Thursday, January 29, 2009

மனிதராவீர்

கோயில் தோறும் கூடுகின்றீர் இறைவனையே
கும்பிட்டு வாழ்த்துகின்றீர் வேண்டுகின்றீர்
தாயவளைத் தெய்வம் என்று அவ்வை என்னும்
தமிழ்த் தாயார் கூறியதை மறந்தே போனீர்
ஆயாமல் அலைகின்றீர் ஆண்டவனை
அறியாமல் அலைகின்றீர் உறவை யெல்லாம்
காயாமல் அன்பு செய்தால் ஆண்டவனும்
கண்களுக்குள் கருத்துக்குள் இருப்பான் கண்டீர்


போயெங்கும் அலையாதீர் அன்பு ஒன்றே
பொதுவாகும் இறைவனுக்கு ஏதுவாகும்
சாயாதீர் மத வெறியில் மூடராகி
சதி செய்வார் தம்மிடத்தில் இரையாகாதீர்
போயெல்லா உயிரிடத்தும் அன்பு செய்வீர்
பொதுவான இறைவன் அவன் உடனிருப்பான்
தாயாகி அன்பு செய்யும் தந்தையாகித்
தன்னலமே துறந்து நின்றால் மனிதராவீர்

1 மறுமொழிகள்:

said...

Very Fantastic indeed Ayya! "Bhoomiyil manitharkalidam Anbu seithal, vanulagil Iraivan ungal meethu Anbu seluththuvan"
enbathu Nabi Mozhi.
S.A.Shahul Hameed
Kadayanallur