Showing posts with label காந்தி அடிகள். Show all posts
Showing posts with label காந்தி அடிகள். Show all posts

Tuesday, August 9, 2011

விதிதான் போலும்

வெள்ளையனே வெளியேறு என்று காந்தி
வீரமுடன் முழக்கமிட்ட நன்னாள் இந்நாள்
கள்ளமில்லாக் கதராடை உள்ளம் போல
கண்ணியத்தின் பேரூருவம் கொண்டார் எல்லாம்
துள்ளி அன்று வந்தார்கள் விடுதலைக்காய்த்
துச்சமென உணர்ந்தார்கள் உயிரை அன்று
எள்ளி நகையாடுகின்ற நிலையில் இன்று
இருக்கின்றோம் என்ன செய்ய விதி தான் போலும்

Saturday, October 2, 2010

அண்ணலே

அண்ணலே
உன் பிறந்த நாள்

சமாதியில்
பஜனை உண்டு

சிலைகளுக்கு
மாலை
அணிவிப்பவர்
சிலர்
நீ
உயிரோடிருந்தால்
உன்
அருகில் வரவே
அஞ்சியிருப்பார்கள்

உன்னை
மறந்து விட்டோம்
என்கின்றனர்

அதனால்தான்
அமைச்சர்களாய்
இருக்க முடிகின்றது

ஆட்சி
செய்ய
முடிகின்றது

உன்னை
மறைத்து
விட்டோம்
என்கின்றனர்

என்ன செய்ய
எங்களுக்கும்
மனச் சாட்சி
வந்து
விட்டால்

சாஸ்திரியும்
இதே
நாளில்
பிறந்த
கொடுமையை
என் சொல்ல

அதனால் தான்
மனம்
வெதும்பிய

கறுப்புக்
காந்தி
இன்று
மறைந்தார்

Saturday, January 30, 2010

குமரப்பா

குமரப்பா காந்தியவர் கொள்கையினை
கொண்டிருந்தார் இறுதி வரை உயிர் மூச்சாக
தமரப்பா ஏழையர்க்கும் இந்தியர்க்கும்
தறி கிராமத் தொழில் வழியே வாழ்வதுவே
அமரப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்
அற வழி என்றுரைத்து நின்ற அன்பரப்பா
எவர் கேட்டார் அதனால் தான் இந்தியாவை
எவர் எவர்க்கோ சந்தையென ஆக்கி விட்டார்

சுட்டு விட்டார் காந்தியினை

தீண்டாமைக் கொடுமையினை இந்து மதம்
தீண்டாமல் தூக்கி உடன் எறிய வேண்டும்
வேண்டாத அக் கொடுமை இருக்கும் என்றால்
வேறு மதம் தீண்டாமை இல்லா மதம்
ஆண்டவரை வணங்குதற்கு அதிலே சேர்ந்து
அதனையே என் மதமாய் ஆக்கிக் கொள்வேன்
பூண்டார் இம்முடிவினையே காந்தி அண்ணல்
பொறுப்பாரா அதனால்தான் சுட்டு விட்டார்


வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
வழி சொன்னார் அடிகள் இங்கு மிகத் தெளிவாய்
பிற சாதி தன்னில் மணம் கொண்டு விட்டால்
பிரச்சினைகள் தீர்வதுடன் சாதி தானும்
இறந்தொழியும் அதன் பின்னர் அனைவருமே
இந்தியர்கள் என்ற பெயர் கொண்டு வாழ்வோம்
சிறந்தோங்க வழி இதுதான் என்று சொன்னார்
சிறு மதியார் அதனால்தான் சுட்டு விட்டார்

Saturday, January 3, 2009

வள்ளுவரும் காந்தியடிகளும்

அன்பின் வழியது உயிர் நிலை என்று
அன்றே சொன்னார் வள்ளுவரும்
அன்பே வழியாய் உலகை வென்றார்
அண்ணல் காந்தி அடிகளுமே


இன்சொல்லோடு இன்முகம் ஒன்றே
ஏற்றம் என்றார் வள்ளுவரும்
தன் வாழ்வெல்லாம் அதையே கொண்டு
தாயகம் வென்றார் காந்திமகான்


வாய்மை ஒன்றே உலகம் வெல்லும்
வழியென்ற் றுரைத்தார் வள்ளுவரும்
தாய் போல் அதனைத் தலை மேல் ஏற்று
தவமாய்க் கொண்டார் காந்தி மகான்


கள்ளையுண்ணும் கொடுமை கண்டு
கடிந்தே நின்றார் வள்ளுவரும்
கள்ளை எதிர்த்துப் போரே செய்து
கண்ணியம் காத்தார் காந்தி மகான்

Thursday, October 2, 2008

சுட்டு விட்டார்

 வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
  வழியொன்றெ ஒன்று என்று அண்ணல் சொன்னார்
  பிற சாதி தனில் பிறந்தோர் உறவாய்க் கொண்டு
  பெண் கொடுத்தீர் என்றாலே போதும் அங்கு
  வரதட்சணை ஒழியும் சாதி என்னும் 
  வன்முறையும் ஒழிந்து விடும் என்று சொன்னார்
  பிறகென்ன காந்தி தன்னை சுட்டு விட்டார்
  பேச்சு மேலும் வளருவதை விரும்பார் கூட்டம்

தலைவனும் வழி நடந்தோனும்

  அடித்தாலும் உதைத்தாலும் சுட்டாலும் கொன்றாலும்
  அப்படியே அதை ஏற்று செய்வான் தன்னின்
  மனத் தளத்திற்குள்ளேயே போராட்டம் உண்டாக்கி
  மனிதனென அவன் தன்னை மாற்றி விடும்
  பொறுப்பான போராட்டம் அகிம்சையென்னும்
  பொலிவான நீரோட்டம் தந்த அண்ணல்
  சிறப்பெல்லாம் அவனான காந்தி அண்ணல்
  சிந்தை வழி நடந்திடுவோம் உலகம் போற்ற


  படிப்பதனை சிறு வயதில் இழந்தவன்தான்
  பல பேரைப் படிக்க வைத்தான் உயர வைத்தான்
  வடித்திட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றும்
  வாழ வைத்துக் காத்திருக்கும் தமிழினத்தை
  அடி பட்டு வீழ்ந்திருக்கும் ஏழையரை
  அவனன்றோ காத்து நின்றான் தாயெனவே
  மடிப் பிச்சை அவன் ஏற்றான் ஏழையர்க்காய்
  மாமனிதன் காமராஜர் வழி நடப்போம்

Friday, August 15, 2008

நாம் நடப்போம்

 கோடிக் கணக்கான ஏழையர்கள் கொல்லுகின்ற வறுமையிலே துன்பம் காண
  கோடிகளில்ஆடுகின்றார் ஆட்சியாளர் கொண்ட அந்த ஆட்சியினைக் காத்துக் கொள்ள
 பேடிகளாய் மாறி விட்டார் தாயர் நாட்டின் பெருமையெல்லாம் அழித்தொழித்தார் அந்தோ அந்தோ
  பிறந்த இந்த விடுதலைக்காய் இறந்து பட்ட பெரியவரை நினைத்தாரா பேய் மனத்தார்
 கேடிகளும் கண்டு அஞ்சும் வாழ்க்கை கொண்டார் கிறு கிறுத்தோம் அருவறுத்தோம் இவரைக் கண்டு
  வாடி இவர் நாணிடுவார் என்று எண்ண வகையில்லை குடும்பத்தோடு அசிங்கம் செய்வார்
 நாடிதனைக் காப்பாற்றி நலங்கள் பேணும் நல்லவரின் கையினிலே ஒப்படைப்போம்
  நம் தந்தை காந்தி தலைவர் காமராஜர் நலமான வழியினிலே நாம் நடப்போம்

Saturday, June 28, 2008

பெருமையெல்லாம் தேடி வரும்

சென்னையிலே காந்தியார்க்கு வரவேற் பொன்றைச்
சீராகத் தருகின்றார் தமிழர் நாட்டார்
அன்னை கஸ்தூரஅவரும அருகிருக்க
அளக்கின்றார் மன்னரென்றும் ராணியென்றும்
சொன்னதெல்லாம் கேட்டு நொந்த காந்தியாரும்
சொல்லுகின்றார் பதிலினிலே உண்மைகளை
என்னை யிங்கு புகழ்ந்ததிலே வெட்கம் கொண்டேன்
எள்ளளவும் உண்மையில்லை மாற்றிக் கொள்க

நாரா யண சாமி நாகப்பன் என்ற இரு
நல்ல தமிழ் நாடு பெற்ற இளைஞரவரோடு
போராடி நாட்டிற்காய்ச் சிறைக்குள்ளே நொந்து
பொலிவிழந்து நோய் கொண்டு உயிர் துறந்து நின்ற
சீமாட்டிவள்ளி யம்மை அவள் செய்த தியாகம்
செப்பி அவர் தலையினிலே சூட்ட வேண்டும் மகுடம்
நீர் மாற்றி அதை எனக்குச் சூட்டிட முயன்றீர்
நெஞ்சார அவருக்கே சூட்டுகின்றேன் இதனை


மற்றவர் தம் உழைப்பதனைத் தன் உழைப்பாய்
மாற்றி அதில் குளிர் காயா மா மனிதன்
உற்றவரோ நண்பர்களோ எவரெனினும்
உண்மை விட்டால் உதறி விட்ட ஒர் புனிதன்
கற்றிடுவீர் அவன்தன்னை கற்று விட்டால்
கண்டிடுவீர் மனத்திற்குள் நிம்மதியை
பெற்றிடுவீர் அவன் வழியைப் பெற்று விட்டால்
பேசரிய பெருமையெல்லாம் தேடி வரும்

Friday, June 27, 2008

மடமையை மாற்றிய காந்தியடிகள்

மனிதர்களைத் தெய்வம் என்று கருதி மாளும்
மடமையினை வேரறுத்தார் காந்தி அண்ணல்
புனிதர் அவர் உண்ணாமல் நோன்பு கொண்டு
போராட்டக் களம் தன்னில் உள்ள நேரம்
தனியாக அவர் தம்மைக் காண வென்று
தம்பதியர் கிராமம் விட்டு வந்திருந்தார்
கனிவான காந்தி யண்ணல் கால்கள் தம்மைக்
கழுவி அந்த நீர் கொண்டு தங்கள் பிள்ளை


உடல் நலமற்றிருப்பானுக்கு உள்ளே தந்தால்
உயிர் பிழைப்பான் என்றே தான் வேண்டி நின்றார்
மடமையிதை காந்தி யண்ணல் அவர்களிடம்
மாற்றி விட பல மணிகள் எடுத்துக் கொண்டார்
கடவுளினை நம்புங்கள் நோயைத் தீர்க்க
கட்டாயம் மருத்துவரைச் சென்று பாருங்கள்
மடமையிது மனிதர்கள் தம் கால் கழுவி
மருந்தென்று உண்பதென்று உணர்த்தி வென்றார்

Wednesday, June 18, 2008

காந்தியடிகள் வாழ்வில்

               இங்கிலாந்து மன்னரையே சந்திக்கத்தான்

                   இந்தியத் தாய் தலை மகனாம்  காந்தி சென்றார்

               அங்குள்ளோர்  மன்னரையே சந்திக்கவே

                   ஆடையுள்ள   ததை  அணிய வேண்டும் என்றார்

               பங்கமில்லா ஆடை   எந்தன் பருத்தி ஆடை

                   பாரதத்தின்  ஆடை அதே  போதும் என்றார்

               இங்கிலாந்து மன்னர் அதை ஏற்றுக் கொண்டார்

                    எளிமையினால்  காந்தி அங்கே வெற்றி கண்டார்

      2/     மன்னரையே சந்தித்து  வெளியில்  வந்தார்

                     மகாத்மாவாம் காந்தியண்ணல் செய்தியாளர்

               என்ன இந்த ஆடை  இதை  ஏன் அணீந்தீர்

                      இவ்வளவு குறைவாக அய்யோ என்றார்

               கன்னல் மொழிக் காந்தி சொன்னார் எனக்கும் சேர்த்து

                       கனமான ஆடைகளை  உங்கள்  மன்னர்

               தன்னுடம்பில் அணிந்துள்ளார்  அதுவே போதும்

                       தரம் இதுவே எமக்கு இது போதும் என்றார்                  

Sunday, June 8, 2008

இன்றும் தேசத் தந்தை

                     அறிவித்த போராட்டம்  வன்முறையாய்
                                   ஆகிவிட்ட சேதியினை காந்தி கேட்டார்
                     தெரிந்திட்டார்  காவலர்கள் பத்துப் பேரைத்
                                   தீக்கிரையாய் ஆக்கி விட்டார்  தொண்டரென்று
                     பதை பதைத்தார்  அரசாங்கம்  தனை  அழைத்தார்
                                   படு கொலைக்குத தாமேதான்  பொறுப்பு என்றார்
                     கதையல்ல  இந்நாட்டில்  நடந்ததுதான்
                                   காந்தி  இன்றும்  நம்  தேசத்  தந்தையன்றோ

Tuesday, May 20, 2008

சாதியினை ஒழித்தார்

         காந்தியவர்  ஆசிரமம்  காலை வேளை
                 கவனமற்ற  துயரம்  ஒன்று  மாறும்  காலை
         ஏந்தி  ஒரு மலச சட்டி  தலையில்  கொண்டு
                 ஏலாத இளஞ் சிறுவன்  நடந்து  வந்தான்
          சாந்தி  கொண்ட அம் மனிதர் பிராம்மணர்தான்
                 சட்டென்று   அச்சிறுவன்  தனை  நிறுத்தி
          வாங்கி  அந்த  மலச் சட்டி  தலையில் கொண்டார்
                 வார்தாவே  தனை  உணர்ந்து  மாறி  நிற்க


          காந்தியவர்  கை  கூப்பித்  தொழுது  நின்றார்
                  கருணையதை  உணர்த்தி நின்ற  கண்ணியரை
          ஆம்  தினமும்  ஆசிரமம்  தன்னில்  உள்ளோர்
                  அள்ள  வேண்டும் மலம் என்றும் ஆணையிட்டார்
          காந்திக்கே  குரு அவர்தான்  என்றும்  சொன்னார்
                   கனிவுக்கே  தாயான  வினோபா தன்னை
          போந்தவரைப்  போற்றி  நிற்போம் மலத்தை  அள்ளல்
                   பொது என்று  சாதியினை  ஒழித்தார் தம்மை

Monday, April 28, 2008

காந்தியடிகளும் தமிழும்

     தமிழ்த்தாயாம்   தில்லையாடி  வள்ளியம்மாள்
          தான் தந்த  போராட்டப்  பேருணர்வே
     அமிழ்ந்திருந்த  இந்தியத்  தாய்  விடுதலைக்கு
          ஆளாக்கித்  தந்ததெனை  வணங்குகின்றேன்
     தமிழன்னை  பெற்றெடுத்த தவப்புதல்வர்
          தங்க  நிகர்  வள்ளுவரின்   திருக்குறளை
     தமிழிலேயே கற்றுவிட  ஆசை  கொண்டேன்
          தரவில்லை இறைவன்  அந்தப் பேரருளை
     அமிழ்தான தமிழ்முதை  இந்தியத்தார்
          அனைவருமே   கற்று விட்டால் ஒன்றாயாவார்

     இவையெல்லாம்  காந்தி  மகான்  வார்த்தையாகும்
          ஏற்றிருந்தால்  இந்தியாவே வென்று  நிற்கும்
     கவைக்குதவா  வேலையெல்லாம்  செய்து நிற்பார்
          கண்ட்தில்லை  நல்ல்தெல்லாம்  என்ன் செய்ய
    அவையினிலே  வெல்லுதற்கு  அனைவருமே
          அன்னை மொழி த்னில்  கல்வி கற்றல் வேண்டும
     சுவையதுவே  என்று  சொன்னார்  அண்ணல்  அவர்
          சுத்தமாக  மறந்து இன்று  தமிழ்  ஒழித்தோம்