Monday, May 26, 2008

திருக்குறள்

                 வள்ளுவரை  அடிக்கடி  நான்  சந்திக்கின்றேன்
                           வாய்ப்பதனை  நானே தான்  பெற்றும்  உள்ளேன்
                  உள்ளு தொறும்  உள்ளுதொறும்  உயர்வளிக்கும்
                            உண்மை வழி  அவர்தானே  காட்டி  நின்றார்
                  கள்ள மனம்  ஒழித்  தவர்தம்  முன்னால்  நின்றால்
                            கனி வழியாம்  தனி  வழியைக்  காட்டுவாரே
                  தெள்ளு  தமிழ்ப்  புலவோர்கள்  அனைவருக்கும்
                            தெளிந்த  வழி  காட்டியவர்  அவரே  தானே


                  உலகத்தில்  முதன்மை இடம்  யாருக்கென்று
                            உழன்ற  படி  வள்ளுவரின்  முன்னே நின்றேன்
                  சில  கற்றுப்  பல  கல்லாச் சிறுவன்  என்னைச்
                            சிரித்த படி  வரவேற்றார்  கேள்வி வைத்தேன்
                  பல  கற்று  உலகத்தை  வென்று  நின்ற
                            பண்டிதர்கள்  பலர்   உண்டு படையெடுத்து
                  உலகத்தை  தன்  குடைக் கீழ்  கொண்டு வந்த
                           ஒன்றிரண்டு  மன்னர்  உண்டு  மேலும் நல்ல


                  சிலை  வடிக்கும்  சிற்பி  உண்டு சிந்தனையால்
                           செம்மாந்து  நிற்கின்ற  கவிஞர்  உண்டு
                  விலையில்லாக்  கலைகள்  உண்டு  நாட்டையாளும்
                           வித்தகர்கள்  பல  பேர்கள்  உண்டு  உண்டு
                  நிலையில்லா  வாழ்விதனை  விட்டு  நீங்க
                           நினைக்கின்ற  துறவியரோ  நிறைய  உண்டு
                  கல  கலவென்றே  சிரித்து  அனைவரையும்
                           கையெடுத்து  ஆளுகின்ற  பெண்டிர்  உண்டு



                   இவர்களிலே  யார்  உயர்ந்தோர்  என்று  ஒரு
                            இடக்கு  மடக்கான  கேள்வி  கேட்டு  வைத்தேன்
                   அவர்  உடனே  வயற் காட்டைக்  காட்டி  நின்றார்
                            அங்கொருவர்  உழுது  நின்றார்  என்ன  என்றேன்
                   தவ  வேட  ஞானியரும்   கூட   இங்கே
                             தடம்  மாறிப்  போவார்கள்  உழவன்  மட்டும்
                   அவன்  கையை  மடக்கித்  தலைக்  கீழே  வைத்து
                             அப்படியே  படுத்து  விட்டால் ஒழிந்ததெல்லாம



                   துறந்து  விட்டோம்  என்பாரோ  துயில்  இழப்பார்
                              தொல் புகழின்  புலவோர்கள்  புகழ்  இழப்பார்
                    இறந்து  பட்டோர்  புகழினிலே  வாழ்வோரெல்லாம்
                               இரந்து  நிற்போர்  கூட்டத்தில்  இணைந்து நிற்பார்
                    பரந்து  பட்டுப்  பாராள்வோர்  பல்லிளிப்பார்
                               பாவியராய்  அனைவருமே  மாறி நிற்பார்
                    உழந்து  நிற்கும்  உழவன்  அவன்  இல்லையென்றால்
                                உலகம்  இல்லை  உயிர்கள் இல்லை  ஒன்றும் இல்லை


                                         குறள்

               உழவினார்  கைம்மடங்கின்  இல்லை  விழைவதூஉம்
               விட்டேம்  என்பார்க்கும்  நிலை
                   
                             

1 மறுமொழிகள்:

said...

உழவன் கைம்மடங்கின்
உலகமே அடி மடுங்குமெனச்
சொல்லிட்ட வள்ளுவனின்
கருத்தினைச் சொல்ல வந்து
கதையொன்றைச் சொல்லிவிட்டாய்!

ஒவ்வொரு குறளுக்கும்
கதையொன்று சொல்லலாமென
அன்று நீ தொலைக்காட்சியில்
சொல்லிவைத்த ஒரு கருத்து
இன்றிங்கே புரியுதைய்யா!