Tuesday, September 8, 2009

வேண்டும் அம்மா

பெண்களுக்குச் சொல்லுகின்றேன் அன்பு செய்து
பெருமையுடன் மனித குலம் காத்து நிற்கும்
வண்மை கொண்ட நீங்கள் இங்கு அடிமையாக
வாழுவதில் நியாயம் இல்லை புரிந்து வாழ்வீர்
உண்மை இல்லாக் கணவனையும் உவந்து போற்றி
உயர் வாழ்க்கை வாழ்வது வாய்ப் போலி செய்து
கண்மணியாய் அவனையுமே காத்து நிற்கும்
காவியத்துப் பெண்கள் அல்ல உயிர்கள் நீங்கள்


உங்களுக்கும் உடல் உண்டு உணர்ச்சி உண்டு
உள்ளுக்குள் எத்தனையோ ஆசை உண்டு
தங்களையே புரியாத தடியரோடே
தான் வாழ்தல் நெறி என்ற மடமை தன்னை
புண்களைப் போல் கொண்டு நீரும் வாழ்ந்திருத்தல்
பொய் மடமை கோழைத்தனம் புரிவீர் நீரே
கண்கள் என்று உம்மை இங்கு புரிந்து கொள்ளா
கயமைகளை எதிர்த்து வெல்லல் வேண்டும் அம்மா

1 மறுமொழிகள்:

said...

எங்களுக்கும் ஆசை உண்டு லட்சியம் உண்டு .யார் கேட்டார் அவைகளை?
கரண்டி பிடிக்கத் தெரியணும்
காபி போடத் தெரியணும்
என்ற கட்டுக்குள் பெண்களை கட்டி வைத்திருக்கும் ஆண்கள் தாமாக மாற வேண்டும்.
பெண்கள்தான் அவர்களை மாற்ற வேண்டுமென்றால் ,ஆண்கள் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டல்லாவா நிற்கிறார்கள்