Thursday, November 13, 2008

உலகை வெல்வீர்

 இறைவன் அவன் என்னோடு இருப்பதனால்
  என்றென்றும் அன்பு செய்து வாழுகின்றேன்
  தலைவன் அவன் எனைத் தழுவிக் கொண்டதனால்
  தமிழோடு தமிழோடு வாழுகின்றேன்
  குறையென்று எண்ணாமல் அனைத்தையுமே
  கொடுத்தவனே அவன் என்று உணர்வதனால்
  நிறைவாக வாழுகின்றேன் தமிழாம் அன்னை
  நிலை பேறு தந்து நின்றாள் மகிழுகின்றேன்


  தொட்டதெல்லாம் நினைவிலே கொண்டு தந்து
  தூய தமிழ்த் தாயவளும் வாழ்த்துகின்றாள்
  கெட்டவரை நல்லவராய்க் காணுகின்ற
  கேண்மையையும் அவளேதான் தந்து நின்றாள்
  திட்டுகின்றார் என்றாலும் அவருக்காக
  தினந்தோறும் இறைஞ்சி நிற்பேன் இறைவனையே
  கட்டுரைக்கவில்லை இது உண்மை உண்மை
  கனித் தமிழீர் அன்பு செய்து உலகை வெல்வீர்

1 மறுமொழிகள்:

said...

தமிழோடு வாழுகின்றீர்உண்மைஅய்யா
தமிழாக வாழுகின்றீர் வணங்குகிறோம்