Sunday, January 17, 2010

குறைந்திடல

கோயில் இருக்குது சாமி இருக்குது
குற்றங்கள் ஒன்றும் குறையவில்லை
நோயில் இருக்கின்ற நாடிதைக் காப்பாத்த
நூறு விதத் தெய்வம் போதவில்லை
பாயில் கிடக்கின்ற ஏழையின் வாக்கையும்
பக்குவமாகவே வாங்கி இங்கு
தாயும் பிள்ளையுமாய் நாட்டினை ஆள்கின்றார்
தரித்திரரைக் கண்டு நாணமில்லை


ஏறும் விலைவாசித் துன்பத்தில் சாகின்ற
ஏழை மக்கள் தம்மைப் பார்ப்பதில்லை
ஏறி ஏறி இவர் பயணித்த விமானத்தால்
ஏற்பட்ட செலவையும் கொடுக்கவில்லை
சாறு பிழிந்ததை உண்டு விட்டு இவர்
சக்கையையும் விற்று ஆடுகின்றார்
மாறு பாடு காணும் எண்ணமே இல்லாமல்
மக்களும் வீண் வாழ்க்கை வாழுகின்றார்


கோயில் கோயிலாகச் சென்று வணங்கியும்
கும்பிட்ட தெய்வங்கள் காக்கவில்லை
கோயில் வருமானம் தன்னையும் அரசியல்
கொள்ளையடிக்குது கேட்பதில்லை
வாயிலும் வயிற்றிலும் அடித்து அழக் கூட
வறுமையில் வாடுபவர்க் கியலவில்லை
தாயின் மணிக் கொடி தன்னை வணங்கிடத்
தன் மானம் மட்டும் குறைந்திடல

0 மறுமொழிகள்: