Sunday, July 12, 2009

விலகி வாரும் இந்து முன்னணி

இந்து முன்னணி என்ற பெயரில் சாதி
எச்சத்தைக் காட்டுகின்றார் சில பேரிங்கு
முந்தி ஒரு இராமன் வைத்த சிவனை அங்கு
முறையாகக் கருவறைகள் கட்டிக் காத்தான்
அந்த ஒரு கண்டி வேந்தன் அதற்கு பின்னர்
அடுக்கான பிரகாரம் கோபுரங்கள்
செந்தமிழாய் வாழ்ந்துயர்ந்த சேதுபதி
செம்மறவர் பெருங் கூட்டம் செய்ததங்கு


முந்தி உள்ளே பிரகாரம் சேவைகளை
முத்தமிழின் நகரத்தார் தேவகோட்டை
சொந்த ஜமீன் செய்து வைத்தார் பின்னர் அங்கே
ஜோதி மய லிங்கத்தை வந்து சென்ற
அந்தணராம் ஆதி சங்கராச்சாரியார்
அவர் கொண்டு வழி படவே வைத்துச் சென்றார்
சந்ததமும் மராட்டியர்கள் பூஜை செய்யும்
சரித்திரமும் அன்று தான் உருவாயிற்று


இந்த விதம் உருவான கோயில் ஒன்றே
இராமேஸ்வரத்துக் கோயில் அதிலே இன்று
பந்தம் உள்ளோர் குட முழுக்குச் செய்த அன்று
பைந்தமிழின் துறவியர்கள் இருவர் அங்கு
சென்று வழி பட்டதிலே இருவர் அங்கே
சீறுகின்றார் அவர் இருவர் உள்ளே உள்ளே
சென்றனராம் அது தவறாம் கூறுகின்றார்
சீர் கெட்ட தமிழர்களால் வந்த கேடு


குன்றக்குடி மடமும் மதுரையுமே
குற்றத்திற்கு ஆளாகியுள்ளார் அந்தோ
நின்றருளும் எம் சிவனுக்கு உரிமையானோர்
நிந்திக்கப் படுகின்றார் சாதியாலே
இன்றுணர்வீர் தமிழினத்தீர் மதத்தைச் சொல்லி
ஏய்ப்பவர்கள் ஒரு சாதிக்காரர் என்று
கன்றினைப் போல் அவர் பின்னால் ஒடுகின்ற
கண் மூடித் தனம் விட்டு விலகி வாரும்

1 மறுமொழிகள்:

said...

அருமை. அருமை. சரியான சவுக்கடி.