Wednesday, August 6, 2008

பொழிவின் பொன் விழா வேண்டுகோள்

 பணம் படைத்தார் என்பதனால் அவரிடத்தே
  பல்லிளித்து நிற்கின்ற பழக்கமில்லை
  மனம் படைத்தார் மத்தியிலே நாணம் வந்து
  மடக்குவதால் கேட்பதற்கு வாயே யில்லை
  குணம் படைத்தார் தம்மிடத்தே கேட்பதற்கு
  குடும்பத்தின் பெருமையது விடவேயில்லை
  தினம் படிப்பீர் எந்தனது படைப்பை யெல்லாம்
  தெரிந்து கொள்வீர் என் நிலையை மன்னிப்பீரே

2 மறுமொழிகள்:

said...

anbarey, vanakkam. ungalukku ponvizha! enil
medaith thamozhukkanro ponvila!
Entra pozhuthil thayaga maginthean.
S.A.Shahul Hameed,
Kadayanallur.

said...

வழக்கம்போல் வந்து மடிக்கணினி ஏந்தித்
தயக்கமாய்ப் பின்னூட்டம் தான்பார்த்தேன்; ஆ!ஆ!ஆ!
என்ன வியப்பிதுவோ? என்கண்பொய் சொல்லியதோ?
சின்னவன் கூட்டிற்கு மன்னவனா வந்து
மலர்தூவி வாழ்த்தியது!? மாலைப் பொழுதா
அலரா முகையை அணைத்துப்பா ராட்டியது!?
மேகமா கானலை மெத்தப் புகழ்ந்தது!?
காகமாம் என்னைக் கருதியதோ பூவை!?
பழுத்தப் பழமா படுபிஞ்சை நாடி
வழுத்தி விருத்த வகைசெய் துவந்தது!?
நெல்லைக் கடலிந்த நெத்திலியை வாழ்த்தியதை;
வெள்ளி உவந்தெழுத்து விட்டிலை ஏற்றியதை;
கூரை ஒழுக்கைக் குலவருவி கொஞ்சியதை;
ஊரை எழுப்பியுரைத் தாலும்ஊர் நம்பாதே!
ஆகா! பயன்செய்தேன் ஆர்க்கும் தமிழ்க்கடலே
பாகாய் உவந்துருகிப் பாராட்டும் போழ்தினிலே!
மானென்றே எண்ணி மறுமொழி இட்டிருந்தீர்
ஆணென்பேன் என்னை அகவையொரு முப்பதின்கீழ்!
முன்னம் பழகாத மோகினியின் முன்னிரண்டு
தென்னங்காய் கண்டால் திறமழியும் காளையர்போல்
மன்னவனே உன்னெழுத்தை மாந்திக் களிகொள்ளும்
பொன்னளி நான்என்பேன் பொய்யில்லை உண்மையிது!
நாட்டிற்கே ஏற்றதொரு நற்கருத்தைக் கூறுபழம்
பாட்டிற்குப் பாட்டால் பகருகிறீர் பாகுரைகள்!
பாக்கள் படைத்திடலாம் பாருள்ள பாவலர்கள்;
பாக்-கள் பிழிந்தருளும் பாங்கறிந்த பாவலன்நீ!
முன்னம் சிறுவயதில் முன்மாலைப் பொழுதினில்
சின்னத் திரையில்இச் சின்னவன் உன்பேச்சைக்
கண்ணிமையா நின்றுக் கருத்தூன்றிக் கேட்டதெல்லாம்
எண்ணுகையில் என்நெஞ்சம் ஏந்திசையில் பண்பாடும்!
அப்போதே உன்சுவைஞன் ஆகினேன்; என்பேச்சில்
எப்போதும் ஏற்ற இடம்பிடிக்கும் நாயகன்நீ!
உற்ற வலைநிறுவி ஒப்பில்லாப் பாப்புனைந்து
கற்ற வரைக்கவரும் கல்விக் கடல்உன்
எழுத்தெண்ணி வாசித் தெழுமின்பத் தாலே
கொழுத்தநற் சேவலைப்போல் கொக்கரித்தேன்; கொக்கரித்து
முன்னூட்டம் தன்னை முழுதாய்ப் படித்தாலும்
பின்னூட்டம் போடப் பெரிதாற்றல் இல்லையெனும்
தாழ்வு மனப்பான்மை தாக்கியதால் அய்ய!உனை
வாழ்க! எனவாழ்த்த வாயின்றி நின்றேன்;
தருவே! தகையே! தமிழே!என் பாட்டின்
கருவே! கனியே! கருத்தே! உனைப்புகழ
நேரமின் மையாய் நினைக்கவில்லை; முற்றுரைக்கும்
தீரமின் மையால் தெரிந்து!

அகரம்.அமுதா