Showing posts with label கண்ணதாசன் பிறந்த நாள். Show all posts
Showing posts with label கண்ணதாசன் பிறந்த நாள். Show all posts

Monday, March 12, 2012

வென்றான்

தானே தனக்குப் பட்டம் போடா
தனிப் பெருங் கவிஞனவன்
தமிழாள் தானே தேடிக் கண்டு
தழுவிய ஞான மகன்
ஊனமென்பதை உள்ளம் கொள்ளா
உத்தமப் பேரறிஞன்
உலகை உணர்த்தும் பாடல்கள் அளித்த
உயர் ரகச் சித்த னவன்
கானம் அனைத்தும் செம்மையுறச் செய்த
கவிஞரில் மேதையவன்
கடவுள் விரும்பும் கனித் தமிழ்ப் பாடல்
கனிந்திடத் தந்த மகன்
தேனாம் தமிழை வானவர் அருந்திடத்
தேடியே கொண்டு சென்றார்
தெள்ளு தமிழ் அன்னை விண்ணையும் ஆண்டிட
தேர்ந்தங்கு சென்று வென்றான்

Sunday, March 11, 2012

கண்ணதாசனைப் பற்றி

அன்புடையீர் வாழ்க தமிழுடன்.
எனது அன்பு நண்பர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்கள் கடந்த மாதம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கண்ணதாசன் அவர்களைப் பற்றி உரையாற்றிய போது அவரது திரைப் படப் பாடல்கள் யாவுமே பழைய இலக்கியங்களின் சாறு என்பது போலப் பேசியதாக அவர் ஆசிரியராக உள்ள தினமனி நாளிதழில் செய்தி கண்டேன்.அது எத்தனை பெரிய தவறு என்பதனை எனது உள்ளம் எனக்கு உணர்த்தியதாலே கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள் எத்தனை சிறந்தவை என்பதனை உணர்த்தும் வண்ணம் தொடர்ந்து எழுத ஆவல் கொண்டுள்ளேன். இறையருள் கூட்டுவித்தால் நாளைக்கே தொடங்கலாம் என்று இருக்கின்றேன். நன்றி அனைவருக்கும் அன்புடன் நெல்லைகண்ணன்

Friday, June 24, 2011

நம்மோடும் தமிழரோடும்

பிறப்பாலே கவியரசர் அதனாலே தான் அவர்
பேசி நின்ற வார்த்தை யெல்லாம் கவிதையாச்சு
சிறப்பாகத் தமிழன்னை சிலரை மட்டும்
செருக்கோடு பெற்றுள்ளாள் மனம் விரும்பி
பொறுப்போடு இவர் தந்த கவிதைகளோ
பொதிகை மலை முச்சூடும் மணம் பரப்பும்
இருப்பார் நம் கவியரசர் கண்ணதாசன்
என்றென்றும் ந்ம்மோடும் தமிழரோடும்