Wednesday, January 14, 2009

வாழ்த்தி நின்றேன்

ஞாயி றில்லை யெனில் இங்கே எதுவும் இல்லை
நன்குணர்ந்த தமிழினத்தார் நன்றி சொல்ல
ஆய்ந் தறிந்த நன்னாளே தைத் திருநாள்
அதுவேதான் தமிழர்களின் புதிய ஆண்டு
வாயின்றி வாழ்ந்தாலும் உயிர்க் குலத்தின்
வயிற்றுக்குச் சோறிடும் மாட்டுக் கூட்டம்
போய் அதற்கும் நன்றி சொல்லும் புதிய ஆண்டு
பொங்கலிது தமிழ்ப் பெருமை பொங்கும் பொங்கல்



நன்றி சொல்லல் உயிர்க் குலத்தின் உயர்ந்த மாண்பு
நற்றமிழர் அதை அறிந்தார் அதனால் இங்கே
அன்றிருந்து உயிர்க் குலத்தை வாழ வைக்கும்
அனைத்துக்கும் அடிப்படையாய் விளங்குமந்த
விண்ணகத்தின் பேரொளியை கதிரைப் போற்ற
விருப்பமுடன் கண்டெடுத்த நல்ல நாளே
மண் மணக்கும் தமிழர்கள் தம் பொங்கல் நன்னாள்
மனம் நிறைந்து அனைவரையும் வாழ்த்தி நின்றேன்

1 மறுமொழிகள்:

said...

வணக்கம் அய்யா !


எனது இனிய தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


என்றும் தமிழுடன்,
நிலவன்,

http://eerththathil.blogspot.com