Saturday, June 28, 2008

சொக்கிப் போக முட்டாளா

வேண்டாத புகழுரைகள் தம்மை என்றும்
விரும்பியதே இல்லை அய்யா காமராஜர்
தாண்டிஅங்கே ஒரிருவர் பேசி விட்டால்
தண்டனைதான் வேறென்ன தொலைந்தார் அவர்
மண்டலத்து மாநாடு ஒன்றில் ஒரு
மாபெரிய தமிழறிஞர் பேச வந்தார்
கண்ட ஒரு காட்சியினைச் சொல்லி நிற்பேன்
காமராஜர் காமராஜர் காமராஜர்தான்

பெருந்தலைவர் எழுந்து நின்றால் அவர் தலையோ
பேரிமயம் தனில் இடிக்கும் இரண்டு கால்கள்
பொருந்தி நிற்கும் குமரி அன்னை கடற்கரையில்
பொரு தடக்கை பாரதத்தை அணைத்து நிற்கும்
விறு விறுப்பாய்ப் பேசி நின்றார் பெரியவரோ
விலா நோகச் சிரித்து என்னை அரக்கன் என்று
சுறு சுறுப்பாய்ப் பேசுதியோ நிறுத்து போதும்
சொக்கிப் போக முட்டாளா நான் என்றாரே

2 மறுமொழிகள்:

said...

சொக்கிப்போகாத அந்த மந்திரத்தை இன்றிருப்போருக்கும் சொல்லிட்டுப் போகக்கூடாது!!!

said...

நெல்லைக் கண்ணன் அய்யா,

நம் துரதிர்ஷ்டம் பெருந்தலைவர் போன்றவர்கள் 40 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதது.காமராசர் வளர்த்த காங்கிரஸ் இப்படி மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடித்து வயிறு வளர்க்கும் ஆசாமிகளால் சீரழிக்கப் பட்டுவிட்டது.