Friday, May 28, 2010

நிறுத்திக் கொள்ளும்

எம் தலைவன் எம் நாட்டின் இளந்தலைவன்
இந்தியத் தாய் இந்திராவின் இனிய மகன்
தம் நாட்டு மக்களின் மேல் பற்றுக் கொண்ட
தனிப் பெரிய நல்ல மகன் ராஜீவ் காந்தி
கொன்றொழிக்கப் பட்டதனை நாங்கள் எண்ணி
குமுறுவது தவறாம் சிலர் சொல்லுகின்றார்
தம் நாட்டுத் தலைவன் அவன் இறந்தால் மட்டும்
தாங்காமல் அவர் மட்டும் புலம்புவாராம்


எம் நாடு எம் தலைவன் எந்தம் துன்பம்
இவர் யார் அது குறித்து எமக்கு ஆணையிட
பண்பாடு இல்லாதார் இரக்கம் இல்லாப்
பாழ் மனத்தைக் கொண்டார்கள் அவர் இழந்தால்
துன்புற்று அழுவாராம் துடிப்பராம் காண்
தூய எங்கள் தலைவனையே நினைத்தால் மட்டும்
இன்னும் ஏன் அழுகின்றீர் என்று கேட்கும்
இழிவுணர்வை இத்தோடு நிறுத்திக் கொள்ளும்

2 மறுமொழிகள்:

said...

அன்புள்ள திரு. கண்ணன்:

ராஜீவ் காந்தியைப்பற்றி படித்ததும், உயிர்மையில் வெளிவந்த என் கட்டுரையை உங்கள் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று ஏனோ தோன்றியது. உங்கள் மின்னஞ்சல் முகவரி இல்லாததால் கீழே இணைத்திருக்கிறேன்.

பி.கு: Sorry, கட்டுரை நீளமானதால், அனுப்பமுடியவில்லை. முகவரி தந்தால், கட்டுரை அனுப்பிவைக்கிறேன். உங்களுக்குப்பிடிக்கும்

அன்புடன்,
பாரதி மணி
bharatimani90@gmail.com

ராஜீவ் காந்தியின் பொறுமை!

பாரதி மணி


1978ம் ஆண்டு. எமர்ஜென்ஸிக்குப்பிறகு நடந்த தேர்தலில் ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. அப்போதெல்லாம் பிஸினஸ் சம்பந்தமாக உலகம் சுற்றும் 40 வயது வாலிபனாக இருந்தேன். குளிர்காலம். ஃப்ராங்க்பர்ட்டிலிருந்து லுப்தான்ஸா விமானத்தில் தில்லி வந்து கொண்டிருந்தேன். வழியில் ரோம் விமான நிலையத்தில் முக்கால் மணிநேரம் நிற்கும். புகைபிடிப்பதற்காக Transit Lounge போய்விட்டு மறுபடியும் விமானத்தில் ஏறினேன். ரோமில் இறங்கும் பயணிகள் இறங்கி, தில்லிக்குச்செல்லும் புதுப்பயணிகள் ஏறியிருந்தார்கள். என் இருக்கைக்குப்போகும்போது, ராஜீவ் காந்தியும் ரோமிலிருந்து புதுப்பயணியாக ஏறியிருந்ததைப்பார்த்தேன். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சோனியா காந்தியும் குழந்தைகளும் (ஆம், அப்போது அவர்கள் குழந்தைகள்!) மிலான் அருகிலிருக்கும் அவர் சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள். அவர்களைப்பார்த்துவிட்டு தில்லி திரும்புகிறாரென்று நினைத்துக்கொண்டேன். அவரைத்தாண்டிச் செல்லும்போது புன்முறுவலால் வணக்கம் சொன்னேன். நீலநிற ஜீன்ஸ், ஸ்வெட்டர் போட்டிருந்தார். என் பாட்டி சொல்வதைப்போல 'ரோஸ்ஸாப்பூக்கலர்'! சிறிதுநேரம் கழித்து டாய்லெட் போகும்வழியில் அவர் என்னைக்கடந்து போகும்போது மெல்லிய புன்சிரிப்புடன் ஒரு சின்ன 'ஹலோ' சொன்னார். நான் ஒரு இந்தியன் என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது போலும்! நான் அவரிடம் வலியப்போய் பேச முயற்சிக்கவில்லை. அது எனக்கு எப்போதுமே கைவந்ததில்லை! அவர் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராவாரென்று அப்போது எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
***** **** ******

(கடைசிப்பாரா. இப்படி முடித்திருந்தேன்)

தன் ஓட்டை மோட்டார்பைக்கில் தப்பாக ஒன்வேயில் போய், போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்ட என்னைப் போன்ற பொதுஜனம், 'நான் யாரு தெரியுமில்லே, 17-வது வார்டு கௌன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா, எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா' என்று சொல்கிற இந்தக்காலத்தில், ஒரு வித்தியாசமான உண்மைக்காட்சிக்கு, நான் ஒரு சாட்சி!
bharatimani@yahoo.com

'உயிர்மை' பெப்ரவரி 2008 இதழில் வெளியானது.

*********************

said...

உண்மை,
ஒரே குரலை மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிக்க வைத்தால் போதும் என்ற மக்கள் நடுவே உங்கள் குரல் தனித்து நிற்கிறது.

அன்புடன்
ராமசந்திரன்