Wednesday, May 21, 2008

கவலையிலும் அவன் ஞானி

               உரத்த  குரலெடுத்து  உண்மைகளைப்  பேசி  நின்ற
                          கருத்த  திரு மேனி  கவலையிலும்  அவன் ஞானி
               எடுத்த  கொள்கையிலே  இறுதி வரை  தன்  வாழ்வைக்
                          கொடுத்த  பெருந்தோழன்  கூறு  தமிழ்  நல்லாசான்
               அடுத்த  வேளைக் கென்றாரிடமும்   செல்லாது
                           படுத்தும் வறுமையிலும்  பாடி நின்ற  போர்க் கவிஞன்
                தொடுத்த  கவிதையெல்லாம்  தோழருக்காய்  என்றளித்து
                           மிடுக்கு  நிறைந்தானாய்  மீசையினை  முறுக்கி நின்றான்



                எடுத்துப்  பாரதியை  எங்கும்  அவன்  பேசையிலே
                            கருத்த  பாரதியாய்  கர்ஜனைகள்  செய்வான்  காண்
                 தொகுத்துக்  கம்பனது  தூய  தமிழ்  தூவையிலே
                            பழுத்த  தமிழறிஞர்  பாடி நிற்பார்  இவன் புகழை
                  கடுத்த  வறுமையினை  காரல்  மார்க்ஸ்  வழியினிலே
                            துடைத்து  எறிவதற்காய்த்  தோழர்  அவர்  வாழ்ந்தார் காண்
                  படித்த  பள்ளிகளோ  பாரதத்தின்  வீதிகளே
                             படைத்திங்கு  அளித்ததுவோ  பாட்டாளி  நீதிகளே

                  எழுத்ததனால்  காந்தியினை  இழுத்தான்  தனைக்  காண
                             பழுத்த  அவர்  இவனைத்தான்  பாரதத்தின்  சொத்து  என்றார்
                   தொடுக்கும் நல்ல  வாதத்தால்  எவரையுமே  தமதாக்கும்
                             தோழர்   இவர்  எனச் சொல்லி  பெரியாரும்  பூரித்தார்
                    அழுத்தமவர்  கொள்கையிலே  அன்போ  தம்  செய்கையிலே
                             வருத்தும்  வறுமையிலும்  வாழ்வாங்கு  வாழ்ந்த்தார்  காண்
                    தொடுத்து  இவர்  புகழைத்  தோழரெல்லாம்  பாடுங்கள்
                              தோழரென்றால்  ஜீவாதான்  என்று  எங்கும்  ஆடுங்கள்
                             

0 மறுமொழிகள்: