Thursday, July 31, 2008

அசிங்கம்

பெண்களையே மீண்டும் மீண்டும் பேசுகின்றார்
  பேசுவதில் நாணமின்றிப் பேசுகின்றார்
  கண்கள் அவர் என்பதையே மறந்து இங்கே
  கண்ணியமே இல்லாராய்ப் பேசுகின்றார்
  என்ன செய்ய இவர்களையே என்ன செய்ய
  இவர் தாயர் பெண்ணென்றல் மறந்தே நின்றார்
  கன்னலென்னும் பெண்ணினத்தை இழித்துப் பேசும்
  கயவர்களைச் சமுதாயம் தூத்தூ என்னும்

 காதலிக்கப் பெண் வேண்டும் அவர்க்ளோடு
  கலந்து பல இன்பங்கள் பெறவும் வேண்டும்
 பா பலவாய்ப் படைப்பதற்கு அவர்கள் வேண்டும்
  பனிக் குளிராய் அனற் சூடாய்ச்சுகங்கள் வேண்டும்
 கூடுகையில் உளறுகின்ற மொழிகள் எல்லாம்
  கொண்டவளை ஏமாற்றிச் சரித்தல் வேண்டும்
 ஆடுகின்றார் ஆடவரில் சில பேர் இங்கே
  அவர் இருத்தல் ஆடவர்க்கே அசிங்கம் இங்கே

குறட் கருத்து பொருட் பால்

 ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
  உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
  சீரில்லா அறமற்ற செயல்களையே
  செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
  காரற்ற வானம் போல் கருணையில்லார்
  கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
  பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
  பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்
   
  குறள்
 பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
 அறம் நாணத் தக்கதுடைத்து

பழம் பாடல் திருமந்திரம்

 ஒன்றே ஒன்றாக அவனே யுள்ளான்
  உமையவளோடிணைந் தவனே இரண்டுமானான்
  கண்டார்கள் த்மக்கு அவனே குருவுமாகிக்
  கையெடுத்துத் தொழுவதற்கு லிங்கமாகி
  நன்றான சங்கமமாய்க் காட்சி தந்தான்
  சத்து சித்து ஆனந்தம் மூன்றும் ஆனான்
  நன்றான வேதங்கள் நான்கும் ஆனான்
  ந்லமாக அறம் பொருள் இன்பம் வீடும் ஆனான்

  கொன்றன்ன மனிதருக்குத் துன்பம் தரும்
  கூட்டான அய்ம்புலனை வென்றே நின்றான்
  நன்றான ஆதாரம் ஆறும் ஆனான்
  நாம் காண இயலாத ஏழண்டத்தும்
  சென்றானே நிலமாகி நீரும் ஆகி
  நீள் காற்றும் ஆகி தீ வானுமாகி
  கன்றாத கதிரவனாய்ச் சந்திரனாய்க்
  காணுகின்ற ஆன்மாவாய் எட்டாய் ஆனான்

  திருமந்திரம்
  ஒன்று அவன்தானே,இரண்டு அவன் இன்னருள்
  நின்றனன் மூன்றினுள் , நான்கு உணர்ந்தான் ஈந்து
  வென்றனன் , ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச் 
  சென்றனன் , தானிருந்தான் உணர்ந்து எட்டே
   
   
   

Sunday, July 27, 2008

ஒழித்தல் வேண்டும்

 மனைவியரைக் கொல்லுகின்றார் குழந்தைகளை
  மழலையரைக் கொல்லுகின்றார் அந்தோ பாவம்
  தனை மறந்துக் கொடுமைகளைச் செய்து நிற்கும்
  தனியான மனிதரினை என்ன செய்ய
  வினை வழியோ விதி வழியோ புரியவில்லை
  வீணர் இவர் தமைக் கண்டேன் பொறுக்கவில்லை
  புனை கதைகள் திரைக் கதைகள் கண்டு இங்கு
  போக்கொழிந்து போனாரே மனிதர் இவர்

  கொல்லுதற்கு வந்தவரா உந்தனது கூட்டாகிக்
  கொள்ளையினபம் தந்த மாதர்
  அள்ளுதற்கும் கொஞ்சுதற்கும் உந்தன் மீது
  அன்பு செய்து உனைத் தந்தையாக்குதற்கும்
  தெள்ளு தமிழ் மழலையரை உந்தன் பேரைத்
  தெரிய வைக்கத் தந்ததற்கும் முட்டாள் முட்டாள்
  கொல்லுதற்கா அழகவரை இறைவன் தந்தான்
  கொடும் பாவிக் கூட்டம் இதை ஒழித்தல் வேண்டும்

குறட் கருத்து பொருட் பால்

 ஊர் தூற்றிச் சிரிக்கின்ற ஒரு செயலை
  ஒரு நாளும் செய்து விடார் நாணம் கொண்டார்
  பேர் கெட்டுச் சீர் கெட்டுப் போனால் கூட
  பிழையுள்ளார் வாழ்வது போல் வாழ மாட்டார்
  ஆர் கெட்டுப் போனாலும் நாணம் உள்ளார்
  அவர் சிறப்பு பெருஞ் சிறப்பு நாணம் காக்க
  பேர் பெற்றார் தம் உயிரைத் தந்திடுவார்
  பெரிதங்கு நாணம் என்றே உணர்த்திடுவார்

  குறள்
 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்
 நாண் துறவார் நாண் ஆள்பவர்

பழம் பாடல் காளமேகம்

இறைவனையும் மனிதருடன் இணைத்துப் பார்க்கும்
இப்பெருமை காளமேகம் தனக்கே உண்டு
பிறை சூடி நிற்கின்ற பெம்மான் நந்தம்
பேரருளாம் சிவனிடம் தான் கேள்வி வைத்தான்
உறை கடலாம் பாற்கடலைக் கடைந்த போது
உடன் வந்த நஞ்சதனை உண்டு நின்ற
இறைவனிடம் கேட்கின்றான் இவனைப் போன்ற
இடக்கான புலவர் வேறு யாருமில்லை


நஞ்சருந்த வேண்டிய ஒரு நிலைக்கு சிவன்
நாடறிய வந்ததென்ன  என்று கேட்டான்
கொஞ்சமல்ல செல்வம் வெள் ளியில் மலையும்
கூடக் கொழிக் கின்ற பொன் மலையும்
அஞ்சல் என்று சொல்லி அவன் தன்னை விட்டு
அகலாத உமையம்மை உடனிருக்க
நஞ்சருந்த வேண்டிய ஒர் சூழ் நிலைக்கு
நாயகனார் வந்த்தென்ன  என்று கேட்டான்

பணமில்லாத் துன்பத்தில் நஞ்சருந்தும்
பழக்கம் உண்டு மனிதரிடம் இவர்தமக்கோ
அளவின்றி செல்வம் உண்டு மலைகளாக
அதனாலே நஞ்சருந்த வழியேயில்லை
துணையாலே துன்பம் வந்து மனிதர் சிலர்
தொலைந்தொழிந்து போக நஞ்சை யருந்திடுவார்
அணைந்தென்றும் பிரியாமல் அன்னையவர்
அருகிருக்க நஞ்சருந்தல் நியாயம்தானோ

வினை யாவும் தீர்க்கின்ற இறைவன் அவன்
விளையாட அளிக்கின்ற அன்பு வாய்ப்பில்
கணையாக் கேள்விகளைத் தொடுத்து நின்றான்
காளமேகம் எனும் பெரும் வம்பன் இவன்
தனியாகத் த்மிழன்னை இவனுக்கென்று
தந்து விட்ட பேரருளே காளமேகம்
கனியான பாடல் பல தந்து நின்றான்
களித்திடுவோம் நாம் அவ்னைக் கற்றுக் கற்று

காள்மேகம்

வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளி மலை பொன் மலையுமே யிருக்க-தெள்ளுமையாள்
அஞ்சல் அஞ்சல் என்று தினம் அண்டையிலே தானிருக்க
நஞ்சு தனை ஏன் அருந்தினார்

Saturday, July 26, 2008

பழம் பாடல் பெரிய புராணம்

 நீலகண்டர் மனைவி சொன்ன வார்த்தையொன்றில்
  நிற்கின்றார் மனைவியவர் துணையுடனே
  காலமது இறைவர் அவர் காமனையே
  கண்ணுதலால் எரித்தவரின் வேலையது
  ஆலமுண்டார் அவர் அன்புத் தண்டனையில்
  அகப்பட்டார் நீலகண்டர் அதனால் அந்த
  சீலமுள்ளார் எமைத் தீண்ட வேண்டாம் என்று
  செப்பியதில் தப்புணர்ந்து நிற்கின்றாரே

  இருவருமே ஒரு வீட்டில் இருக்கின்றாராம்
  இருந்தாலும் உடல் சார்ந்த வாழ்க்கையில்லை
  திரு மகளோ துணைவருக்காய்எல்லாம் அங்கு
  தினப்படியே செய்கின்றார் குறைகளின்றி
  வருபவர்க்கும் போவபர்க்கும் விருந்து ஒம்பி
  வாழ்க்கையதன் சிறப்பையெல்லாம் போற்றுகின்றாராம்
  ஒருவருக்கும் தெரியாமல் இந்த வாழ்வை 
  உவப்புடனே கொண்டாராம் இறையை ஏத்தி

  சேக்கிழார்
  கற்புறு மனைவியாரும் கணவருக்கான எல்லாம்
  பொற்புறு மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
  இற்புறத்தெழுந்திடாமல் இருவரும் வேறு வைகி
  அற்புறு புணர்ச்சியின்மை அயலறியார்து வாழ்ந்தார்