Monday, May 3, 2010

தேர்தல் போதும்

பதவிகளைக் கைப் பற்றல் என்ற வேட்கை
பணம் சேர்த்தல் கோடிகளில் என்ற ஆசை
உதவுவது ஏழையர்க்கு என்ற எண்ணம்
ஒரு சிறிதும் இல்லாத கோழைகளே
பதவிகளில் அமருகின்றார் அமர்ந்து கொண்டு
பல்லிளித்து அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காய்
உதவுகின்றாற் போல் நடித்து ஏழையரை
ஊர் ஊராய் ஏய்க்கின்றார் வெட்கமின்றி


பள்ளிகளில் பணம் இன்றி இடங்கள் இல்லை
படிக்கின்ற ஏழையர்க்கு உதவல் இல்லை
கள்ள மனம் கொண்டோராய் தம் குழந்தை
கற்பதற்கு வெளி நாடு அனுப்புகின்றார்
உள்ளவர்கள் வாழ்வதற்கே உதவுகின்றார்
உரிமையற்று ஏழைகளோ கலங்குகின்றார்
நல்லவர் போல் இலவசங்கள் தந்து அந்த
நாதியற்றோர் தனை மேலும் ஒழிக்கின்றாரே


அரசியலார் பிள்ளைகளை படிப்பதற்கு
அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
அதுதானே நியாயம் அதை மக்களும் தான்
அதிரடியாய்ப் போராடி உணர்த்த வேண்டும்
பொது வாழ்வு என்பதுவே மக்களோடு
பொழுதெல்லாம் இருப்பதுவும் உழைப்பதுவும்
இது வெல்லாம் போராடிப் பெறுதல் வேண்டும்
இணங்காதார் தமை வீழ்த்த தேர்தல் போதும்

2 மறுமொழிகள்:

said...

மிக சிறந்த கவிதை இக்காலத்திற்கு...

said...

'நல்லவர் போல் இலவசங்கள் தந்து அந்த நாதியற்றோர் தனை மேலும் ஒழிக்கின்றாரே"

ஏனோ, இலவசங்களைப் பெறவும் வாக்களிக்கும் நம் சமூகம்.

தேர்தல் என்பது முதல்போட்டு செய்யும் தொழில்...