Tuesday, January 12, 2010

தேசியப் புலம்பல்

கோட்டையிலே ஒரு காலத்திலே எங்க
கொடி பறந்தது ராமாரி எங்க
கொடி பறந்தது ராமாரி இன்று
கூட்டணிக் கொள்ளையில் எங்களது கொடி
கோவிந்தா ஆனது ராமாரி ஆமா
கோவிந்தா ஆனது ராமாரி

வேட்டையாடியேவெள்ளையரை ஒட்டி
விடுதலை வாங்கினோம் ராமாரி நாங்க
விடுதலை வாங்கினோம் ராமாரி இன்று
வேட்டையாடுவோர் கால்களுக்குக் கீழே
விழுந்து கிடக்கிறோம் ராமாரி ஆமா
விழுந்து கிடக்கிறோம் ராமாரி

பாட்டையைப் போட்டு பாதைகள் நல்லதாய்ப்
பார்த்து பார்த்துச் செஞ்சார் ராமாரி முன்னோர்
பார்த்து பார்த்துச் செஞ்சார் ராமாரி இன்று
கோட்டையைக் காப்பாத்த செஞ்சிடும் கொள்ளையில்
கூட்டாகி ஆடுறோம் ராமாரி நாங்க
கூட்டாகி ஆடுறோம் ராமாரி

காந்தி காமராசர் என்று பலப் பல
கண்ணியமானவர் கொண்டிருந்தோம் ஆமா
கண்ணியமானவர் கொண்டிருந்தோம் இன்று
வாந்தி எடுத்திடும் வாழ்க்கைச் சரித்திரம்
வக்கணையாய்க் கொண்டு வாழுகின்றோம் ஆமா
வக்கணையாய்க் கொண்டு வாழுகின்றோம்

சேர்ந்த இடத்தாலே சீரழிவா இல்ல
சேரும் முன்னால் வந்த சீரழிவா ஆமா
சேரும் முன்னால் வந்த சீரழிவா
சேரும் முன்னாலேயே சீரழிவைத் தேடி
சேர்த்ததனால் வந்த சீரழிவே ஆமா
சேர்த்ததனால் வந்த சீரழிவே

0 மறுமொழிகள்: