Thursday, June 12, 2008

பழம் பாடல் புதுக்கவிதை

            வளை கொண்ட  கையொடு  மூங்கில  போல்  தோளுமே
                  வடிவாகக் கொண்ட  என் தோழி
            பகை  வெல்லும்  வாட்களைக்  கண்களாய்க்  கொண்டும் நற்
                  பனிப் பார்வை கொண்டு  நீ வாழி
            இளையவள் என் கண்ணில் பாண்டியன்  படுதலை
                  என் அன்னை  தடுப்பதைப்  பார் நீ
            பகைவரைப்  போலவே  அன்னையும்  என்னிடம
                  பழி  காணல்  என்னடி   நீதி


           கதவினை  அடைத்தெனை  உள்ளேயே   வைத்தலில்
                  கடுமைகள்  காட்டலைப்  பார்  நீ
           பதமான  வார்த்தைகள்  ஒன்றுமே  இல்லை நான்
                  படுகின்ற  பாட்டினைக் கேள் நீ
           இதமின்றிக் கொல்கின்ற  இவளது வாழ்க்கையில்
                  இளமையே  இருந்தது  இல்லையோ
           பதமான  காதலும்  இவளது  வாழ்க்கையைப்
                  படுத்தியதால்  இந்தத் தொல்லையோ


           ஒரு வேளைப்  பிறக்கையில்  முதியவளாகவே
                  உதித்தனளோ  எந்தன்  அன்னையே
           கருவுற்று  எனைப்  பெற்றாள்  என்கையில் புரிகிறேன்
                  கன்னியாய்  இருந்துளாள்  உண்மையே 
           திருவுற்ற  வேலதால் பகைவர்கள்  தம்மையே
                  தெருவுறச் செய்த  நம்  பாண்டியன்
           மருவற்ற  கோலத்தைப்  பார்ப்பதில்  இவட்கென்ன
                   மறந்தனள் இளமையில்  வாழ்ந்ததை



                                                               முத்தொள்ளாயிரம்

                        வளையவாய்  நீண்ட  தோள்  வாட்கணாய்  அன்னை
                        இளையளாய்  மூத்திலள்  கொல்லோ   -  தளையவிழ்தார்
                        மண்கொண்ட  தானை  மறங்கனல்  வேல்  மாறனைக்
                        கண் கொண்டு  நோக்கல்  என்பாள்
            

1 மறுமொழிகள்:

said...

தூங்கும் வரைப் படிப்பிற்காய் நடிக்கின்றது

அருமையான வரிகள்...!