Saturday, May 29, 2010

உயர் குடியின் பள்ளிகளை

மாநகராட்சிப் பள்ளி தனில் படித்த
மாணவியாம் ஜாஸ்மின் தான் முதலிடத்தில்
ஆன மட்டும் பணக்காரப் பள்ளிகளில்
அவதியுற்று குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்
தானுணர வேண்டும் இதை தங்கள் பிள்ளை
தடுமாற இடமின்றிப் படிக்கும் நன்கு
ஊனுறக்கம் இல்லாமல் துன்பம் தரும்
உயர் குடியின் பள்ளிகளை ஒதுக்க வேண்டும்

Friday, May 28, 2010

நிறுத்திக் கொள்ளும்

எம் தலைவன் எம் நாட்டின் இளந்தலைவன்
இந்தியத் தாய் இந்திராவின் இனிய மகன்
தம் நாட்டு மக்களின் மேல் பற்றுக் கொண்ட
தனிப் பெரிய நல்ல மகன் ராஜீவ் காந்தி
கொன்றொழிக்கப் பட்டதனை நாங்கள் எண்ணி
குமுறுவது தவறாம் சிலர் சொல்லுகின்றார்
தம் நாட்டுத் தலைவன் அவன் இறந்தால் மட்டும்
தாங்காமல் அவர் மட்டும் புலம்புவாராம்


எம் நாடு எம் தலைவன் எந்தம் துன்பம்
இவர் யார் அது குறித்து எமக்கு ஆணையிட
பண்பாடு இல்லாதார் இரக்கம் இல்லாப்
பாழ் மனத்தைக் கொண்டார்கள் அவர் இழந்தால்
துன்புற்று அழுவாராம் துடிப்பராம் காண்
தூய எங்கள் தலைவனையே நினைத்தால் மட்டும்
இன்னும் ஏன் அழுகின்றீர் என்று கேட்கும்
இழிவுணர்வை இத்தோடு நிறுத்திக் கொள்ளும்

Thursday, May 27, 2010

என் மகன் பழனி பாரதி

எழுதுதற்கு என்னைத்தான் இசைய வைத்தான்
இசைய வைத்து இசை எனக்குச் சேர வைத்தான்
பழுது இல்லா நல் மனத்தான் எந்தன் மீது
பாசமதைப் பொழிகின்ற பெருங்குணத்தான்
அழுது நிற்பேன் ஆறுதல்கள் சொல்லி நிற்பான்
அய்யா அய்யா என்பான் அன்புணர்வேன்
விழுது இவன் என்றனக்கு என் மகன் தான்
வெல்க பழநிபாரதியே மகனே வெல்க

இளையராஜா இறைவன் வரம்

பண்ணைப் புரம் ஈன்றளித்த பாடல் திறம்
பரமனடி பரவுவதில் ரமணர் வரம்
கண்ணுதலான் காதலிக்கும் கவிதைத் திறம்
கண் மயங்க இசை தரலில் கடவுள் ஸ்வரம்
மண்ணிசையும் பண்ணிசையும் மலரும் சுகம்
மனமெல்லாம் மகாதேவன் அருளே பரம்
எண்ணி நின்றால் இவர் இசையும் லயமும் சுகம்
இளையராஜா மனிதருக்கு இறைவன் வரம்

இராஜபாளையம் தர்ம கிருஷ்ண ராஜா

அன்பு வழிச் செல்வர் எங்கள் தர்மராஜா
அறிவு போற்றும் நல்லர் எங்கள் தர்மராஜா
பண்பு வழிப் பெரியர் எங்கள் தர்மராஜா
பாசத்தின் தலைவர் எங்கள் தர்மராஜா
நண்பருக்கு உயிரே எங்கள் தர்மராஜா
நல்லறங்கள் செய்வார் எங்கள் தர்மராஜா
கண்ணிமைதான் எனக்கு எங்கள் தர்மராஜா
கண்ணன் பெற்ற கடவுட் கொடை தர்மராஜா

Tuesday, May 25, 2010

ஒதுங்கிச் செல்லும்

எல்லாமே நான் தான் எங்கேயும் நான் தான்
எவர் உண்டு எனக்கிணை தமிழே நான் தான்
சொல்லாதார் தமிழுக்குத் துரோகியாவார்
சூது வாது நிறைந்த அவர் பேடியாவார்
கல்லாதார் அவரை நான் ஏற்க மாட்டேன்
கனித் தமிழ் என் குடும்பத்தின் சொத்து கண்டீர்
நல்லோராய் வந்து எமைப் புகழ்ந்து செல்லும்
நாடாத நாய்க ளெல்லாம் ஒதுங்கிச் செல்லும்

Monday, May 24, 2010

நல்லவரின் பொறுப்பே ஆகும்

தாம் செய்த தவறுகளை மறந்து விட்டு
தடித்தனமாய் மற்றவர் மேல் பழிகள் போடும்
பேய் மனத்தார் என்றென்றும் திருந்த மாட்டார்
பிழை அனைத்தும் தான் செய்தால் சரிதான் என்பார்
காய்ந்து நிற்பார் மற்றவரைத் தடித்தனமாய்
கண்ணியமே அற்ற மொழி பேணி நிற்பார்
ஆய்ந்தவரின் மன நோயைப் புரிந்து கொண்டு
அமைதி காத்தல் நல்லவரின் பொறுப்பே ஆகும்

Saturday, May 22, 2010

என்ன செய்ய

நன்றி கொன்ற மானிடர்கள் என்றும் எங்கும்
நலமாக வாழ்ந்ததுவாய்ச் சரிதம் இல்லை
கொன்றழிக்கப் பிறந்தவர்கள் என்றும் எங்கும்
குல மானம் இன மானம் காப்பதில்லை
தன் மனைவி தன் குழந்தை தன்னைக் காத்துத்
தற்கொலைக்கு மற்றவரைத் தூண்டி விடும்
சின்ன மனத் தலைவர்களைத் தலைவர் என்னும்
சிறு பிள்ளைத் தனத்தாரை என்ன செய்ய

Friday, May 21, 2010

சோனியாவைப் போற்றுகின்றோம்

பசித்துன்பம் வறுமையென வாழ்நாள் எங்கும்
படுகின்ற துயரமது மேலும் மேலும்
நசுக்கி நிற்க ஏழை மக்கள் அழுது நோக
நாடாள்வார் கோடிகளில் புரளும் கோலம்
உசுப்பி விட ஆயுதங்கள் உயருவதை
உணர்ந்து அதைக் களைய வேண்டும் என்று சொன்ன
திசையெல்லாம் போற்றுகின்ற சோனியாவை
தேசமெங்கும் ஏழைகள் தான் போற்றுகின்றார்


ஏ.டி.எம்.மைக் கண்டு பிடித்த ஜாண் ஷெப்பர்டு பாரன் இன்று காலமானார். தினமணி செய்தி
எனது காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் கவிதை நூலில் இருந்து ஒரு பக்கம்

அன்பே வெல்லும்

அன்பு என்றால் அன்பு செய்யத் தெரிந்தார் மட்டும்
அன்பு செய்தல் அதுவேதான் சிறந்ததாகும்
அன்பு கொண்டேன் என்னிடத்தில் அடிமையாகு
ஆமாம் நான் சொல்லி விட்டேன் புரிகிறதா
புண் படுத்தும் வழியன்றோ இந்த வழி
புரிந்து நன்கு அன்பு செய்தால் அடிமை இல்லை
கண் போற்றும் இமை போல அன்பு செய்வீர்
கட்டளைகள் இல்லாத அன்பே வெல்லும்

ராஜீவை எண்ணி எண்ணி

நாடு காத்த நல்லவனை உலகம் போற்றும்
நலமான புதுமைகளை நல்கினானை
கேடு என்ற வார்த்தைக்குப் பொருளறியாக்
கேண்மை கொண்டு உயர்ந்தானைச் சிறந்தவனை
தேடி நல்ல நன்மைகளைச் செய்து நின்ற
திருமகனை அழகான இளையோன் தன்னை
கேடு மனம் கொண்ட தீயோர் வெடித்தொழித்தார்
கேவுகின்றோம் ராஜீவை எண்ணி எண்ணி

Thursday, May 20, 2010

Wednesday, May 19, 2010

நிகழ்ச்சி நிரல்

கவிஞர் வாலி தமிழ்க்கடவுள் நூல் வெளியீட்டு விழா

Tuesday, May 18, 2010

எம்.எல்.எ.

தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்க வரிப் பணத்தில்
தொகையொன்றைச் சம்பளமாய்த் தந்தும் அழ
வகை செய்து அவர் தொகுதி மக்களுக்காய்
வர வேண்டும் வசதிகளைச் செய்து பெற
தலை நகராம் சென்னைக்குப் பேரவைக்கு
தவறாமல் வந்தவர்க்குச் சேவை செய்யும்
நிலையதனை மறந்து விட்டு நிரந்தரமாய்
நீள் சென்னை தனில் வீடு கேட்கின்றாரே


தன் ஊரில் இருப்பதுவும் மக்களோடு
தான் ஒன்றாய்க் கலப்பதுவும் அவர்க்கேயான
மின் வசதி சாலையொடு கல்வியென்னும்
மெய் காக்கும் தன் வசதி மருத்துவமும்
இன்ன பிற வேலைகளைச் செய்வதுதான்
எம்.எல்.ஏ. வேலை அதை விட்டு விட்டு
சென்னையிலே வீடு கேட்டால் அர்த்தம் என்ன
செய்யப் போவதில்லை ஒன்றும் தொகுதியிலே

Monday, May 17, 2010

தங்கம் வாங்கு

ஏழையர்க்குச் சோறிடவே சொன்ன நாளில்
எல்லோர்க்கும் உதவச் சொன்ன நல்ல நாளில்
மோழைகளாய் முட்டாள்கள் எவரோ சொன்ன
மூட மொழி தனை நம்பி தங்கம் வாங்கும்
பீடைகளைக் களைவதுதான் எந்த நாளோ
பேச்சற்று நிற்கின்றார் அறிஞர் எல்லாம்
நாளுக்கொரு புதுப் பொய்யைச் சொல்லுகின்றார்
நாட்டினரோ உணராமல் நம்புகின்றார்

அரசியலே சரியாய் வரும்

என்ன செய்ய அக்காளின் பேரன் அவன்
எதுவெனினும் அவனேதான் செய்வேன் என்பான்
சொன்ன பேச்சு கேட்பதில்லை உடன் அழுவான்
சொல்லச் சொல்ல அவனேதான் எல்லாம் செய்வான்
என்ன செய்ய குழந்தை அவன் பொறுத்துக் கொள்வோம்
இல்லையென்றால் ஆடிடுவான் சாடி நிற்பான்
என்ன செய்யப் போறானோ எதிர்காலத்தில்
எப்படியும் அரசியலே சரியாய் வரும்

Saturday, May 15, 2010

நாயகன் தான் காக்க வேண்டும்

நானேதான் எல்லாமே என்று எண்ணல்
நல்லவரின் செயல் அன்று ஆமாம் ஆமாம்
ஊனமது உணர்ந்து நின்ற பெரியர் எல்லாம்
ஒரு நாளும் அத்தவறைச் செய்ததில்லை
பேண வேண்டும் மற்றவரை அவர்தம் வேலை
பெருமையுடன் அவரிடமே அளிக்க வேண்டும்
ஞானமது வந்து விட்டால் போதும் போதும்
நாயகன் தான் காக்க வேண்டும் என்ன செய்ய

Wednesday, May 12, 2010

கவலை விடும்

நம் ஆற்று நீ ரெடுத்து நன் னீராக்கி
நமக்கேதான் நல்குகின்றார் வெளிநாட்டார் தாம்
உள் நாட்டுத் தலைவர்களும் அவர்க்குதவி
ஒரு பாடு பெரும் பொருளைச் சேர்த்துக் கொண்டார்
எம் நாடு காந்தி மகான் பெற்ற நாடு
என்கின்ற பெருமையினை உலகுணர
பன்னாட்டார் கையினிலே பாரதத்தைப்
பத்திரமாய்ச் சேர்த்து விட்டோம் கவலை விடும்

Monday, May 10, 2010

கோயில்களின் சொத்தெல்லாம்

கோயில்களின் சொத்தெல்லாம் கொள்ளையர்கள்
கூட்டாகி அவர்க்கெனவே எடுத்துக் கொண்டார்
தாய் மேலே கை வைக்கும் தறுதலைகள்
தடுப்பதற்கு யாருமில்லை இறைவன் கூட
நோயான இவர்க்கு இங்கு சாதியோடு
நோகாத அரசியலும் துணையாய் நிற்கும்
வாய் விட்டுச் சொல்லுதற்கு அஞ்சுகின்றார்
வசங் கெட்ட அரசியலால் சாதி தன்னால்

தேம்புகின்றாள் பொருநை அன்னை

பொருநை நதி கூவம் என மாறிப் போகும்
பொறுப்பற்ற சிலர் செயலால் என்ன செய்ய
கருணை இல்லார் அரசியலார் இன்றவர்க்கு
கை நிறையப் பணம் வேண்டும் எதிர்காலத்தில்
அருந்துதற்கு நீரின்றி அவர் குடும்பத்(து)
தடுத்த தலைமுறையும் தான் அவதியுறும்
திருந்தவில்லை தினம் தினமும் மணல் திருட்டு
தேம்புகின்றாள் பொருநை அன்னை ஒழிக இவர்

Sunday, May 9, 2010

அன்னையர் தின அவலங்கள்

அன்னையர்க்கு தினம் என்று ஒன்று வேண்டாம்
அன்றாடம் அன்பு செய்யும் மனம் தான் வேண்டும்
முன்னம் உமைச் சுமந்திருந்த முந்நூறு நாள்
முலை தந்து உமை வளர்த்த பிந்நூறு நாள்
கன்னமதில் கன்னம் வைத்துக் கொஞ்சிக் கொஞ்சிக்
கண்மணியே தண்ணிலவே என்றாடும் நாள்
விண்ணவர் போல் உமை வளர்க்க ஆசை கொண்டு
வேண்டு மட்டும் உணவளித்துப் பசித்து நின்ற

அன்னையரை அகதியென முதியோர் இல்ல
அடைப்புக்குள் தள்ளுகின்ற அவலமதை
நன்குணர்ந்து மாற்றுங்கள் இல்லையெனில்
நாய் பேயும் மதியாது உங்கள் தன்னை
தன்னலம் தான் பெரிதென்று எண்ணும் வரை
தாயேது உதவி நின்ற தந்தையேது
பின்னுமக்கும் இதுவே தான் இல்லமென்று
பிள்ளைகளும் கொண்டு சேர்க்க அன்றழுவீர்

Saturday, May 8, 2010

சிறையில் தள்ளு

கோடிகளைச் சேர்த்து விட்டால் அவர் புனிதர்
கொள்ளைகளில் பயிற்சி பெற்றால் இளந் தலைவர்
வாடியவர் தனை ஏய்த்து வாழ்ந்திருந்தால்
வளம் காண எதிர்கால அமைச்சர் அவர்
தேடிய ஒர் வாழ்க்கை யது கிடைக்காராகி
தினம் பசியில் வாடி வாடித் துன்பமுற்று
நாடி ஒரு இட்டிலியைத் திருடி விட்டால்
நாடறியக் கேடி அவர் சிறையில் தள்ளு

பேரவை உறுப்பினர்கள்

சென்னைக்கு மின்சாரத் தடையே இல்லை
சீரழிவோர் மாநிலத்தில் மற்ற மக்கள்
என்னய்யா நியாயம் என்று கேட்பதற்கு
யாருமில்லை பேரவையில் காரணமோ
மன்னவராய் பேரவையின் உறுப்பினர்கள்
மாநகரம் தனிலேதான் வாழுகின்றார்
தன் தொகுதி தனில் யாரும் இல்லை அவர்
தலை நகரத் தலைவர்களாய் ஆகி விட்டார்

லஞ்ச ஒழிப்பு

கோடிகளைக் குவித்தவர்கள் கொள்கை சொல்லிக்
கூட்டணியாய் ஆனவர்கள் மேலும் மேலும்
ஆடி ஆடிக் கோடிகளைக் குவிக்கின்றாரே
அவர் தவறைக் கேட்பதற்கு யாருமில்லை
பேடிகளாய் நூறு ரூபாய் வாங்குகின்ற
பித்தர்களைக் கைது செய்து படமும் போட்டு
ஆடுகின்றார் லஞ்சத்தை ஒழிப்பத்ற்காய்
அவர் அரசு எடுக்கின்ற வேகம் என்று

Friday, May 7, 2010

கொள்கைஎனப் படிப்பதன்றோ

குற்றங்கள் காப்பதற்கா சட்டம் தன்னை
குறைவின்றிப் படிக்கின்றார் இளைஞர் எல்லாம்
குற்றங்கள் ஒழிப்பதற்காய் அகற்றுதற்காய்
கொள்கையெனப் படிப்பதன்றோ சட்டத் துறை
மற்றிதனை உணர்ந்தால் அதன் வழி நடந்தால்
மதிப்புயரும் நாடுயரும் புகழும் சேரும்
கற்றதற்கு புறம்பாக நடக்கும் போதே
கண்ணியமே இல்லாத மரணம் வரும்

Monday, May 3, 2010

தேர்தல் போதும்

பதவிகளைக் கைப் பற்றல் என்ற வேட்கை
பணம் சேர்த்தல் கோடிகளில் என்ற ஆசை
உதவுவது ஏழையர்க்கு என்ற எண்ணம்
ஒரு சிறிதும் இல்லாத கோழைகளே
பதவிகளில் அமருகின்றார் அமர்ந்து கொண்டு
பல்லிளித்து அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காய்
உதவுகின்றாற் போல் நடித்து ஏழையரை
ஊர் ஊராய் ஏய்க்கின்றார் வெட்கமின்றி


பள்ளிகளில் பணம் இன்றி இடங்கள் இல்லை
படிக்கின்ற ஏழையர்க்கு உதவல் இல்லை
கள்ள மனம் கொண்டோராய் தம் குழந்தை
கற்பதற்கு வெளி நாடு அனுப்புகின்றார்
உள்ளவர்கள் வாழ்வதற்கே உதவுகின்றார்
உரிமையற்று ஏழைகளோ கலங்குகின்றார்
நல்லவர் போல் இலவசங்கள் தந்து அந்த
நாதியற்றோர் தனை மேலும் ஒழிக்கின்றாரே


அரசியலார் பிள்ளைகளை படிப்பதற்கு
அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
அதுதானே நியாயம் அதை மக்களும் தான்
அதிரடியாய்ப் போராடி உணர்த்த வேண்டும்
பொது வாழ்வு என்பதுவே மக்களோடு
பொழுதெல்லாம் இருப்பதுவும் உழைப்பதுவும்
இது வெல்லாம் போராடிப் பெறுதல் வேண்டும்
இணங்காதார் தமை வீழ்த்த தேர்தல் போதும்