Tuesday, January 20, 2009

அமீரகத்தின் அமிழ்தானார் சலாவுதீனார்

அமீரகத்தின் அமிழ்து சலாவுதீனார்


கோடிகளை இறைவன் அவன் அள்ளித் தந்தும்
குணம் மாறி வாழாத அன்பின் ஊற்று
நாடி வரும் அனைவருக்கும் உதவி செய்யும்
நல் மனத்துப் பெரு மனிதர் சலாவுதீனார்
வாடி நிற்கும் தமிழருக்கு மழையேயான
வள்ளலவர் தனைக் காணும் வாய்ப்பதனை
நாடி என்றும் தொழுது நிற்கும் இறைவன் தந்தான்
நற் கருணை ஆண்டவர்க்கு நன்றி சொன்னேன்



தமிழின் மேல் கொண்டிருக்கும் பற்றைக் கண்டேன்
தாயின் மேல் கொண்டிருக்கும் பாசம் கண்டேன்
அமிழ்தான தமிழ் மொழியின் வள்ளுவரை
அறிந்ததனில் உரையாடும் பாங்கு கண்டேன்
தமிழ் பற்றிப் பேசி நின்றால் முகம் மலர்ந்து
தனை மறந்து நிற்கின்ற பெருமை கண்டேன்
அமிழ்தானார் அமீரகத்தில் சலாவுதீனார்
அவர் தந்த உணவு உண்டும் அன்பனானேன்


எளிமையிலும் எளிமை அவர் சொற்களெல்லாம்
இனிமையிலும் இனிமை வரவேற்கும் நேரம்
கனிவினிலும் கனிவு உரையாடும் போதோ
கண்ணியத்தின் மறு உருவம் விருந்தோம்பி நின்றால்
இனிய நல்ல தாயினைப் போல் அன்பு காட்டல்
இறைவனின் மேல் கொண்டிருக்கும் உண்மைப் பற்று
தனியொருவராக நின்று பலரைக் காக்கும்
சலாவுதீனார் இறையருளால் என்றும் வாழ்க



தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன்
திருநெல்வேலி நகரம்
மாலை 06-25

0 மறுமொழிகள்: