Monday, May 26, 2008

பழம் பாடல் புதுக்கவிதை முத்தொள்ளாயிரம்

                    நாணம்  வேண்டும்  வெட்கம்  வேண்டும்  நடக்கையிலே
                                 நன்னடையை மென்னடையைப்  பயிலல்  வேண்டும்
                    காண  வரும்  அனைவருமே  ஆகா  என்று
                                 கண்மணி யுன்  நடையழகைப்  புகழல்  வேண்டும
                    பேணி  இந்த  வழியனைத்தும்   கொண்டால் தானே
                                 பெண்ணென்று கொள்வார்கள்  இல்லை யென்றால்
                     சாணி  கரைத்தூற்றினாற்  போல்  உன்னை  யிங்கு
                                  சாடை  மாடை  பேசுவார்கள்  புரிகி்றதா


                     பையப் பைய  நடந்து  வந்தால்  தானே
                                   பார்ப்பவர்கள்  உன்னழகைப்  போற்றுவார்கள்
                     கையெடுத்து  உயர்த்தி  ஒரு  வாழ்த்துச்  சொல்லி
                                   காலெடுத்து  மெல்ல  நீயும்  நடந்தால் தானே
                      ஐயன்  எங்கள்  பாண்டியனின்  அழகை யெல்லாம்
                                    ஆராதனை  செய்து   மனதில்  கொள்வோம
                      மெய்யழகே  மெல்ல  நட  பெண்மை  போற்று
                                     மேதினியில்  யானைகளில்  பெண்  நீயேதான்



                     பெண்  யானை பாண்டியனைச் சுமந்து  வரப்
                                    பேசுகின்றாள்  பெண்ணவளும்    அவனைக்  காண
                      கண்  மலர்ந்து  கதவருகே  காத்திருக்க
                                     கட  கடவென்றே  அதுவும்  நடந்து  போனால்
                      என் செய்வாள்  பெண்ணவளும்  அதனாலே  தான்
                                     எப்படி  ஒரு  பெண்  நடக்க  வேண்டுமென்று
                      தன்னுணர்வை யெல்லாம்  அந்த  யானையிடம்
                                     தளிர்க் கொடியாள்  போதித்து  நிற்றல்  கண்டோம்
                                     


                                                            முத்தொள்ளாயிரம்

                         எலா அ  மடப் பிடியே  எங்கூடல்க்  கோமான்
                         புலா அல்  நெடு நல்  வேல்  மாறன்    -  உலாங்கால்
                         பைய  நடக்கவும்  தேற்றாயால்  நின் பெண்மை
                         ஐயப்  படுவது உடைத்து

1 மறுமொழிகள்:

said...

தன் மன்னன் அழகு காண
தையலிவள் வேண்டுகின்றாள்

பெண்யானை நடைபழக
புத்திமதி சொல்லுகின்றாள்

கண்பார்க்கத் தான் வேண்டி
களிற்றினையே சீண்டுகின்றாள்

என்னே இவள் மதியூகம்
தமிழ்க்கடலைப் பேச வைத்தாள்!