உங்கட்க்கொரு பொருள் உடைமை ஆயிற்றென்றால
உடன் அதனை பத்திரத்தில் பதிவு செய்வீர்
தென களத்தான் பாண்டியனின் உடைமை என்று
திசை சூழ்ந்த உலகத்தை அவனின் யானை
வன்களத்தில் வீழ்ந்து படும் எதிரி மன்னர்
வாகான மார்பகத்தில் தந்தம் கொண்டு
எங்களது பாண்டியனின் உடைமை இந்த
எழில் உலகம் என்றெழுதித் தீர்க்கின்றது
சங்கதியைக் கேட்டீரோ பாண்டியனின்
சரித்திரத்தில் சரி பங்கு கொண்ட யானை
தந்தமதை எழுத்தாணியாகக் கொண்டு
தார் வேந்தர் மார்புகளை ஒலையாக்கி
இங்கிவர்கள் அனைவருமே பாண்டியனின்
இலை வேலுக்கு இலக்காகி வீழ்ந்ததனால்
பொங்கு கடல் உலகெங்கள் சொந்தம் என்று
பொறுப்பாகப் பதிகிறதாம் பத்திரத்தை
முத்தொள்ளாயிரம்
மருப்பூசியாக மறங்கனல் வேல் மன்னர்
உருத்தகு மார்போலையாக-திருத்தக்க
வையகம் எல்லாம் எமதென் றெழுதுமே
மொய்யிலை வேல் மாறன் களிறு
Thursday, June 5, 2008
பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்
காத்திடுவாள்
இயந்திரம் தான் பழுதடைந்து சில நேரத்தில
இடையூறு செய்கிறது என்ற போதும்
பைந்தமிழை உலகெங்கும் உங்களோடு
பகிர்ந்திடவும் நல்லுதவி செய்கின்றது
செந்தமிழாள் வாழ வைத்தாள் என்னையென்றால்
சிறப்பெல்லாம் சேர்க்கிறது கணினி இங்கே
வந்தனங்கள் சொல்லி நின்றேன் அனைவருக்கும்
வடிவான அன்னை தமிழ் காத்திடுவாள்
Wednesday, June 4, 2008
மாற்றுங்கள்
ஆறுகளை நீர் நிலைகள் அனைத்தையுமே
ஆபாசம் ஆக்குகின்றீர் குப்பை கொட்டி
தேறுவதேயில்லை உங்கள் வாழ்க்கை தன்னை
தினந் தோறும் இயற்கையினை அழித்தொழிப்பீர்
கூறு கெட்ட மானிடரே இயற்கையதன்
கூறுகளை அழித்தொழித்து நீர் அழிவீர்
சாறழித்து எதிர் காலச் சந்ததியைச்
சரிக்கின்றீர் நோய்களுக்குள் இரக்கம் இன்றி
வாழ்ந்திடுவார் சந்ததியர் என்று எண்ணி
வாரி வாரிச் சேர்க்கின்றீர் பணத்தை மட்டும்
சூழ்ந்துயிரை வாழ வைக்கும் இயற்கை தன்னை
சொத்தாகக் கருதாமல் இழந்து நின்றீர்
வீழ்ந்து படும் எதிர்காலம் என்பதனை
விரித்துணர மாட்டாமல் துன்பம் சேர்த்தீர்
மாய்ந்து படும் உயிரெல்லாம் மாநிலத்தில்
மாற்றுங்கள் உம் கொடுமைக் கூத்தையெல்லாம்
அன்புடையீர்,
வாழ்க தமிழுடன்.நம்மாழ்வார் பாசுரத்திற்கு இரண்டு கவிதைகள்.ஆமாம்.
முதலில் ஒன்றை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே மின் தடை
ஏற்பட்டு விட்டது.
மின்சாரம் வந்தவுடன் வேறொன்றை தட்டச்சு செய்தேன்.மீண்டும் கணிப்
பொறியைப் பார்க்கையிலே பாதியாக ஒரு கவிதை இருந்தது.அதையும்
முடித்தேன்.அதனாலே இரண்டாயிற்று.நன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்
Tuesday, June 3, 2008
நம்மாழ்வார்
ஆண்டவர்கள் பெயரினிலே சண்டையிட்டு
அழிகின்றார் மானிடர்கள் எங்கும் என்றும்
தூண்டுபவர் எவரேனும் அழிவதில்லை
தொண்டர்களே அழிகின்றார் அந்தோ பாவம்
வேண்டுமட்டும் பெரியவர்கள் சொல்லிச் சென்றும்
வீணாக அழிகின்றார் கண்டு நொந்தோம்
ஆண்டவனை நற்றமிழால் அழகு செய்த
ஆழ்வார்க்கு ஆழ்வார் தம் சொல்லைக் கேட்போம்
அவரவர் தம் அறிவினது வழியதாக
அவரவர்க்காய் தெய்வம் அங்கே அமைகிறது
அவரவர்க்காய் அமைந்த அந்தத் தெய்வம் ஏதும்
அன்பான தெய்வம்தான் குறைந்ததில்லை
அவரவர்தம் விதி வழியே தெய்வங்களும்
அமைகிறது வணங்குகின்றார் புரிந்து கொள்வீர்
தவறின்றித் தமிழினிலே தந்து நின்றார்
தமிழ் வேதம் அருளி நின்ற நம்மாழ்வார் தான்
பாசுரம்
அவரவர் தமதறிவறி வகை வகை
அவரவர் இறையவர் என அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே
நம்மாழ்வார் பாசுரம்
யார் வணங்கும் ஆண்டவர்தான் சிறந்தவரென்று
எப்போதும் மனிதருக்குள் சண்டை உண்டு
ஊர் முழுக்க இச்சண்டை மீண்டும் மீண்டும்
ஒலிப்பதுண்டு மனிதர்களை ஒழிப்பதுண்டு
கார் நிறத்து மேனியனாம் கண்ணனையே
காதலித்து நின்றாலும் ஆழ்வார்க் காழ்வார்
சீர் பெறும் நல் வழியினையே நந்தமக்காய்
செப்பி வைத்தார் நம்மாழ்வார் நம்மாழ்வாரே தான்
வாழுகின்ற சூழலுக்கு ஏற்றாற் போல
வடிவங்கள் கண்டெவரும் வணங்குகின்றார்
சூழ்ந்து எதையும் வெல்லுகின்ற விதி தான் இங்கே
சொல்கிறது அவரவர்க்காம் கடவுள் தன்னை
ஆழ்ந்தவரும் வணங்குகின்றார் தவறேயில்லை
அக்கடவுள் குறைந்ததில்லை உயர்ந்ததுவே
வாழ்ந்திடுவீர் மானிடரே இதை உணர்ந்து
வையகத்தில் கடவுளிலே குறைகள் இல்லை
பாசுரம்
அவரவர் தமதம தறி வறி வகை வகை
அவரவர் இறையவர் என அடி அணைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றாரே
விளக்கம்
அன்புடையீர்
வணக்கம். விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கான படப்
படிப்பிற்காக சென்னை சென்றிருந்ததனால் 29ம் தேதியில் இருந்து ஒன்றும்
எழுதவில்லை.இன்றிலிருந்து எழுதுவேன். வாழ்க தமிழுடன்.நன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்
3-6-08