Sunday, November 7, 2010

அமைச்சரென்ற பதவி கொண்டு

பணம் ஒன்றே வாழ்க்கை யென சேர்த்து வைக்கும்
பகட்டான தலைவர்களே உங்களால் தான்
தினம் இங்கே கொலை கொள்ளை கற்பழிப்பு
தெய்வமெனும் குழந்தைகளைக் கொல்லுகின்றார்
மனமில்லாக் கொள்ளையர்கள் நீங்களன்றோ
மணமில்லாப் பணம் பெரிதாய்க் காட்டிக் கொன்றீர்
குணமொன்றே பெரிதென்ற காந்தி மகான்
கொள்கையினை விட்டீர்கள் குடும்பம் காப்பீர்


உம் வீட்டில் மரணம் என்றால் ஒலமிட்டீர்
ஊர் வீட்டு மரணங்களில் கவலையேது
தம் பெண்டு பிள்ளை யென்றே வாழ்க்கை கொண்டீர்
தரமின்றிப் பணம் சேர்ப்பீர் வெட்கம் இன்றி
புன்னகைப் பூக் குழந்தைகளைக் கொல்லுகின்றார்
பொருள் கேட்டுத் தா என்று மிரட்டுகின்றார்
மன்னவரே நீங்களும் தான் கொல்லுகின்றீர்
மதிப்பாக அமைச்சரென்ற பதவி கொண்டு

0 மறுமொழிகள்: