Monday, September 1, 2008

குறட்கருத்து

 ஆண் பிள்ளை தனை மட்டும் சான்றோனென்று
  அறிந்தாலே தாயவளும் மகிழ்வாளென்று
  வான் போற்றும் வள்ளுவரும் சொல்லி நின்ற
  வகை கண்ட பெண்ணொருத்தி என்னைக் கேட்டார்
  ஏன் பெண்ணை வள்ளுவரும் சொல்லவில்லை
  எகத்தாளக் கேள்வி அது புரியாக் கேள்வி
  நான் சொன்ன பதிலதனை இங்கே சொல்வேன்
  நற்றமிழீர் வள்ளுவனைப் போற்றி நிற்பீர்


  தாயவளும் பெண்ணென்ற காரணத்தால்
  தனை உணர்ந்து மகிழுகின்றாள் ஊருக்குள்ளே
  தூயவனாய் தன் மகனும் இருப்பதாலே
  துடியிடையின் பெண்களுக்குத் துன்பமில்லை
  சேய் அவனின் நற் குணத்தால் ஊரிலுள்ள
  சேயிழையார் அனைவருமே வாழ்த்தி நின்றார்
  தாய் அதனால் மகிழுகின்றார் ஆடவரின்
  தரமொன்றே பெண்களினைப் போற்றும் என்று

  இல்லறவியல் மக்கட்பேறு குறள் 9

  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
  சான்றோன் என்க் கேட்ட தாய்

1 மறுமொழிகள்:

said...

நெல்லை கண்ணன் அவர்களுக்கு வணக்கம்,
தங்கள் கவிதைகளைப் படித்தேன். தாங்கள் மரபு கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் மகிழ்ச்சியுற்றேன்.

நான் தற்போது உலகத் தமிழ் மரபுக் கவிஞர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
அதற்காக orkut இணையதளத்தில் "தமிழ் மரபுக் கவிதைகள்" என்ற பெயரில் ஒரு குழுமத்தை(orkut community) உருவாக்கியுள்ளேன்.
குழுமத்திற்கு மரபுக் கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்து வண்ணம் உள்ளனர்.
இக்குழுமத்தில் இணைவதால் பல மரபுக் கவிஞர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் காணவும், அவர்களின் கவிதைகள் குறித்து கருத்தாடவும் கூடும்.
நாம் இவ்வாறு இணைவதன் மூலம் மரபுக் கவிஞர்களை மேலும் ஊக்குவிக்கவும், இன்னும் பல மரபுக் கவிஞர்கள் தோன்றவும் கூடும்
தாங்களும் மரபுக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்பதால் தங்களையும் "தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தில் இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

orkutல் இணைய: www.orkut.com

"தமிழ் மரபுக் கவிதைகள்" குழுமத்தின்(orkut community) முகவரி: http://www.orkut.co.in/Community.aspx?cmm=49272456

orkutல் என்னுடைய பக்கம்: http://www.orkut.co.in/Profile.aspx?uid=10865675864455679557

என்றும் அன்புடன்
இராஜகுரு.