Thursday, January 15, 2009

கைக் கொள்ளுங்கள்

இறைவனையே நம்புகின்ற இவர்களுக்குள்
எதற்காகச் சண்டை என்று புரியவில்லை
உறைகின்றான் இறைவன் அவன் எங்கும் என்று
உரைக்கின்றார் எதற்காக மோதுகின்றார்
அறியாமை அறியாமை அதனாலன்றோ
அங்கங்கே குத்துகின்றார் வெட்டுகின்றார்
செறிவான அறிவோடு கடவுளினைச்
சேர்வதற்கு விழைந்து நிற்பார் அமைதி காப்பார்


நம்பிக்கை உடையவர்கள் எல்லாம் ஒன்றாய்
நலம் பேணி வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை
கும்பிட்டு நிற்கின்றீர் இறைவன்தன்னை
குறையெல்லாம் விட்டு விட்டு நின்றாலன்றி
தம்மருளைத் தருவதற்கு இறைவன் என்ன
தனையறியாப் பேதை என்றா கருதுகின்றீர்
எம்மதமும் இறைவனையே ஏத்துகையில்
எதற்காக மோதுகின்றீர் பக்தி செய்வீர்


வேறு வேறுபெயர்களிலே இறைவன் தன்னை
விளங்கி நிற்பீர் வணங்கி நிற்பீர் பெருமை கொள்வீர்
ஊறு இல்லா வாழ்க்கை என்றால் அவனை நன்கு
உணர்ந்தறிந்து அன்பு செய்தல் ஒன்றே ஆகும்
பேறு அதைப் பெற்று விட்டால் சண்டை ஏது?
பிரிவினைகள் பேதங்கள் வருமோ நூறு
ஆறுதலைத் தாருங்கள் இறைவன் தந்த
அன்பதனை அமைதியினை கைக் கொள்ளுங்கள்

0 மறுமொழிகள்: