Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

Friday, July 15, 2011

காமாராஜர் பிறந்த நன்னாள்

ஏழைகளைக் காப்பதற்காய் பிறந்த நல்லோர்
எல்லோர்க்கும் கல்வி தந்த இனிய நல்லோர்
வாழையடி வாழையென காந்தி அண்ணல்
வழி நடந்து தமிழருக்குப் பெருமை சேர்த்தோர்
கோழைத்தனம் இல்லாமல் தாய் நாட்டிற்காய்
கொடுஞ்சிறையில் ஆறாண்டு இருந்த வல்லோர்
பேழையாம் கல்வியினை அள்ளித் தந்த
பெருஞ்செல்வர் காமராஜர் பிறந்த நன்னாள்

Saturday, January 2, 2010

உணர்வீர் என்றார்

இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை தன்னை
ஏற்க வேண்டும் என்று சிலர் அன்று இங்கு
வசை யின்றி வாழ்ந்திருந்த காமராசர்
வாசலுக்கு வந்து நின்று வேண்டி நின்றார்
திசை தெரிந்தா வந்தீர்கள் என்ன கூத்து
தெரியுமா இசை எனக்கு முதல்வர் என்றால்
அசைகின்ற விழாவில் எல்லாம் எனை அழைத்தல்
ஆகாது தவறு இதை உணர்வீர் என்றார்

Wednesday, October 15, 2008

அவரால் மட்டும்

 காந்தி அவர் தவறு செய்த போதே அதைக்
  கண்டித்த பேரூருவம் காமராஜர்
  தான் பெறாக் கல்வியினை ஏழையர்க்காய்த்
  தந்து நின்ற வள்ளலவர் ஊர் முழுக்க
  வான் புகழ் கல்வியினை வழங்குதற்காய்
  வடிவமைத்த சட்டங்கள் நூறு நூறு
  நாம் இன்று கல்வியினால் வாழ்ந்தோமென் றால்
  நாயகனாம் காமராஜர் அவரால் மட்டும்
   

Monday, October 6, 2008

குருவை எண்ணி

 காந்தி யவர் செய்தித் தாள் தன்னில் ஒரு
  கட்டுரையில் தமிழ் நாட்டில் காங்கிரஸில்
  சேர்ந்து ஒரு குழு ராஜாஜிக் கெதிராய்ச் சில
  செய்கைகளைச் செய்வதுவாய் எழுதி விட்டார்
  காந்தியைத் தன் குருவாகக் கொண்டிருந்தும்
  காமராஜர் எதிர்த்து நின்றார் காந்தியாரை
  காந்தியவர் திருத்திக் கொண்டார் தவறதனை
  காமராஜர் மனம் சிறந்தார் குருவை எண்ணி

Thursday, October 2, 2008

என்றும் வென்றான்

  மணம் செய்தான் இல்லை அவன் உண்மை நேர்மை
  மக்கள் சேவை என்ற பல நற் குணங்கள்
  மணம் கொண்டு வாழ்ந்ததவன் காலம் தன்னில்
  மனமெல்லாம் ஏழையரின் வாழ்க்கைக்கென்று
  இனம் கண்டான் அவர்கட்காய் தினம் உழைத்தான்
  ஏழையர் தம் குடும்பத்துத் தலைவனானான்
  குணம் கொண்டான் தமிழர் குலப் பெருமை கொண்டான்
  கொற்றவனாம் காமராசன் என்றும் வென்றான்

தலைவனும் வழி நடந்தோனும்

  அடித்தாலும் உதைத்தாலும் சுட்டாலும் கொன்றாலும்
  அப்படியே அதை ஏற்று செய்வான் தன்னின்
  மனத் தளத்திற்குள்ளேயே போராட்டம் உண்டாக்கி
  மனிதனென அவன் தன்னை மாற்றி விடும்
  பொறுப்பான போராட்டம் அகிம்சையென்னும்
  பொலிவான நீரோட்டம் தந்த அண்ணல்
  சிறப்பெல்லாம் அவனான காந்தி அண்ணல்
  சிந்தை வழி நடந்திடுவோம் உலகம் போற்ற


  படிப்பதனை சிறு வயதில் இழந்தவன்தான்
  பல பேரைப் படிக்க வைத்தான் உயர வைத்தான்
  வடித்திட்ட திட்டங்கள் அனைத்தும் இன்றும்
  வாழ வைத்துக் காத்திருக்கும் தமிழினத்தை
  அடி பட்டு வீழ்ந்திருக்கும் ஏழையரை
  அவனன்றோ காத்து நின்றான் தாயெனவே
  மடிப் பிச்சை அவன் ஏற்றான் ஏழையர்க்காய்
  மாமனிதன் காமராஜர் வழி நடப்போம்

Saturday, June 28, 2008

அவரைக் கூட

முன் பின்னாய்க் கார்கள் சூழப் போனதுண்டா
முறை கெட்டார் அவர கிட்டே சென்றதுண்டா
தன் பெண்டு பிள்ளை என்று அவருக்காகத்
தனியாக உறவுண்டா தாயையன்றி
என் செய்தார் அம்மனிதர் ஏழைகளை
எப்போதும் உறவாகக் கொண்டிருந்தார்
புன் செயலைச் செய்தார்கள் அவரைக் கூட
போட்டியிலே தோற்கடித்து மகிழ்ந்து நின்றார்

வணங்கியவர் காமராஜர்

ஆங்கிலத்தைத் தெரிந்தவர்தான் இந்தியெனும்
அம்மொழியும் தெரிந்தவர்தான் இந்தியத் தாய்
ஈன்றெடுத்த எம்மொழியும் தெரிந்தவர்தான்
இருந்தாலும் எழுந்து நின்று ஆட மாட்டார்
சான்றாண்மை கொண்டவராய் வாழ்ந்ததாலே
சரித்திரத்தின் உண்மையெல்லாம் தெரிந்ததாலே
ஈன்றாளின் மொழி ஒன்றே எங்கும் பேசி
எம் தமிழை வணங்கியவர் காமராஜர்

சிரித்ததந்தக் கேள்வியாலே

சட்டமன்றம்தனில் எதிரில் வந்தமர்ந்த
சரித்திரங்கள் பல அறிந்த மேதை அவர்
பட்டெனவே பல நாட்டு அறிஞர் தம்மின்
பாங்கான செய்திகளைச் சொல்லுகின்றார்
சட்டெனவே பெருந்தலைவர் கேட்டு நின்றார்
சரி உங்கள் செய்தி என்ன தமிழ்நாட்டுக்கு
கட்டுரைத்தார் வாயடைத்தார் சட்டமன்றம்
கல கலத்துச் சிரித்ததந்தக் கேள்வியாலே

சொக்கிப் போக முட்டாளா

வேண்டாத புகழுரைகள் தம்மை என்றும்
விரும்பியதே இல்லை அய்யா காமராஜர்
தாண்டிஅங்கே ஒரிருவர் பேசி விட்டால்
தண்டனைதான் வேறென்ன தொலைந்தார் அவர்
மண்டலத்து மாநாடு ஒன்றில் ஒரு
மாபெரிய தமிழறிஞர் பேச வந்தார்
கண்ட ஒரு காட்சியினைச் சொல்லி நிற்பேன்
காமராஜர் காமராஜர் காமராஜர்தான்

பெருந்தலைவர் எழுந்து நின்றால் அவர் தலையோ
பேரிமயம் தனில் இடிக்கும் இரண்டு கால்கள்
பொருந்தி நிற்கும் குமரி அன்னை கடற்கரையில்
பொரு தடக்கை பாரதத்தை அணைத்து நிற்கும்
விறு விறுப்பாய்ப் பேசி நின்றார் பெரியவரோ
விலா நோகச் சிரித்து என்னை அரக்கன் என்று
சுறு சுறுப்பாய்ப் பேசுதியோ நிறுத்து போதும்
சொக்கிப் போக முட்டாளா நான் என்றாரே

நிறுத்துங்க என்று சொன்னார்

மதுரையிலே ஒரு கூட்டம அங்கே ஏழை
மக்களுக்காய் பிறந்து வந்த பெருந்தலைவர்
கதி அவரே என்றிருக்கும் மக்களின் முன்
கணக்காகச் சிலர் அவரைப் புகழுகிறார்
இடை மறித்துப் பெருந்தலைவர் காமராஜர்
எனைப் புகழ என்ன உண்டு என்று சொல்லி
பட படத்தார் குழந்தை குட்டி குடும்பம் என்று
பல இருந்தும் பதவியிலே தானிருந்தும்

திட மனதாய் வறுமையிலும் நேர்மையுடன்
தேசமதே சொத்தென்னும் ஒர்மையுடன்
வட புலத்தார் கண்டாலும் வணங்கி நிற்கும்
வாழ்வாங்கு வாழும் எங்கள் கக்கனையே
தினம் புகழ்ந்து போற்றுங்கள் அதுவே நன்று
தெரியுமில்ல நான் ஒண்டிக் கட்டை என்னை
விதம் விதமாய்ப் புகழ்வதிலே நியாயமில்லே
வேண்டாம் அதை நிறுத்துங்க என்று சொன்னார்

Friday, May 16, 2008

காப்பாற்றி நின்றார்

         பிச்சையெடுத்தேனும்  நல்ல  கல்வியினைப்
                     பெற்றிடுங்கள்  என்று சொன்னார்  நமது  முன்னோர்
         இச்சொல்லை மாற்றுதற்காய்  ஒருவர்  வந்தார்
                      ஏழைகளை  வாழ வைக்க  என்றே  வந்தார்
         பிச்சையினை  நான்  எடுப்பேன்  உங்களுக்காய்
                       பிள்ளைகளே  உங்கள்  தொழில்  படித்தல்  என்றார்
         கச்சை  கட்டி  கல்வி  தந்து  ஏழைகளைக்
                       காப்பாற்றி  நின்ற தெங்கள்   காமராஜர்
                      

Monday, April 28, 2008

தமிழர் காமராஜர்

     தமிழ்த் தாயார்  ஈன்றெடுத்த  காமராஜர்
          தாய் நாட்டைக்  காக்க வந்த  பீமராஜர்
     அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
          அகிலமெல்லாம்  தமிழ்  கொணடு சென்ற ராஜர்
     வட புலத்தில்  காங்கிரஸின் தலைவராகி
          வாயாடி நின்ற தன்புத்  தமிழிலேதான்
     கடல் கடந்து  ரஷ்ய நாட்டில்  நின்ற போதும்
          கனித் தமிழே  பேசி நின்ற தனித் தமிழர்

     தான் பெறவே இயலாமல்   போன  கல்வி
          தமிழ்  ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
     ஊன் உடம்பு  உயிர் தந்த தாய்க்குக் கூட்
          உண்மைக்குப் புறம்பாக உதவாத்  தேவன்
     ஏன்  என்று  எதனையுமே கேட்டுக் கேட்டு
          ஏழைகட்காய்ச்  செய்து நின்ற  மாமனிதன்
     வான்  சென்றான்  என்கின்றார்  இல்லையில்லை
          வாழ்கின்றான்  எம்மோடு  இன்றும்  இங்கே

     ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
          ஏழையென்றே வாழ்ந்தான்  காண்  தோல்வி தந்தார்
     கோழையென  அழுதானா  இல்லை என்னைக்
          கூப்பிடுங்கள்  என்றெல்லாம்  குமுறினானா
     வாழையடி  வாழையென  காந்தி  பேரை
          வாழ்விக்க வந்தவன் காண்  செல்வனான்
     கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
          கொடை அளித்தான்  அதனாலே செல்வனான்

     ஏழையென்று  சொல்லாதீர்  அவனை  எங்கும்
          ஏற்றங்கள்  அவனாலே பெற்ற  நீவிர்
     வாழையடி  வாழையென  கல்வி  இன்று
          வந்ததுங்கள்  வீட்டிற்குள்  அவனால்ன்றோ
     பேழையென  நெய்வேலி  திருச்சியிலே
          பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
     வாழ்வதற்கு  அனைவருக்கும்  உணவளிக்கும்
          வயற்காட்டுத்  தோழருக்காய் அணைகள் தந்தான்

     ஊழை  வெல்ல  முடியாராய்  ஒடுக்கப் பட்டோர்
          ஒய்ந்திருந்த  நேரத்தில்  எழுந்து  வந்தான்
     கோழை மனம்  விட்டவரும்  கொடிகள் ஏந்தி
          கொள்கை கண்டு  வெற்றி பெற வழிகள் செய்தான்
     ஏழையல்ல செல்வன்  அவன்  என்றே  சொல்வேன்
          ஏனென்றால்  செழுங் கிளையைத்  தாங்கி  நின்றான்
     நாளை  வரும்  இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
          நல்கி நிற்பீர்   ந்ன்றி  கொல்லா நற்றமிழீர்