Saturday, February 21, 2009

தலைவரானார்

அகிம்சையினை அரசியலில் இணைத்து வென்ற
அண்ணல் காந்தி சட்டமதைக் கற்றவர் தான்
அகிலமெல்லாம் போற்றி நின்ற அண்ணல் சீடர்
அன்பு நேரு அவர் சட்டம் படித்தவர் தான்
தரித்திராராய் அடிமைகளாய் நீண்ட நாட்கள்
தனை உணர மறந்தவர்களாய் இருந்தவர்க்காய்
பவித்திரமாம் புத்த மதம் தழுவி வென்ற
பாபா அம்பேத்கர் சட்டம் படித்தவர் தான்
தனித்தனியாய் நின்று துன்பம் தர நினைத்த
தான்தோன்றி மன்னர்களை ஆற்றல் கொண்டு

ஒரு குடைக்குள் கொண்டு வந்த சர்தார் படேல்
உத்தமரும் சட்டத்தைப் படித்தவர்தான்
இருபதோடு இருபதாண்டு தண்டனையை
இன்முகத் தோடேற்றுச் சிறை சென்ற வீரர்
கரு மனத்து வெள்ளையரின் சிறைக் கூடத்தில்
கல்லுடைத்துச் செக்கிழுத்த சிதம்பரமும்
அருமை மிகு சட்டமதைப் படித்தவர்தான்
அன்று சட்டம் படித்தவரே தலைவரானார்
பெருமை இது நம் நாட்டின் பெருமை இது
பெரியவர்கள் தேடி வைத்த பெருமை இது

1 மறுமொழிகள்:

said...

சட்டம் படித்தவர்கள் ஆண்ட மண்ணில்தான் இன்று சட்டமும், காவலும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.:-(