Monday, July 14, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   தீயென்றால் தொட்ட உடன் சுடும் என்று

          தீண்டி அதை உணர்ந்துள்ளோம் அனைவருமே

  மாயப் பெண் இவளிடத்தில் உள்ள தீயோ

         மாற்றங்கள் கொண்டதுவாய் இருப்பதென்ன

  தோய்ந்து அவளைத் துய்த்திருந்தேன் அப்போதெல்லாம்

        துடியிடையாள் தீயதனின் குளிர்ச்சி தேர்ந்தேன்

  போய் வரலாம் என்றே தான் பிரிந்தேன் தீ

       போட்டு என்னை வறுத்ததினை உணர்ந்தேன் வெந்தேன்

  பிரிகையிலே சுடுகின்ற இந்தத் தீயைப்

        பெண் மகளாள் பெற்றதிங்கு யாரிடத்தில்

  அறிவதற்கு முயல்கின்றேன் முடியவில்லை

        ஆனாலும் அனுபவித்தே மகிழ்கின்றேன் நான்

  துடியிடையைத் தொட்டவுடன் தீயைக் காணோம்

        தொட்டு உடன் விலகி நின்றால் குளிரைக் காணோம்

  அட அட இப் பெண்ணாளை அடைந்ததிலே

        அறிவியலின் தோல்வியினைக் கண்டேன் நானும்

                                           குறள்

   நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

  தீயாண்டுப் பெற்றாள் இவள்

1 மறுமொழிகள்:

said...

அருமை! அருமை! மிக அருமை!