Tuesday, May 13, 2008

வாழ்வோம்

       உன்னைப் போல்  பிறரையுமே  நேசி  என்ற
                ஒரு  வார்த்தை நல்  வார்த்தை மனதுக்குள்ளே
       மின்னலென வெட்டியது மழையும் கொட்டி
                மேன்மையுறச் செய்ததிந்த  மானிடத்தை
       தன்னை  முதல்  நேசிக்கக் கற்றுக் கொண்டால்
                 தரணியெல்லாம்  உறவாக்கிக்  கொள்வாரன்றோ
       அண்ணல்  அவர் வார்த்தையினைக் கொள்ளாரன்றோ
                 அன்றடித்தார் ஏசுவினைச் சிலுவை தன்னில்


       இன்னும்  அந்தச் சிலுவையினை  விட்டாரில்லை
                  எடுத்தெங்கும்  அலைகின்றார்  கைகளோடு
       தன்னுணர்வு  அற்றாராய் மனிதம் விட்டு
                   தடுமாறித் திரிகின்றார்  உலகமெங்கும்
       அன்னவரைக் கூட  நாம்  மன்னித்தேதான்
                   அரவணைக்க வேண்டும்  என்று அவரே  சொன்னார்
       மன்னவரின்  வழியினிலே  அன்பே செய்து
                    மரணமில்லாப் பெரு  வாழ்வு  வாழ்வோம்  என்றும்

0 மறுமொழிகள்: