Sunday, May 25, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

               பார்க்க  வேண்டும்  என்று  நானா  பார்த்து  நின்றேன்
                        பாவி மகன்  வீதி  வழி வந்து விட்டான்
               ஆர்க்கின்ற  யானை  என்ன  வாங்கா  என்ன
                        ஆட வைக்கும்  மேளமென்ன  தாளமென்ன
               வார்த்தெடுத்த  வடிவழகு  மேனி என்ன
                         வாள்  என்ன  தோள்  என்ன  தாள் தான்  என்ன
                பேர்த்தெடுத்து  என்  மனதைக்  கொண்டு  போன
                          பேராண்மைப் பேரழகு  என்ன  என்ன


                போர்க்குணத்தான்  அவனிடத்தில்  செல்க  தோழி
                           போய்  என்ன  சொல்வதென்று  நானே  சொல்வேன்
                 கார்  குழலாள்  என்  தோழி  என்று  என்றன்
                            கனிப் பெயரைத்  தனிப் பெயரைச்  சொல்ல வேண்டாம்
                 பார்த்தென்னைப் பெற்றெடுத்து  இன்று வரை
                             பக்குவமாய்க்  காத்து நிற்கும்  தாயின் பேரை
                 சீர்  நிறைந்த  நம்  ஊரின்  பெயரையெல்லாம்
                             செப்புகின்ற  வேலையெல்லாம்  வேண்டாம்  தோழி


                 ஊரெல்லாம்  உறங்குகையில்  உறங்கவொண்ணா
                              உயிரொன்று  படும்  பாட்டைச் சொன்னால் போதும்
                 தார் மார்பைச்  சேர்ந்திருக்கும்  அந்த  மாலை
                               தான்  செய்த  பேறில்லாள்  கண்கள்  மட்டும்
                 நீர்  சோர அவன்  நினைவில்   நெஞ்சம்  சோர
                                நிலைகுலைந்து  நிற்பதனை  மட்டும்  சொல்லு
                 வார் குழலாள்  அரற்றுகின்றாள்  பாண்டியனின்
                                வரவிற்காய்  தோழி  என்ன  செய்வாள்  பாவம

                                                     முத்தொள்ளாயிரம்

                        என்னை  உரையல் என் பேருரையல்  ஊருரையல்
                        அன்னையும்  இன்னாள் என்ன  உரையல்-பின்னையும
                        தண்படா யானை  தமிழ்நர் பெருமாற்கு என்
                        கண் படாவாறே  உரை
  

2 மறுமொழிகள்:

said...

தானாரெனச் சொல்லாத தனிக்குணமே
தலைவனுக்குத் தானாரெனக் காட்டிடும்
என்கின்ற தைரியம் தனைக்கொண்டு
பெண்ணிவளும் படைக்கின்ற தனிச்சுவையைச்
சொல்லாலே வடித்திங்கு எமக்கிட்ட தமிழ்க்கடலே!
மேலும் பல படைத்திடவே காத்திருக்கிறேன் இங்கு!

said...

அன்பே வடிவான எங்கள் அய்யா
உங்கள்
அன்பன்றோ எனை எழுத வைக்குதிங்கு

கண்ணாகி என் அன்னைதமிழோ இங்கு

காப்பாற்றி நிற்கின்றாள் என்றும் என்னை

பண்ணான தமிழோடு வாழ என்றே

படைத்திட்டான் என் இறைவன் என்னை
நன்கு
உண்ணாமல் இருந்தாலும் தமிழை
மட்டும்
உரைக்காமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்

வாழ்க தமிழுடன் நன்றி
நெல்லைக்கண்ணன்