Sunday, May 19, 2013

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர்

நண்பர் தினமணி வைத்தியநாதன் அவர்கள் இன்று கலாரசிகன் என்ற பெயரில் ஒரு செய்தியை எழுதியுள்ளார்.அபத்தத்தின் உச்சம்.

அவர் என்னிடம் ஒரு முறை நேரிலேயே சொன்னார் கண்ணதாசனை விட வாலி தான் மிகச் சிறந்த கவிஞர் என்று. அது அவர் கருத்து.
ஏன் அப்படிச் சொல்கின்றார் என்பது நல்ல தமிழர்களுக்குத் தான் தெரியுமே.

இன்று எழுதுகின்றார் வைத்தியநாதன்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் என்று பாரதி எழுதியது புரியாமல் இவர் தவித்துக் கொண்டிருந்தாராம்  வாலி அதற்கு விளக்கமளித்து விட்டாராம்.
வாலியின் விளக்கம்===      அடியேன் அறிந்தவரை அதற்கான் அர்த்தம் யாதென்றுரைப்பேன். பாரதி பள்ளித்தலமென்று பள்ளிக் கூடத்தைக் குறிப்பிட்டிருக்க மாட்டான்
அது ஏற்கனவே கலைமகள் கொலுவிருக்கும் கோயில்தானே. அவன் குறிப்பிட்டது யாதெனில் பள்ளர்களும் பள்ளிகளும்  இருக்கும் சேரியைத்தான்.

அசிங்கமும் அருவருப்பும் பாராமல் ஊர்ப்பணி ஆற்றும் உத்தமர் தம் உறைவிடத்தை ஆலயமாக்க விரைந்த  முதல் ஆசாமி அந்த முண்டாசுக் கவிஞன். என்கின்றார் வாலி

பள்ளர்கள் முதலில் தேவேந்திர குல வேளாளர்கள். அவர்கள் உழுது விதைத்து களை பிடுங்கி பயிர் காத்து உலகத்து உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றும்
பண்பாளர்கள். கழனியை அருவருப்பான் இடம் என்கின்றாரே வாலி அவருக்குத் தெரியுமா கழனி உலகத்தார்க்கு உயிர் தரும் பூமி. அவர்கள் இல்லையெனில் எல்லாவற்றையும் துறந்து விட்டதகச் சொல்லும் துறவிகளும் இல்லை என்கின்றான் வள்ளுவப் பேராசான்.. அங்கே எங்கே அசிங்கமும் அருவருப்பும் இருக்கின்றது. கழனிகளின்  மணம் தெரியுமா வாலிக்கு. சாமர்த்திய்ம் சாமர்த்திய்ம்.

கலைமகள் அங்கே ஏற்கனவே இருக்கின்றாளாம்.இல்லை என்பதுவே அந்த மகாகவியின் வாதம்.கலைமகள் வழிபாட்டையே கேலி செய்கின்றான் பாரதி.

மந்திரத்தை முணுமுணுத்தேட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரினையிடுதல் சாத்திரம் இவள் பூசனையன்றாம்
வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பல பல பள்ளி
தேடு கல்வியிலாத தோர் ஊரைத் தீயினுக்கிரையாக்கி மடுத்தல்
என்று தெளிவு படச் சொல்லுகின்றான்.

இன்று பள்ளித் தலம் அனைத்தும் கொள்ளித் தலமாகி விட்டது.

பாரதி என்கின்ற அந்த மகாகவி சொல்லுகின்றான். பள்ளிகள் தான்
கோயில்களாக வேண்டும் என்கின்றான். கோயில்களைப் புனிதமாகப் போற்றுகின்றீர்களே.அது போலவே பள்ளிக் கூடங்களை அந்தப் பெருமகன் தலங்கள் என்கின்றான். நீங்கள் கோயில் இருக்கின்ற ஊர்களை தலங்கள் என்று போற்றுகின்றீர்களே. இல்லை பள்ளிகள் இருக்கின்ற இடங்களைத் தலமென்கின்றான் எங்கள் மகாகவி..ஏனென்றால் அதில் பயின்ற மாணவர்கள் உலகு போற்றுகின்ற பெருமைக்குரியவர்களாவார்களாகி வர வேண்டுமென்கின்றான். .தமிழன் தான் வையத் தலைமை கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை கொண்டவன்  எங்கள் மகாகவி.என்ன செய்வது பாரதியே  சொல்லுகின்றானே.

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர் என்று.

வாலி என் அன்பிற்குரியவர். ஆனாலும் தவறுகள். தவறுகள் தானே


உழவுத் தெய்வங்கள் ஆன பள்ளர்கள் பாடுவதாக பாரதி ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடுகின்றான்.

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே  பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்பாருக்கேவல் செய்யும் காலமும் போச்சே என்கின்றான்

வைத்தியநாதனுக்கு இதன் அர்த்தம் புரியும்





1 மறுமொழிகள்:

Anonymous said...

பாரதியைக் கூட இந்தக் குறுகிய வட்டத்திலா அடைக்கிறார்கள். கஷ்டம்