Tuesday, January 6, 2009

தமிழாம் நம் தாயாம் தெய்வம்

வள்ளுவரை உள்ளத்தில் கொண்டிருந்தால்
வருவதில்லை தவறு செய்யும் எண்ணம் என்றும்
உள்ளுதோறும் உள்ளுதோறும் நல்லனவே
உள்ளத்தின் கொள்ளளவை நிறைத்திருக்கும்
தெள்ளு தமிழ் அன்னையவள் தவமிருந்தே
திருவான வள்ளுவரைப் பெற்றெடுத்தாள்
கள்ளமில்லா அவர் வழியில் நிமிர்ந்து சென்றால்
கனித் தமிழர் வாழ்வு என்றும் வெற்றி கொள்ளும்


அவ்வையவள் காட்டுகின்ற அன்பு வழி
அதை உணர்ந்து தமிழர்களே வாழ்ந்தீர் என்றால்
செம்மாந்து வாழ்ந்திடலாம் உலகம் எங்கும்
சீராகப் புகழ் பெற்று உயர்ந்திடலாம்
எவ்விதத்தும் எங்கேயும் தமிழர் மட்டும்
இனியவர்கள் என்ற பெயர் சேர்த்திடலாம்
செவ்வியராய் வாழ்ந்திடுவீர் செந்தமிழீர்
சிறப்பாக வையத்தின் தலைமை ஏற்பீர்


நாலடியார் காட்டுகின்ற நல் வழிகள்
நானிலத்தை வெல்லுகின்ற வழிகள் கண்டீர்
பால்மனத்தைக் கொண்டவராய் உலகம் தன்னில்
பண்பு நலம் காத்து வென்று உயரச் செய்யும்
சூல் கொண்டு பெற்றெடுத்த குழவியெல்லாம்
சுத்தமாக மனித இனம் வாழச் செய்யும்
மேல் மக்களாகவே தான் பெற்றெடுத்தாள்
மேதினியில் தமிழாம் நம் தாயாம் தெய்வம்

0 மறுமொழிகள்: