Sunday, June 22, 2008

காத்து நிற்பார்

விபச்சாரம் என்கின்றார் உலகமெங்கும்
வீணாகப் பெண்களையே கொல்லுகின்றார்
அபச்சாரம் அவர் மட்டும் செய்தார்ப் போல
ஆடுகின்றார் ஊடகங்கள் அனைத்திலுமே
உடல் விற்றுப் பிழைக்கின்ற பிழைப்பை விட
உயிர் விட்டால் சிறப்பென்றும் சொல்லுகின்றார்
உடல் பெற்றுச் சுகிக்கின்ற ஆடவரோ
உயிரோடு வாழ்வாராம் மானமின்றி


அழகான பெண்ணல்ல அழ்கேயற்ற
அவர் கூட பொதுப் பணிக்கு வந்து விட்டால்
குழைகின்றார் ஆடவர்கள் அவரையுமே
கொஞ்சி அவர் வாழ்க்கையினைக் குலைக்கின்றாரே
பழகுகையில் கற்பெல்லாம் பொய்மை என்றே
பசப்புகின்றார் பெண்களுக்கு விடுதலையே
உளம் கவர்ந்த யாரோடும் கலந்து கொள்ளல்
உடல் அல்ல கற்பென்றும் ஓதுகின்றார்


சிலர் இதனைச் செய்கின்றார் பலரோ இந்தச்
சிந்தனையை மனத்துக்குள் கொள்ளுகின்றார்
இலரான பெண்கள் வந்து உதவி கேட்டால்
இல்லையென்று சொல்லாமல் உதவுதலே
மலரான அவர் தம்மை கசக்குதற்காய்
மனிதர் போன்றே நடிப்பார்கள் செய்யும் வேலை
உளம் கொண்ட நல்லவரோ பெண்கள் தம்மை
உயர் நட்பாய்க் கொண்டவரைக் காத்து நிற்பார்

0 மறுமொழிகள்: