Sunday, May 25, 2008

என் மகன்

        உலகெங்கும்  வாழுகின்ற  தமிழருக்கு   என்
                 உளங்  கொண்டு  வாழ வைக்கும்  தமிழாள்  தன்னை
        தினம்  கொண்டு  தருவதற்கு  வழிகள்  செய்த என்
                 திருமகனை  அறிமுகம்  தான்  செய்ய வேண்டும்
        முனம்  செய்த  நல் வினையே  இவனை  எந்தன்
                 முத்தமிழாள் மகனாகத் தந்து நின்றாள்
        மனம்  வாழ்த்தி  நிற்கிறது  சுந்தர ராமன்  என்னும்
                  மகன்  இவனை நீங்களும்தான்  வாழ்த்துங்களேன்


        புதுக்கோட்டை  நகருக்கு   சுழற்கழகப்
                 பொன் விழா  உரை  நிகழ்த்தச் சென்றிருந்தேன்
        எனைப்  பார்த்துக் கொள்ள   என்று  வந்த  இவன்
                  இன்று வரை  எனைப்  பார்த்துக் கொள்கின்றானே
         தினம்  உங்கள்   அனைவருக்கும்  கவிதை  தர
                  தேடி இந்த  வலைப் பூவை  உருவாக்கினான்
         குணம்  கொண்ட  என்  மகனை  நல்லவனைக்
                  கூடி நீங்கள் அனைவருமே  வாழ்த்த வேண்டும்
        

3 மறுமொழிகள்:

said...

ஐயா கண்ணன் அவர்களுக்கு,மகன் தந்தைக்காற்றும் உதவியை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
அன்பும் வாழ்த்தும்.

ஒரு சிறிய விண்ணப்பம்:இலக்கியங்களை,திறனாய்வுகளை இணையத்தில் எழுத்து வடிவிலோ,ஒலி வடிவிலோ தந்தால் உங்கள் வலைமனை டி.கே.சி.யுடையதைப் போல ஒரு இணைய வட்டத்தொட்டியாக மாறும் வாய்ப்பிருக்கிறது.அதை ஆர்வமுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.

கவிதைகள் மட்டுமே தந்தால் உங்கள் பக்கத்திற்கான படிப்பவர் ஆர்வம் நாளடைவில் குறைய வாய்ப்பிருக்கிறது.

தவறாக எண்ண மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

said...

தவறாக யாரையுமே எண்ண மாட்டேன்
தமிழாலே நான் பெற்ற நன்மை இது
அழகான சிந்தனையை தந்து நின்றீர்
அதை விரைவாய்த் தருகின்றேன்
நன்றி அய்யா
வாழ்க தமிழுடன்
தங்கள்
நெல்லைக்கண்ணன்

said...

பெற்ற மகனோ, பெறாது பெற்ற மகனோ
நற்றமிழை நாம் தினமும் வலையில் பெற உற்ற மகனோ
கற்றதெல்லாம் தினம் படைத்து கவின்சுவையை எமக்களித்து
சிற்றறிவைத் தூண்டிவிடும் சிந்தனைகள் நிதம் சொல்லி
உற்றவராய்ப் பலகாலம் இங்கிருப்பீர் என வாழ்த்துகிறேன்!
நன்றி. வணக்கம்.