Friday, September 4, 2009

பெண்கள் காப்பீர்

மணம் கண்டு விட்டாலோ பெண்களெல்லாம்
மாப்பிள்ளை வீட்டார்க்குப் பெருமை சேர்க்க
குணம் கொண்டு வாழ வேண்டும் என்று சொல்லும்
கூட்டத்தார் வேறொன்றும் சொல்லுகின்றார்
தன் வீடு தாய் தந்தை அனைத்தும் இனி
தான் புகுந்த வீடு என்று வாழுவதை
பெண் வாழ்க்கை என்று இங்கு கூறுகின்றார்
பேதைமையின் உச்சமன்றோ மூட மாந்தர்


பெற்றவரை மறப்பதற்கா மணமாம் வாழ்க்கை
பெரியவரே அறிவு இன்றிப் பிதற்றுகின்றீர்
கற்றவராய் இருப்பாரில் சிலரும் கூட
கண்மூடிச் சொல்லுகின்றார் இந்தச் செய்தி
உற்றவனாய் ஒரு துணையைத் தேடித் தரல்
உரிமை என்று கண்டு கொண்ட பெற்றோர் தம்மை
மற்றவராய் ஆக்குதற்கு முயற்சி செய்யும்
மடமையினை விட்டொழிப்பீர் பெண்கள் காப்பீர்

2 மறுமொழிகள்:

said...

கவிதை கவர்கிறது ஐயா. உங்கள் கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

said...

மிகவும் அருமையாக இருக்கிறது, ஆதி காலத்தில் ஏதோ காரணத்துக்காகச் சொல்லப்பட்ட விசயங்கள் இன்றும் தொடர்வதும், ஆதிகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயம், இன்று ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதே பெண்கள் காப்பீர் என எழுதும் நிலை வந்திருக்கிறது.

அன்றெல்லாம் அடிமைப்படுதலை பெண்கள் விரும்பினார்கள் என நான் சொல்லவில்லை, எதிர்க்க விருப்பமின்றி ஏற்றுக்கொண்டார்கள் என்றே சொல்கிறேன். மிக்க நன்றி ஐயா.