Tuesday, July 28, 2009

வாழப்பாரும்

குழந்தைகளைக் கொல்லுகின்றார் பள்ளி என்னும்
கொலைக்கூடம் தன்னில் கொண்டு விடுகின்றாரே
நிரந்தரமாய் வாழ வைக்கும் கல்வியினை
நெஞ்சுணர்ந்து பண்புயரும் கல்வியினை
சிறந்தோங்கும் செந்தமிழை நந்தம் தாயைச்
செழிப்பாக்கச் செய்கின்ற கல்வி உண்டோ?
வரந் தந்து இறைவன் தந்த குழந்தைகளை
வதைக்காதீர் வதைக்காதீர் கொடுமை அது


எப்போதும் படிப்பு என்னும் கொடுமை அது
இதயமே இல்லாராய் அவரை மாற்றும்
தப்பாகிப் போட்டி என்று இருவர்க்குள்ளே
தரமில்லா உணர்வுகளைத் திணித் தொழித்தல்
இப்படியே செய்கின்ற கல்விக் கூட
இடும்புகளால் மனித உணர்வற்றே போகும்
கொப்பாகிக் கிளையாகி மலருமாகிக்
கொடுக்கின்ற காய் கனிகள் உதிருமோதான்


அப்பாவாய் அம்மாவாய் உம்மை ஆக்கி
அருள் செய்த ஆண்டவனும் அவரே யன்றோ
தப்பான கல்வி முறை தன்னில் கொண்டு
தண்டனைகள் தரலாமோ உணர்வீர் நீரே
எப்படியும் படிப்பார்கள் குழந்தைகளும்
இந்த நிலை உமக்கு உண்டோ அந்த நாளில்
அப்பாவே அம்மாவே உமக்குச் சொல்வேன்
அப்பாவாய் அம்மாவாய் வாழப் பாரும்

0 மறுமொழிகள்: