Tuesday, January 26, 2010

குடியரசு தின அணிவகுப்பும் நமது அரசியலாரும்

கண் கவரும் அணிவகுப்பு முப்படையின்
கம்பீர அணிவகுப்பு காண்கையிலோ
மண்ணிதனைக் காப்பதற்காய் இந் நாட்டு
மக்களினைக் காப்பதற்காய்த் தமையே தந்து
பெண்டு பிள்ளை அனைவரையும் விட்டு விட்டு
பெரிய மலைப் பனியினிலும் எல்லையெங்கும்
கண் துயில நேரமின்றிக் காத்து நிற்கும்
காளையரைக் காண்கின்ற அரசியலார்

எண்ணுவதேயில்லை இந்தத் தியாகம் தன்னை
எண்ணி விட்டால் தம் குடும்பம் பிள்ளையென்று
புண்ணாக்கி ஏழையரைப் புலம்ப விட்டு
பொதுப் பணத்தைத் தம் பணமாய் ஆக்கி ஊரில்
எண்ணில்லாச சொத்துகளைச் சேர்த்து நிற்கும்
இழி நிலையைக் கருதி நாணித் துயருறாரோ
வண்ண மய அணி வகுப்பு கண்ணில் நீரை
வரவழைத்த அணிவகுப்பு தலைவர் மாரே


கண்ணிருந்தும் குருடரென வாழுகின்ற
கண்ணியத்தை விற்று விட்ட திருடரென
மண்ணுக்குள் போவதற்குள் மண்ணிதற்கு
மானமுடன் காரியங்கள் செய்ய எண்ணும்
தன் மானம் ஒரு நாளும் வந்திடாதோ
தலைவர்களே தலைவர்களே கேள்வி ஈது
என் செய்ய இது எங்கள் விதிதான் என்றால்
எரிந்தவுடன் மறைந்தொழிவீர் ஒழிவீர் நீரே

0 மறுமொழிகள்: