Friday, November 6, 2009

மொழிதான் ஏது?

முல்லைப் பெரியாறா மலையாளிகள்
முடக்குகின்றார் முடக்குகின்றார் அய்யோ அய்யோ
கள்ளத்தனமாகக் காவிரியைக்
கன்னடர்கள் தடுக்கின்றார் அய்யோ அய்யோ
சொல்வோரே இயற்கையினை அழித்தழித்து
சொத்துக்கள் சேர்க்கையிலை நினைத்தீரோ நீர்
கள்ளத்தனச் சொத்துச் சேர்க்கச் சேர்க்க
கண்மூடித் தனமாக இயற்கை கொன்றீர்


அள்ளிக் கொடுக்கின்ற இயற்கையினை
அவமதித்து கோடிகளை அள்ளிக் கொண்டீர்
சுள்ளியாகிக் காடுகளும் வெம்மையிலே
சுடுகாடாய் ஆவதற்கு வழிகள் செய்தீர்
எள்ளி நகையாடும் எதிர் காலம் உம்மை
என்ற எண்ணம் உமக்கேது வெட்கம் ஏது
கள்ளர்களே உம்மைப் போல் கயவர்கள்தாம்
கன்னடத்தில் மலை நாட்டில் பல பேர் உள்ளார்


எல்லோரும் ஆங்காங்கே இயற்கை கொன்று
இல்லத்தில் அலங்காரம் செய்தே வாழ்வீர்
வல்லானாம் இறை தந்த இயற்கையினை
வல்லடியாய்க் கொள்ளைகொண்டீர் குறை சொல்லாதீர்
கொல்கின்றீர் மனித குலம் பணத்தாசையால்
குடும்பத்தோ டழிவீர் நீர் இறைவன் கொல்வான்
சொல்லாதீர் மொழி பேதம் கொள்ளையர்க்கு
சொந்தமாய் நாடேது மொழிதான் ஏது?