Monday, May 5, 2008

பழம் பாடல் புதுக் கவிதை கலிங்கத்துப் பரணி

     புகைப்படத்தில்  தகடுகளில் பிரிந்து போகும்
          பொன்னான  காதலனைப்  பதிந்து  கொண்டு
    வகைப் படுத்திப் பார்க்கின்றீர் நாள்  குறித்து
          வந்த செய்தி  நடந்த செய்தி  சேர்த்து வைப்பீர்
    திகைப்படைந்து  போவீர்  நீர்  அந்த்க் காலச்
          செந்தமிழர் பெண்ணார்  தம் திறனறிந்தால்
    தொகைப் படுத்திச் சொல்லுகின்றான் ஜெயங்கொண்டானும்
          தோகையவள் பெரும் பேற்றைச் செய்யுளாக


    படையெடுத்துப் போகின்றோம்  என்று சொல்ல
          பாவையிடம்  வந்து நின்றான்  இனிய சொல்லான்
    இடையெடுத்துத் தந்த  இரு போர் முனையில்
          இடுகின்றான்  நகங்களினால்  குறிகள் எங்கும்
    தடையின்றி  இரு  மார்பைத் தந்து  தந்து
          தகவலினைப்  பதிப்பதற்கு வழிகள் தந்தாள்
    விடை கொடுத்தாள் அவன்  சென்றான் மங்கை நல்லாள்
          விரகமதைத் தீர்க்க  அதை  வழியாய்க் கொண்டாள்


      வருவதற்கு  பல நாட்கள்  ஆகும்  என்றே
           வந்து சிலர் சேதி  சொல்லி நிற்கும் போதும்
     தருகின்ற அச்செய்தி   ம்ங்கை தானும்
           தடுமாற வழி வகுக்கும்  என நினைப்பார்
     சிறு இடையாள்  வருத்தமெதும்  கொள்ள மாட்டாள்
           சேமித்து வைத்த நகக்குறிகள் தன்னால்
     மறுபுறத்தில்  தனியாக  ஆடையின்றி
           மார்பகத்துக் குறிகளிலே மனம் கொள்வாளாம

     செல்வமில்லார் செல்வத்தைக் கண்டாற் போல
            சிறந்த  அந்தக் குறிகளிலே  செல்வம் காண்பாள்
     வல்லவனின்  நகங்கள்  இட்ட குறிகளெல்லாம் அவன்
           வடிவழகைக் கண்டு  கண்டு ஆடுவாளாம்
    சொல்லுகின்றான்  ஜெயங்கொண்டான் தேடிக் காண்பீர்
           சுகம்  சுகம்தான்  பரணியிலே  கடை திறப்பில்
    உள்ளுகின்றேன்  தமிழமுதை  உள்ளி உள்ளி
          உயிர்  கொண்டு  வாழ்கின்றேன்  உவகையோடு

     முலை மீது  கொழுநர் கை நக மேவு குறியை
     முன் செல்வம்  இல்லாத  அவர் பெற்ற பொருள் போல்
     கலை  நீவி  யாரேனும்  இல்லா இடத்தே
     கண்ணுற்று நெஞ்ச்ம்  களிப்பீர் கள் திறமின்

0 மறுமொழிகள்: