Monday, April 28, 2008

தமிழர் காமராஜர்

     தமிழ்த் தாயார்  ஈன்றெடுத்த  காமராஜர்
          தாய் நாட்டைக்  காக்க வந்த  பீமராஜர்
     அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
          அகிலமெல்லாம்  தமிழ்  கொணடு சென்ற ராஜர்
     வட புலத்தில்  காங்கிரஸின் தலைவராகி
          வாயாடி நின்ற தன்புத்  தமிழிலேதான்
     கடல் கடந்து  ரஷ்ய நாட்டில்  நின்ற போதும்
          கனித் தமிழே  பேசி நின்ற தனித் தமிழர்

     தான் பெறவே இயலாமல்   போன  கல்வி
          தமிழ்  ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
     ஊன் உடம்பு  உயிர் தந்த தாய்க்குக் கூட்
          உண்மைக்குப் புறம்பாக உதவாத்  தேவன்
     ஏன்  என்று  எதனையுமே கேட்டுக் கேட்டு
          ஏழைகட்காய்ச்  செய்து நின்ற  மாமனிதன்
     வான்  சென்றான்  என்கின்றார்  இல்லையில்லை
          வாழ்கின்றான்  எம்மோடு  இன்றும்  இங்கே

     ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
          ஏழையென்றே வாழ்ந்தான்  காண்  தோல்வி தந்தார்
     கோழையென  அழுதானா  இல்லை என்னைக்
          கூப்பிடுங்கள்  என்றெல்லாம்  குமுறினானா
     வாழையடி  வாழையென  காந்தி  பேரை
          வாழ்விக்க வந்தவன் காண்  செல்வனான்
     கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
          கொடை அளித்தான்  அதனாலே செல்வனான்

     ஏழையென்று  சொல்லாதீர்  அவனை  எங்கும்
          ஏற்றங்கள்  அவனாலே பெற்ற  நீவிர்
     வாழையடி  வாழையென  கல்வி  இன்று
          வந்ததுங்கள்  வீட்டிற்குள்  அவனால்ன்றோ
     பேழையென  நெய்வேலி  திருச்சியிலே
          பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
     வாழ்வதற்கு  அனைவருக்கும்  உணவளிக்கும்
          வயற்காட்டுத்  தோழருக்காய் அணைகள் தந்தான்

     ஊழை  வெல்ல  முடியாராய்  ஒடுக்கப் பட்டோர்
          ஒய்ந்திருந்த  நேரத்தில்  எழுந்து  வந்தான்
     கோழை மனம்  விட்டவரும்  கொடிகள் ஏந்தி
          கொள்கை கண்டு  வெற்றி பெற வழிகள் செய்தான்
     ஏழையல்ல செல்வன்  அவன்  என்றே  சொல்வேன்
          ஏனென்றால்  செழுங் கிளையைத்  தாங்கி  நின்றான்
     நாளை  வரும்  இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
          நல்கி நிற்பீர்   ந்ன்றி  கொல்லா நற்றமிழீர்

6 மறுமொழிகள்:

said...

காமராஜர் பீமராஜர் என்று சொன்னால்
காந்திமகான் தருமரெனக் கொள்ளலாமோ
ஆமென்றால் பண்டிதராம் அருமை நேரு
அர்ச்சுனனாய் நிற்கின்றார் அலவோ அய்யா!
தேமதுர விருத்தத்தில் விருதுப்பட்டி
தூயவரைக் கவிதையிலே படம்பிடித்தீர்
சேமமுறு நகுலனொடு சகாதேவர்கள்
சரித்திரத்தில் யாரென்று சொல்வீர் அய்யா!!

said...

நகுலனென்றால் சாஸ்திரியார்
கொள்க அய்யா
நல்ல சகாதேவன்
ஜெகஜீவன்ராம் தானே
புகல வைத்த உந்தமக்கு
நன்றி சொன்னேன்
புலவருக்கு மீண்டும் ஒரு
வணக்கம் தந்ந்தேன்

தங்கள் நெல்லைக்கண்ணன்

said...

பாரதத்தின் பெருமைதனைக் காத்துநின்ற
பாண்டவர்கள் யாரென்ற பதிவை இங்கே
கார்வண்ணன் கண்ணன்தான் அறிவார் என்ற
காரணத்தால் நான்கேட்டேன் நன்றி அய்யா

said...

காமராஜரை கவிதையில் கண்டதும்
பின்னூட்டம் கவிதையாய் வந்ததும்
பதிலாகவும் கவிதையே தந்ததும்...
உங்களால்தான் இயலும்.
வணக்கங்கள்!

said...

காமராஜரை கவிதையில் ஏற்றி அழகு பார்க்கும் உம் இலக்கிய பணி தொடர்க பல்லாண்டு

said...

Iyya , ennal tamzil thattachu seiya iyalavillai.Porutharulka. Kamatchi{kamarajarai] iththunai eliya tamizil padippathu mika mika nandru.Vaazka Pallandu