

சூரர்கள் அழிக்கும் கூட்டத்திற்குள்
சூரர்கள் ஆயிரம் இருக்கின்றாரே
நீரறிவீரே நெற்றிக் கண்ணின்
நேர்மைப் பொறியில் உருவானவரே
பேரறிவாளா இவரை அழித்தல்
பெருமை இல்லை என நினைத்தீரோ
ஊரகம் முழுதும் சேவல் மயிலாய்
உரு மாறிடும் எனும் அச்சம் தானோ

எந்தக்காலம்

சிலைகளுக்குள்ளே தலைவர்கள் இல்லை
சிறந்த அவர்தம் கொள்கைகள் இல்லை
கலகம் செய்தே வாழ்ந்திட நினைக்கும்
கண்ணியமற்றோர் கைகளில் சிலைகள்
விலை உணராத ஏழைகள் ஆங்கே
வீழ்ந்தே இறப்பர் சிலைகளுக்காக
சிலைகளை அகற்றிக் கொள்கைகள் ஏற்று
சிறக்கப் போவது எந்தக் காலம்

Tuesday, October 20, 2009

திருவடி கிடந்தேன்

ஆறுதல் தேடி வருபவர் தமக்கு
ஆறுதல் தருவதில் மகிழ்ந்தேன்
அழுகையில் விழுந்து அரற்றுவார் தமக்கு
அழுகையின் மகத்துவம் உரைத்தேன்
தேறுதல் தேடி வருபவர் தமக்குத்
தேறுதல் தருவதில் தெளிந்தேன்
திசைகளைத் தேடியே திணறுவார் தமக்குத்
திசைகளை உணர்த்தியே உணர்ந்தேன்
மாறிடும் உலகினில் நல்லன எல்லாம்
மற்றவர்க்கு உரைத்திடப் படைத்தான்
மனமெலாம் உறையும் எனதருங் கடவுள்
மகிழ்ந்தவன் திருவடி கிடந்தேன்

Saturday, October 17, 2009

தீபாவளித்திருநாள் 4

அதிகார
வர்க்கத்தை
ஆட்சியாளர்களை
அடிமைகள்
வணங்கும்
நாள்

தீபாவளித்திருநாள் 3

ஏழையர்க்குத்
தேம்பும்
வலித்
திருநாள்

தீபாவளித் திருநாள் 2

கார்ப்போரேசன்
குழாயும்
கங்கையாகும்
நன்னாள்

தீபாவளித் திருநாள்

ஆண் குழந்தை
என்பதால்
கள்ளிப் பால்
கொடுக்காமல்
வளர்த்து
அரக்கனாக்கி
தந்தை
உதவியுடன்
தாய்
கொன்ற
நாள்

Friday, October 16, 2009

வெடிக்குமோ

வெடி
செய்யும்
குழந்தைகள்

வெடிப்பது
தொழிற் சாலை
வெடித்தால்
தான்

தீபாவளி

முன்னும்
கவலை

பின்னும்
கவலை

நடுவில்
ஒரு
நாள்

தீபாவளி


வா மீத முலைநூலில் இருந்து