Sunday, August 31, 2008

இரட்டையர் பாடல்

கோயில்களில் அக்காலம் இறைவனுக்கு
  கொண்டு சென்று படைக்கின்ற உணவு எல்லாம்
  வாயிலிலே மண்டபத்தில் வந்து தங்கும்
  வழிப் போக்கர் தமக்கேதான் அளித்து நின்றார்
  பாவலர்கள் புலவர்களும் இரவு நேரம்
  பசியாற அங்கேதான் வந்து சேர்வார்
  கோவில் ஒன்றில் இரட்டையரும் வந்து சேர
  குருக்கள் கொண்டு சென்று விட்டார் உணவை முற்றும்


  பசித் துன்பம் போகவில்லை என்று சொல்லி
  பாடுகின்றார் இருவருமே ஆகா ஆகா
  வசிக்கின்றார் இறைவன் அந்தக் கோயிலிலே
  வகையாக அவரிடத்தில் கேட்டு நின்றார்
  பசி தீர நீர் மட்டும் சோறு உண்டு
  பரிதவிக்க விட்டீரே எம்மை மட்டும்
  நிசியிதிலே பசியோடு நிற்கின்றோமே
  நெற்றிக் கண் சிவனாரே நியாயம்தானா


  இரண்டடியில் ஒருவர் இந்தக் கேள்விகேட்க
  இறவனுக்காய் இன்னொருவர் பதிலைத் தந்தார்
  நிரந்தரமாய் நடக்கின்ற கேலிக் கூத்தை
  நினைந் துணர்ந்து சிரிக்கின்ற விதமாய்ச் சொன்னார்
  தினம் தினம்தான் சோறு வரும் முன்னால் வைப்பார்
  தேடி வைத்த சங்கதனை ஊதி நிற்பார்
  மனம் மகிழ முரசடிப்பார் கொட்டடிப்பார்
  மற்றபடி நானெங்கே சோறு கண்டேன்


  சேவை மனம் கொண்டார்கள் செய்து வைத்த
  சிறப்பெல்லாம் இவ்வாறே அன்று முதல்
  பாவமதாய் மாறி விட்ட பழியை யன்றோ
  பாட்டாலே உணர்த்தி நின்றார் இரண்டு பேரும்
  கோவிலுக்குள் இருக்கின்ற சிவனே தன்னை
  கூறு கெட்ட மூளி என்று சொல்ல வைத்தார்
  தாவி வரும் பாட்டதனின் அழகைப் பாரும்
  தமிழினத்தீர் கோயிலகளின் பெருமை போற்றும்


  தேங்கு புகழாங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
  நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ - போங்காணும் 
  கூறுசங்கு தோல் முரசு கொட்டோசையல்லாமல்
  சோறு கண்ட மூளி யார் சொல்

0 மறுமொழிகள்: