Saturday, May 25, 2013

யாருக்கும் வெட்கமில்லை

கிரிக்கெட்டில் ஊழலை ஒழிக்கத் திட்டம். கிரிக்கெட்டையே ஒழித்து விட்டால் என்ன. பாய்காட் சொல்கின்றார். அந்த சூதாட்டத்தை சட்ட பூர்வமாய் அனுமதித்து விடுங்கள். அதுதான் அரசியல் இருக்கின்றதே.

ஏ.வி.எம்மின் பூட்டன் குருநாத் மெய்யப்பன் இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் மருமகன் பணத்திற்காக சூதாடி கைது செய்யப் பட்டிருக்கின்றார். அவர் மரியாதையுடன் கைது செய்யப் பட்டிருக்கின்ரார். ஸ்ரீசாந்த்தும் மூன்று கிரிக்கெட் வீரர்களும் உடன் கைது செய்யப் பட்டு முகமூடி அணியப் பட்டு தெருக்களில் இழுத்து வரப் பட்டனர்.

சென்னையில் ஒரு பணக்காரரின் மகன் கார்  ஒட்டி ஒரு சிறுவன் (ஏழை) இறந்திருக்கின்றான். மூன்று பேர் காயப் பட்டிருக்கின்றனர். அதை வேறு வழக்காகப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் உடனே வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கின்றார். கடுமையான தண்டனை.

வரதட்சணையால் பாதிக்கப் பட்ட ஒரு பெண். கணவன் பார்க்க கணிப் பொறி காமிராவின் வழியே தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார். வாழ்கவிஞ்ஞானம்..

என் பேரன் கேட்கின்றான். 2ஜி மாதிரிதானே இந்தக் கிரிக்கெட் ஊழ்லும் காணாமல் போகும் என்று. என்ன பதில் சொல்ல

எத்தனை நடந்தும் இறுதிப் போட்டி நடந்தே தீரும் சொல்கின்றனர்.

வெட்கமில்லை இங்கு வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை


Sunday, May 19, 2013

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர்

நண்பர் தினமணி வைத்தியநாதன் அவர்கள் இன்று கலாரசிகன் என்ற பெயரில் ஒரு செய்தியை எழுதியுள்ளார்.அபத்தத்தின் உச்சம்.

அவர் என்னிடம் ஒரு முறை நேரிலேயே சொன்னார் கண்ணதாசனை விட வாலி தான் மிகச் சிறந்த கவிஞர் என்று. அது அவர் கருத்து.
ஏன் அப்படிச் சொல்கின்றார் என்பது நல்ல தமிழர்களுக்குத் தான் தெரியுமே.

இன்று எழுதுகின்றார் வைத்தியநாதன்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்வோம் என்று பாரதி எழுதியது புரியாமல் இவர் தவித்துக் கொண்டிருந்தாராம்  வாலி அதற்கு விளக்கமளித்து விட்டாராம்.
வாலியின் விளக்கம்===      அடியேன் அறிந்தவரை அதற்கான் அர்த்தம் யாதென்றுரைப்பேன். பாரதி பள்ளித்தலமென்று பள்ளிக் கூடத்தைக் குறிப்பிட்டிருக்க மாட்டான்
அது ஏற்கனவே கலைமகள் கொலுவிருக்கும் கோயில்தானே. அவன் குறிப்பிட்டது யாதெனில் பள்ளர்களும் பள்ளிகளும்  இருக்கும் சேரியைத்தான்.

அசிங்கமும் அருவருப்பும் பாராமல் ஊர்ப்பணி ஆற்றும் உத்தமர் தம் உறைவிடத்தை ஆலயமாக்க விரைந்த  முதல் ஆசாமி அந்த முண்டாசுக் கவிஞன். என்கின்றார் வாலி

பள்ளர்கள் முதலில் தேவேந்திர குல வேளாளர்கள். அவர்கள் உழுது விதைத்து களை பிடுங்கி பயிர் காத்து உலகத்து உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றும்
பண்பாளர்கள். கழனியை அருவருப்பான் இடம் என்கின்றாரே வாலி அவருக்குத் தெரியுமா கழனி உலகத்தார்க்கு உயிர் தரும் பூமி. அவர்கள் இல்லையெனில் எல்லாவற்றையும் துறந்து விட்டதகச் சொல்லும் துறவிகளும் இல்லை என்கின்றான் வள்ளுவப் பேராசான்.. அங்கே எங்கே அசிங்கமும் அருவருப்பும் இருக்கின்றது. கழனிகளின்  மணம் தெரியுமா வாலிக்கு. சாமர்த்திய்ம் சாமர்த்திய்ம்.

கலைமகள் அங்கே ஏற்கனவே இருக்கின்றாளாம்.இல்லை என்பதுவே அந்த மகாகவியின் வாதம்.கலைமகள் வழிபாட்டையே கேலி செய்கின்றான் பாரதி.

மந்திரத்தை முணுமுணுத்தேட்டை வரிசையாக அடுக்கி அதன் மேல்
சந்தனத்தை மலரினையிடுதல் சாத்திரம் இவள் பூசனையன்றாம்
வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பல பல பள்ளி
தேடு கல்வியிலாத தோர் ஊரைத் தீயினுக்கிரையாக்கி மடுத்தல்
என்று தெளிவு படச் சொல்லுகின்றான்.

இன்று பள்ளித் தலம் அனைத்தும் கொள்ளித் தலமாகி விட்டது.

பாரதி என்கின்ற அந்த மகாகவி சொல்லுகின்றான். பள்ளிகள் தான்
கோயில்களாக வேண்டும் என்கின்றான். கோயில்களைப் புனிதமாகப் போற்றுகின்றீர்களே.அது போலவே பள்ளிக் கூடங்களை அந்தப் பெருமகன் தலங்கள் என்கின்றான். நீங்கள் கோயில் இருக்கின்ற ஊர்களை தலங்கள் என்று போற்றுகின்றீர்களே. இல்லை பள்ளிகள் இருக்கின்ற இடங்களைத் தலமென்கின்றான் எங்கள் மகாகவி..ஏனென்றால் அதில் பயின்ற மாணவர்கள் உலகு போற்றுகின்ற பெருமைக்குரியவர்களாவார்களாகி வர வேண்டுமென்கின்றான். .தமிழன் தான் வையத் தலைமை கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை கொண்டவன்  எங்கள் மகாகவி.என்ன செய்வது பாரதியே  சொல்லுகின்றானே.

அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலர் என்று.

வாலி என் அன்பிற்குரியவர். ஆனாலும் தவறுகள். தவறுகள் தானே


உழவுத் தெய்வங்கள் ஆன பள்ளர்கள் பாடுவதாக பாரதி ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடுகின்றான்.

பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே  பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே நம்மை
ஏய்ப்பாருக்கேவல் செய்யும் காலமும் போச்சே என்கின்றான்

வைத்தியநாதனுக்கு இதன் அர்த்தம் புரியும்





Monday, April 29, 2013

சில உண்மைகள்

                                         கற்றாரைக் கற்றாரே காமுறுவர்

ஆனந்த விகடன் வார இதழில் முன்பொரு முறை கழுகார் பதில்களிலும் சென்ற வாரம் நானே கேள்வி நானே பதில் பகுதியிலும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பகுதியிலும் என்னைக் குறித்து ஏன் எழுதவில்லை என்று பல நூறு நண்பர்கள் தொலை பேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் மின்னஞ்ஞல் மூலமாகவும் என்னை வினவுகின்றனர்.

நான் என்ன செய்ய இயலும் எழுதுகின்றவர்களுக்கு எல்லாம் என்னை எப்படித் தெரிந்திருக்க முடியும். அவர்களுடன் பழகியவர்களைப் பற்றித் தானே அவர்கள் எழுத முடியும். எல்லா இதழ்களையும் ஏதோ ஒரு நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு  விமரிசித்து விடுகின்றேன். நண்பர்களுக்கு இது புரியவில்லை. இரண்டாவது நானும் ஒன்றும் அத்தனை சிறந்த பத்திரிக்கை ந்ண்பர்களை விட அறிவிற் சிறந்தவன் ஒன்றும் இல்லையே.

ஒரு பெரிய தமிழறிஞர் சொன்னார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று


                   காமராஜர் பற்றி உண்மை பேசுகின்றார் கருணாநிதி

இன்றைய சட்டப் பேரவையைக் குறிப்பிட பெரியவர் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜரின் சட்டப் பேரவை நாகரிகத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒரு மகிழ்ச்சி அவர் முதல்வராக இருந்த போது இருந்த சட்டப் பேரவையைப்
பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரால் எப்படி முடியும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பெண்ணை சேலையைக் கிழித்து வெறியாட்டம் ஆடியதும் மிகவும் மலினமான வார்த்தைகளால் அவரைத் திட்டியதும். அதை தமிழகத்தின் தலை சிரந்ததாகப் போற்றப் படும் ஒரு ஆங்கில் நாளிதழ் வெளியிட்டதும் தமிழகம் அறிந்த் ஒன்றுதானே.

பெருந்தலைவரை அவர் என்ன மெத்தப் படித்தவரா என்று மேடை தோறும் பேசியவர்கள் தானே இவர்கள்.பெருந்தலைவர் திருநெல்வேலிக் கூட்டத்தில் கேட்டார் நான் எங்கேயாவது படிச்சிருக்கேன்னு சொன்னேனா.பிறகு ஏன் அதையே சொல்றாங்க என்றார்.

Wednesday, April 10, 2013

அது அந்தக் காலம்

பள்ளிக் கூட விடைத்தாள்களும்  வினாத் தாள்களும் படுகின்ற பாடு கல்வி நமது நாட்டில் படுகின்ற பாட்டை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. யாரிடமும் முறையிட முடியாது. சேவை மனப்பான்மையோடு கல்விப் பணியாற்ற விரும்பாதவர்கள் அதிகப் பட்டுப் போகின்ற போது இப்படித் தான் ஆகும்.

சட்டப் பேரவையில் தேமுதிக திமுக இரண்டு கட்சிகளும் வெளியேற்றப் படுவதே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முதல்வர் பெரியவர் காமராஜரோ பக்தவத்சலமோ ஆர்.வெங்கட்ராமனோ  சி.சுப்ரமணியமோ பதில் சொல்லச் சளைக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பேசவே அனுமதிக்கப் படவில்லையென்றால் எதற்கு தேர்தல்களும்  செலவுகளும். புரியவில்லை.

பெரியவர் நெடுஞ்செழியன் பல வெளி நாட்டு அறிஞர்களின் குறிப்புகளை யெல்லாம் சட்டப் பேரவையில் எடுத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார். பெருந்தலைவர் காமராஜர் அவரிடம் அது சரி நீங்க என்ன சொல்றீங்க அதைச் சொல்லுங்க என்ற போது சபை மட்டுமல்ல பெரியவர் நெடுஞ்செழியனும் சிரித்தார். வெளியிலிருந்த அண்ணா அதைக் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தார். 

ராஜாஜி தனது தொகுதி மக்களுக்காகப் பேசிக் கொண்டிருந்த தோழர் ஜீவாவிடம் உலகம் குறித்துச் சிந்திக்க வேண்டிய நீங்கள் ஒரு தொகுதி மக்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றீர்களே என்று கேலி செய்ய முற்பட்ட நேரம் . என்ன செய்வது அந்தத் தொகுதி மக்கள் அவர்களின் பிரதிநிதியாக என்னைத் தேர்ந்த்டுத்து அனுப்பி உள்ளனரே. நீங்கள் மக்களுக்கே சம்பந்தமில்லாமல் மேலவையின் வழியாக வந்தவர்
உங்களுக்கு என்ன கவலை என்ற போது ராஜாஜியும் அதைக் கேட்டு சிரித்தார்.

அது அந்தக் காலம்


Wednesday, February 13, 2013

ஒருவருக்கும் கோபம் வராது.

நேற்று வங்கி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்போது தான் தெரிய வந்தது. கல்விக் கடனுக்கு வட்டி 13 சதவீத்ம் என்றார்கள். வசூலிப்பதிலும் கடுமை காட்டுகின்றார்கள்.

விஜய் மல்லையா 7500 கோடி வங்கிகளுக்குத் தர வேண்டியதிருக்கின்றது. அவர் இல்லையென்றால் அழகிகளின் படம்  கொண்ட  மாதங்காட்டிகள் நமது நாட்டிற்கு யார் தருவார்கள். கிரிக்கெட் குழுவை எத்தனை கோடிக்கு ஏலம் எடுப்பார்.

ஒரு விஜய் மல்லையா மட்டுமா.இன்னும் எத்தனை பேர் எத்தனை கோடி தரவேண்டியுள்ளது. சொல்ல மாட்டார்கள். பொது உடைமை தொழிற்சங்கங் கள் எத்தனை முறை பட்டியலிட்டன.

அவர்களின் எடு பிடிகள் ஆட்சியில் இருக்கையில் அவர்களின் தவறான பொருளீட்டுதலை நம்பி இருக்கையில் என்ன செய்ய இயலும்.

கட்டிடத் தொழில் செய்யும் இளைஞர் கொண்ட ஒரு தலைக் காதல் ஒரு இளம்
பொறியியல் மாண்வியைக் கொடூரமாகக் கொன்றிருக்கின்றது . அவர் தமிழ்ப் பெண். வசதியானவர் இல்லை போலத் தெரிகின்றது.டில்லியில் ந்டந்தால் தான் பாலியல் வன்முறை போலும். இங்கு யாரும் கோபப் படவில்லை.

கொடுமை கொண்டு பொங்குவாய் வா வா வா என்றான் பாரதி

Saturday, February 2, 2013

எல்லா மதங்களும்

எல்லா மதங்களும் அன்பைத்தான்  போதிக்கின்றன. எந்த மதமும் கொலயை கொள்ளையைப் போதிப்பதில்லை. புரிந்து கொள்ளாதவர்கள் தவறு செய்தால் அதை அந்த மதத்தின் மீது சுமத்துவது நியாயமாகாது. திருடர்கள் திருடப் போகும்போது இறைவனை வணங்கி விட்டுத் தான் செல்கின்றார்கள். இறைவன் திருடனை வாழ்த்தியா அனுப்புவார்.

சல்லல்லாஹி அலைஹி வஸ்ஸலம்  ந்பி பெருமானர் தெளிவாகச் சொல்லுகின்றார். அவரவர் மதம் அவர்களுக்கென்று.

நம்மாழ்வார் சொல்லுகின்றார்.

அவரவர் தமது தமது அறிவு அறி வகை வகை
அவரவர் இறையவர் என் அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே/

அவரவர்கள் அறிவு அவரவர்களுக்கு அவரவர் விதிப் படி  காட்டிய இறைவனை அவரவர் வணங்குகின்றனர்

வேறு படு சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்கு பரம் பொருளே நினது விளையாட்டல்லால்
மாறு படும் கருத்தில்லை என்று சைவம் கூறுகின்றது.

பகவான் இராமகிருஷ்ணர் கிறிஸ்தவ மதத்தில் ஆறு மாதம் இருந்துள்ளார். இஸ்லாமிய சூபியிடம் போய் அந்த மார்க்கத்தை உணர ஆறு மாதங்களுக்கு மேல் இருந்திருக்கின்றார்.

சுவாமி விவேகானந்தரோ இசுலாமியர்களின் உடல் உறுதியோடும் கிறிஸ்தவர்க்ளின் அன்போடும்  நமது வேதாந்த சாரங்களைச் சேர்த்து ஒரு புதிய மதத்தை உருவாக்க விரும்புகின்றேன் என்றார்.

இன்னின்ன வழி காட்டிகள் எமது மத்த்தில்  தோன்றியுள்ளனர் என்று பெருமைப் படுவார்களே யொழிய.

இத்தனை கொலைகள் செய்தவர் என்றும் இத்தனை பெண்களைக் கற்பழித்தவர் இத்தனை கொள்ளைகளைச் செய்தவர் இவர் எங்கள் மதத்தவர் என்று எந்த மதமும் பெருமைப் படுவதில்லை.

ஹே ராம் படத்திலிருந்து  கமலின் மீது குற்றச்சாட்டுகள் வந்து கொண்டேயிருக்கின்றன..தசாவதாரம் படத்தில் சோழ மன்னன் பெருமாள் சிலையைக் கடலில் போடுவதாக ஒரு காட்சி. இன்றும் சிவன் கோயில்களில் பெருமாளுக்கு இடம் உண்டு. பெருமாள் கோயிலக்ளிலேதான் சிவனுக்கு இடம் கிடையாது. திருக்குறுங்குடியிலே மட்டும்தான் உண்டு.. எந்த மன்னனும் அப்படிச் செய்ததில்லை. ஆனால் தமிழ்நாட்டில் யாருமே அதைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கு முந்திய என்னைப் போல் ஒருவன் படமும் இசுலாமிய தீவிரவாதிகளை இந்தியச் சட்டம் ஒழுங்கை மீறி கதையின் நாயகன் கொல்வதாகக் கமல் காட்டியிருந்தார். அது வேறு படத்தின் தழுவல் என்று நண்பர்கள் சொன்னார்கள். விஸ்வரூபத்திலும் தொழுகை நடத்தி விட்டு தீவிரச் செயல்களில் ஈடுபடுகின்ற காட்சிகளை வைத்திருக்கின்றார் என்று இசுலாமியச் சகோதரர்கள் வேதனை கொள்கின்றனர். குரான் குறித்த சில தவறுகளும் இருப்பதாகச் சொல்கின்றனர். முதல்வர் அரசு இசுலாமிய அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டுக் காட்டச் சொல்லியும் கமல் திரையிட்டுக் காட்ட முன் வரவில்லை என்கின்றார். ஏன் கமல் செய்யவில்லை. செய்திருந்தால் அரசே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்திருக்குமே. புரியவில்லையே.எனது வீட்டையெல்லாம் அடகு வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கின்றேன் என்கின்றார் கமல். அது தொழில் திரைப் படத் தொழிலே ஒரு மிகப் பெரிய சூதாட்டம். நாடோடி மன்னன் திரைப்படம் தயாரித்த எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார். இந்தப் படம் வெற்றியடைந்தால் நான் மன்னன் இல்லையென்றால் நான் நாடோடி என்று. ஒரு மதத்தவர் குறித்து இரண்டு படங்கள் தொடர்ந்து கமலிடமிருந்து வந்ததனால்  கமலின் மீது அவர்களுக்கு வருத்தம் வருகின்றது.

கருணாநிதி இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர். அவர்களை இந்த் சர்ச்சைக்குள் இருக்கின்றார். ஜெயா டி.வி. இந்தப் படத்தைக் கேட்டு தராத்தனால் முதல்வர் இப்படிச் செய்கின்றார் என்கின்றார். இவரது பேரன்கள் எத்தனைப் படங்களை இப்ப்டி மிரட்டி வாங்கினர் என்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்க தாத்தா பேசுவது ஆச்சரியமாக இருக்கின்றது.
வேறு தொலைக் காட்சிகளையே வர விடாமல் தடுத்தது இவர்பேரன்கள் தானே. இவர்களுக்குள் வந்த பிரச்சினைகளினால்தானே கலைஞர் தொலைக்காட்சியே வந்தது.

படங்கள் பாடம் சொல்லட்டும் பதற்றங்களை ஏற்படுத்த வேண்டாமே.

Monday, January 21, 2013

68ம் ஆண்டில்

எதிர் வரும் ஜனவரி 27ம் நாளில் 68ம் அகவையில் அடி எடுத்து வைக்கின்றேன். நான் பிறந்தது தைப் பூசத் திருநாளில். இந்த ஆண்டு தைப் பூச த் திருநாளும் ஆங்கில நாளும் ஒன்று போல வருகின்றன். அந்த நாளில் வா மீத் முலை எறி கவிதை நூலின் இரண்டாம் பதிப்பும் எனது கட்டுரைத் தொகுதிகளும் வரக் கூடும் என் எண்ணுகின்றேன். சிறு கதை தொகுப்பு தினமலரில் வந்த எனது முதலிரவு என்ற கதை கிடைக்காததால் தடைப் பட்டு நிற்கின்றது. யாரும் தினமலரின் அந்தக் கதையை வைத்திருப்பின் எனக்கு அனுப்பி உதவினால் நன்றி உடையவானாயிருப்பேன். அன்புடன் நெல்லைகண்ணன்