Monday, February 16, 2009

வணங்குகின்றேன்

காட்டுகின்றார் நல்வழியே காட்டுகின்றார்
கடவுளவர் நல்வழியே காட்டுகின்றார்
பூட்டுகின்றார் நல்வினையே பூட்டுகின்றார்
பொறுப்போடு வாழ்வதற்கு வகைகள் செய்தார்
கூட்டுகின்றார் நல்லவரை நண்பரெனக்
கொள்கையுடன் வாழ்வாரைச் சேர்த்து வைத்தார்
பாட்டினிலே அவர்தம்மைப் பாடுதற்கும்
பைந்தமிழை எனக்களித்துப் போற்றுகின்றார்

நாட்டு மக்கள் எனைக் கண்டு போற்றி நிற்க
நலமுடையோர் கூட்டமெல்லாம் வாழ்த்தி நிற்க
கேட்காமல் நல்லதெல்லாம் தானளித்து
கேளாரும் என் பேச்சைக் கேட்க வைத்து
ஆட்டுகின்றார் எம்மிறைவர் எம்மை நன்கு
ஆடுகின்றேன் பைந்தமிழால் ஆடுகின்றேன்
கூட்டுவித்த எம்மிறையே எந்தனது
குலம் காக்கும் பேரிறையே வணங்குகின்றேன்

0 மறுமொழிகள்: