Friday, March 6, 2009

மறைந்து போவார்

கொடுப்பதில் மனங் கொண்டு சுகங் கண்டு கொடுப்பவர்
கொற்றவர் போல வாழ்வார்
கொள்கின்ற செல்வங்கள் கொடுப்பதற் கென்ற ஒரு
கொள்கையில் சிறந்து வெல்வார்
இருப்பது அனைத்தையும் தனக்கெனக் கொள்பவர்
இழிவதை ஏற்று வாழ்வார்
எப்போதும் பணமதே பெரிதென வாழ்வதால்
இருந்துமே மறைந்து போவார்


கொடுத்திங்கு வாழ்பவர் மறைந்த பின்னாலுமே
கோயிலைப் போல வாழ்வார்
கொண்டங்கு வாழ்பவர் அவர் தம்மைப் பற்றியே
கூட்டங்கள் தோறும் சொல்வார்
எடுப்பதே தொழிலென என்றைக்கும் வாழ்பவர்
இழி நிலை கொண்டு மாய்வார்
இருந்தாலும் செத்தாலும் அவர் நிலை ஒன்றுதான்
யார் இங்கு அவரை நினைவார்

0 மறுமொழிகள்: